22 Feb 2017

பசும்புகை,,,,,/

நான்முனியசாமி,நான் ஒரு தனியார் துறை அலுவலகத்தில் பணி புரிகிறேன். நான் பணிபுரிகிற அலுவலகத்தின் கிளைகள் நமது மாவட்டத்திலேயே பத்திற்க்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கின்றன.வளர்ந்து பூத்து காய்த்த மரம் தனது கிளைகளை அளவாக விரித்திருப்பது போல/

இதில் பூவுக்கு ஒரு மணம்,காய்க்கு ஒரு மணம்,இலைக்கு ஒரு மணம் இவை தாங்கி விரிந்திருக்கிற கிளைகளுக்கு ஒரு மணம்,

மணத்தில் இவைகளே இத்தனை காண்பிக்கிற பொழுது இவைகளை தன்ன கத்தேஅடைகொண்டிருக்கிறவேருக்கு தனி மணமும் கெட்டிசமும் இருக்கும் தானே,,,,?இருக்கிறது,

இருந்தது,கிழக்குமேற்கு,,,,,,,,,என்கிறதொடர்ச்சியான தன் திசையில் பிடிவாதம் காட்டி எத்திசையானாலும் காலூன்றி நின்று விட்ட மரம் துளிர்த்து வளர்ந்து கிளைபரப்பி பூக்களையும் பிஞ்சுகளையும் காய்களையும் கனிகளையு மாய் தந்து பலனாகி நிற்பது போல காட்சி தந்து நிற்கிற உயிர் நிறுவனங்களுள் ஒன்றாய் எமது நிறுவனம் என்றால் மிகையில்லை.

என்ன இல்லை என்கிறீர்கள் எமது நிறுவனத்தில்,,,,,,?பொது மக்களுக்கான சேமிப்பு குறைந்த வட்டியில் வழங்கப்படுகிற கடன்,வைப்பு நிதி பெட்டக வசதி,,,,,என எக்ஸட்ரா எக்ஸட்ராவாய் எல்லாம் சுமந்து தன் நலம் பாராது பொதுமக்களுக்காய் உழைத்துக் கொண்டிருக்கிற நிறுவனம் என்னையும் ஊழியனாய் தக்க வைத்துக் கொண்டுமாதச்சம்பளம் வழங்கிக்கொண்டிருக் கிறது.

அந்தச்சம்பளத்திலிருந்துதான் தங்களது ஆயுள் காப்பீட்டுநிறுவனத்தில் பாலிசி எடுத்துஅதைசேமிப்பாகமாதச்சம்பளத்தின்மூலம்பிடிதரம்செய்யவைத்திருந்தேன்.

ஒரு பாலிசி அல்ல,இரண்டு பாலிசி அல்ல மொத்தம் ஆறு பாலிசிகள் எடுத்தி ருக்கிறேன்.அதில் நான்கின் பத்திரத்தை அடகு வைத்து தங்களது நிறுவனத் தில் கடனும் வாங்கியிருக்கிறேன்.

அரண்மனைக்கு ஆயிரம் பாடு என்பது போல மாதச்சம்பளம் வாங்குகிற மத்திய தர வர்க்கத்தினருக்கு இருக்கிற செலவுகளும்,போக்குவரத்துகளும் சொல்லி மாளுவதில்லை எளிதில்/அந்த மாளாததின் ஒரு பகுதியாய் ஏறி விட்ட தேவைக்கான செலவை சமாளிக்க தங்களது நிறுவனம்தான் அந்நேரம் மானம் காத்து கை கொடுத்ததாக/

கொடுத்த கையின் ஈரமும் ,அதன் வடுவும் காய்ந்து போனாலும் அதன் நினைவுகள் மட்டும் இன்றும் அப்படியே மனம் நிரம்பிப்போய் இருப்பதாக/

இன்னும் இன்னுமாய் அப்படியே இருக்கிற துளிர்விட்ட நினைவுகளின் கை பிடித்துகொண்டிருந்தவேளையில்தான்தங்களதுநிறுவனத்திலிருந்துஒற்றைக் குரல் தாங்கிய ஒரு போன்.

“சார் காப்பீட்டு நிறுவன மேலாளர் பேசுகிறேன்,தங்களது பாலிசி ஒன்று முடிந்து விட்டது.முடிந்து விட்ட பாலிசியின் பணத்தை தங்களுக்கு அனுப்ப வேண்டி தங்களது வங்கிக்கணக்கு மற்றும் இதர விபரங்கள் உடனடியாகத் தேவை எடுத்து அனுப்பவும்” எனக்கூறி போனை வைத்து விடுகிறீர்கள்.நானும் ”சரி சார்,மேற் கூறிய விபரங்களை கூறியமைக்கு நன்றி இதோ உடனே அனுப்பிவிடுகிறேன் சார்,”,,,,எனகூறிவனாய் முடித்துக் கொள்கிறேன் பேச்சை/

நன்றல்ல நன்றன்று,நன்றானவைகள் நன்றாகவே என்கிற கூற்று நன்றித் தனத்துடன்,,/

நீங்கள் முடிந்ததாய் சொல்லிய பாலிசியை முதன் முதலாக எடுத்த போது நான் கமுதியில் வேலை பார்த்தேன்.

கண் முழியாத கோழிக்குஞ்சாய் அப்பொழுது எங்கள் நிறுவனத்தின் அந்த ஊர்க்கிளையில்போய் பணிக்குச்சேர்கிறேன்.

பணிக்கு சேர்கிற அன்று வேஷ்டிதான் கட்டிக் கொண்டு சென்றேன். ஏனென் றால் எனக்கு பேண்ட் போடத்தெரியாது.அது நாள்வரை எனக்கு பேண்ட் சொந் தமாகி இருக்கவில்லை.

“கண்ணைதிற என்று சொன்னால் வாயைதிறக்கிற”,,,,, அளவிற்கேயான விபரம் தெரிந்த ஒரு கிராமத்து அப்பாவி விவசாயக்கூலியான எனக்கு அது நாள் வரை சொந்தமாகியிருந்ததது இடுப்புப்பட்டியில் அழுக்கேறிப்போன இரண்டு சிவப்புடவுசரும், ஒரு காக்கிக்கலர் டவுசரும் இரண்டுநூல்துண்டுகள் மட்டுமே/ சட்டை என உருப்படியாய் எதுவும் கிடையாது.

இப்படியானநாளில்தான்பணிக்குச்செல்லஅழைப்பு வருகிறதுதபாலில்/ வந்தது தபாலா அல்லது எனது சகோதரி எனக்களித்த உயர் ரக பணிப் பிச்சையா என்பது இந்தக்கணம் வரையிலுமாய் புடிபடாத புதிராக,,,/

வந்து விட்டது தபால்,பணி இந்த ஊரில்,இன்ன நேரம், இன்ன தேதியில் அங்கிருக்க வேண்டும் நீ,,..,,, என பணி உத்தரவு சுமந்து வந்த கடிதத்திற்கு பணிவுகாட்டி செல்ல வேண்டும் இரண்டு நாட்கள் கழித்து என்கிற நிலை வருகிற போது நாளெல்லாம் தன் மென்னி நோக குடும்ப பாரத்தை தன் தலை மீதிருந்து இறக்கி வைக்காமல் சுமந்த எனது தாய் எனக்கு எடுத்துத் தந்த இரண்டு ஜோடி வேஷ்டி சட்டைகளில் ஒற்றை ஜோடியை எடுத்து என் மேனி போர்த்திச் செல்கிறேன்.

அப்பொழுதெல்லாம் தழையத்தழைய வேஷ்டி கட்டியோ முழுக்கை அரைக் கை அல்லது டீசர்ட் இன்னும் இத்தியாதி இத்தி யாதியானரகங்களில் சட்டை போடுகிற பழக்கமற்றவனாய் நானும் ஆகித் தெரிகிறேன்.

இப்பொழுது போல தலைகீழாக பேண்ட சட்டைகளை அணிந்து கொள்கிற பழக்கம் கொண்டவனாக அப்பொழுது இல்லை,

ஏ வி பீ ஸ்டோர் ஸிலும் திருப்பதி ரெடிமேட்ஸிலுமாய் மாறி மாறி எடுத்த ஆடைகள் என்னை அலங்கரிக்கவும் என் உடல் போர்த்திக்கொள்ளவுமாய் உதவுகின்றன.

அப்படி இன்று உதவுகின்ற ஆடைகள் போல் அன்று என்னிடம் இல்லை.அது போல் கேட்டறிந்தவனாயும் இல்லை.

அப்படியான அப்பிராணியாய் ஒரு வேஷ்டி சட்டையுடன் போய் இறங்கிய என்னை அந்நிறுவனம் எப்படி பணிக்கு இழுத்துக் கொண்டதோ அது போல அந் நிறுவனத்தில் பணிபுரிந்த எம்மார்பி சார்,அழகர் சார்,,,,,,,உட்பட ஆறு பேர் தங்கியிருந்த அறையும் என்னை தக்கவைத்துக் கொள்ளவும் தங்க வைத்துக் கொள்ளவுமாய் செய்கிறது.

வேலை வேலை வேலை,,,,,,என்கிற சுழற்சி முடிவுற்று சாப்பாடு தங்கல் என வருகிற சமயங்களில் நாங்கள் தங்கியிருக்கிற ரூம்தான் என்னை அடை கொண்டு காத்து நின்றது.

அது போலாய் காத்தலின் ரகசியங்களை தன்னுள்ளே அடைகாத்து வைத்துக் கொண்டும்,என்மேல்பிரியம் கொண்ட அண்ணன் எம்மார்பிஎன்னும் அட்சரத் தின் அருகில் ஒட்டிக்கொண்டுமாய் இருந்த நாட்களில் எனக்கு அறிமுகமான நண்பராய் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ராஜேந்திரன் இருக்கிறார்.(பொதுவாகவே ராஜேந்திரன் என்கிற பெயருக்கும் இது போலான பணிகளுக்கும் ஏதேனுமாய் ஒற்றுமை உண்டுதான் போலும்.இன்சூரன்ஸ் ராஜேந்திரன்,பால்பண்ணை ராஜேந்திரன்,பீடிக்கடை ராஜேந்திரன்,நியூஸ் பேப்பர் போடுகிற ராஜேந்திரன்,,,, ,,,,,,என ராஜேந்திரன்களை சுமந்த பொழுதுகளின் நகர்வது,,)

அவர்தான் சொல்கிறார் ,ஒரு சிக்கனமான திட்டத்தின் முன் வரைவை என் முன்பாக வைத்தும்படம்வரைந்துமாய்,,/அதற்குஉடன்எம்மார்ப்பிஅண்ணனை சேர்த்துக் கொண்டுமாய்/

‘நீங்கள் வாங்குகிற தினசரி ஊதியத்திற்கு ஏற்றார்போல் ஒரு இன்ஸூரன்ஸ் பாலிசி ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்,மாதாமாதம் வெறும் இருபத்தைந்து ரூபாய் கட்டினால் போதும்,நீங்கள் மாதக் கடைசியில் சம்பளமாய் வாங்கப் போகிற மொத்தத்தொகையில் நீங்கள் கட்டப்போகிற இருபத்து ஐந்து ரூபாய் என்பது சிறிய அளவே,கடலில் கரைத்த அளவுகூட அல்ல,ஒருசிறு டபராவில் கிள்ளிப்போட்ட பெருங்காயத்தின் அளவே/ கட்டுங்கள், பிரயோஜனப்படும் பின்னாளில்,,,,,,,” என அவர் அன்று சொல்லிகையெழுத்திட்டுக் கொடுத்த அந்த பாலிசிதான் இப்போதைக்கு முடிவடைவதாய் பட்டுத் தெரிகிறது.

அப்படி கையெழுத்து வாங்கிய அவர் என்னிடம் கேட்டு வாங்கிய விபரங்கள் தவிர்த்து ரிக்காடாய் வேண்டும் சில விஷயங்கள் என கேட்டு அது அந்நேரம் கைவசம் இல்லாமல் போக அவரே எனது சொந்த ஊரையும் அதன் உள் விலாசத்தையும் கேட்டுத்தெரிந்து கொண்டு எனது கிராமத்திற்கே போய் வாங்கி வந்துவிட்டார்.

அப்படியாய் அவர் போய் வாங்கி வந்த தினத்திலிருந்து மூன்று தினங்கள் வரை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்,”ஊரின் வயல் வெளிகளையும் அதன் மீதாய் நிரம்பி பாவித்தெரிந்த பச்சைபசேல் காட்டிய நெற்பயிரையும், அதை ஒட்டித்தெரிந்த பெரிய பரப்பளவிலான கண்மாயையும் இது நாள்வரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன்,இப்பொழுது நேரில் பார்த்த வியப்பு விலகாமல் இன்னும் இருக்கிறேன்” என பேசிக்கொண்டே இருந்தார் வாய் ஓயாமலும் தண்ணீர் குடிக்காமலும்/

அப்படியாய் அவர் அன்று படம் வரைந்து விளக்கிக்கூறி வாங்கிய பாலிசிதான் இன்று முடிவடைந்ததாக தாங்கள் கூறியதன் மூலமாய் அறிகிறேன்.

அதுமட்டுமல்ல,அந்த அறிதலுக்கு நன்றிக்கடன்பட்டவனாயும் ஆகிக்கொண்டு முனிசாமி ஆகிய நான் தாங்கள் கேட்ட விபரங்களை தங்களது நிறுவனத்திற் கு அனுப்புகிறேன்,



நன்றி வணக்கம்,

                                                                     இப்படிக்கு என்றென்றும் அன்பு மறவாத,,,,,,,,,,

                                                                     முனியசாமி ,எஸ்

2 comments: