11 May 2019

கொடி படர் வேளைகளில்,,,,,

வீட்டில் எடுத்த தாகத்திற்கு பேருந்து நிறுத்ததில் வந்துதான் தண்ணீர் குடிப்ப தாய் ஆகிப் போகிறது.

தண்ணீர் குடிப்பதற்குள் பேருந்து வந்து விட்டால்,,?

இந்த யோசனை கடந்த வாரத்தின் கடைசி நாளன்று வரவில்லை.

நல்ல வெயில் அடித்தகாலைநேரம்,காலை எட்டரை மணிப்பொழுதிற்கெல் லாம் வெயில் இப்படி சுள்ளிட்டால் மாலை கவிழ்வதற்குள் அதன் உக்கிரம் தொடுகிற எல்லை,,,,?யே யப்பா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது,

இப்பவே இரவு தூங்க முடியவில்லை,படுத்தி எடுக்கிறது.வேர்க்கிற உடலி லிருந்து வழிகிற நீர் வரிக்கோடுகள் படுத்திருக்கிற பாய்க்கும் முதுகிற்கும் இடையில் பிசுபிசுப்புக்காட்டும் ஒரு அடுக்காய் பிடிவாதம் காட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறது,

இரவு தூக்கம் வரவில்லை,என்னதான் மின்விசிறி சுற்றினாலும் கூட சிறிது நேரத்தில் கட்டிடம் அடுப்புக்குள் இருப்பது போல் ஆகித்தெரிகிறது,

கட்டிடத்தின் வெக்கை படுத்துக்கொண்டிருக்கிறவர்களை எழுந்து அமரச்செ ய்து விடுகிறது தூங்க விடாமல்.

உட்கார்ந்து கொண்டும்,அரை குறையாய் படுத்தும் தூங்கிக்கொள்கிற தூக்கம் காலையில்சீக்கிரம் விழிக்கச்செய்து விடுகிறது. சமயத்தில் அதிகாலை மூணு மணிக்கெல்லாம் கூட/,,,,,என தினமும் அனுபவிக்கிற நிலையை நினைத்துக் கொண்டுதான் பஸ்ஸேறப் போகிறான்.

காலைநேர அவசரம்.பரபரப்பு இன்னும் இன்னுமான எக்ஸட்ரா,எக்ஸட்ராக்க ளை உடையணிவது போலவே அணிந்து கொண்டு பேருந்து நிறுத்தத்தில் போய் நின்றபோது இந்த யோசனை வரவில்லை,

தண்ணீர் தாகம் நாக்கை வரட்டியது,”சோறுதான் சாப்புடல கொஞ்சம் தண்ணியாவது குடிச்சிட்டுப் போங்க,”என்ற மனைவியின்பேச்சை ”பஸ்ஸீக்கு நேரமாச்சி” என்கிற ஒற்றைச் சொல் மூலம் தட்டிவிட்டிவிட்டு அவசரம் காட்டி வந்திருந்தான்,

காலை நேரத்தில்சாப்பிட்டு மாதங்கள் பலவாகிவிட்டது,

இன்னதென்கிற காரணங்களெல்லாம் இல்லை பெரிதாக,ஒன்று வேலை நாட்களில் சாப்பிட நேரமிருப்பதில்லை, லீவு நாட்களில் என்றால் தாமதமாக எழுந்திருப்பதால் ஒரு டீ வடையோடு நிறுத்திக்கொள்வான்,மீறி சாப்பிட்டால் மதியம்சாப்பிடமுடிவதில்லை,மனைவியின்பேச்சைக்கேட்டுவீட்டில்தண்ணீராவதுகுடித்துக்கொண்டு வந்திருக்கலாம்,மண்பானைத் தண்ணீர் கொஞ்சம் ஜில்லென இருக்கும், தொண்டைக்கு இதமாகவும் இருந்திருக்கும், தாகமும் கொஞ்சம் மட்டுப்பட்டி ருக்கும்.

வரட்டிய தண்ணீர் தாகம் பஸ்வந்து விடுமே என்கிற எண்ணத்தை கீழே தட்டி விட்டு விடுகிறது,

கல்யாண மண்டப பஸ்டாப்,அடுத்ததாய் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் பஸ்டாப், அதற்கடுத்ததாய் இவன் நிற்கிற பஸ்டாப்,,,,,, எனகடந்து வருகிற வேளைக்குள்ளாய் வருகிற பஸ் இதுதான் என்பதை உறுதி செய்து கொள்ள பஸ்டாப்பில் நின்றவாறே பார்வையை நீட்டுவான்,

நீள் கொண்ட பார்வை விழி கழண்டு தரை படர்ந்து பாவிப் பரவியும் வெள் ளைக் கலரில் பூக்கள் விரித்து சுகந்தம் வீசும் பஸ்தான் வருகிறது என்பதை உறுதி செய்து கொண்டு திரும்பவுமாய் இவனில் ஓடோடி வந்து இவன் தோள் படர்ந்து ஒட்டிக்கொண்டு காதுக்கு வலிக்காமல் தகவல் சொல்லி விட்டுச் செல்லும்,

தகவல் சொன்ன இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து விடுகிற பஸ்ஸில் இவன் ஏறிச்செல்வதுதான் அன்றாடங்களில் வாடிக்கை.

ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை, விழிகழண்டு ஓட பார்வையை இவன் அனுப்பவும் இல்லை,அது போய் எட்டிப் பார்த்து விட்டு வந்து இவனிடம் தூது சொல்லவும் இல்லை,அதற்கு நேரமும் இல்லை,

மாறாக வீட்டிலிருந்து வந்து நின்றதுமாய் எடுத்த நா வரட்சி பஸ் வந்து விடுமே என்கிறதை நினைக்க விடாமல் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க வைத்து விடுகிறது.

பாட்டிலை திறந்து வாயில் தண்ணீரை குடிக்கப்போகிற நேரமாய் பஸ் வந்து விடுகிறது இவன் நிற்கிற இடத்திற்கு நேராய்,,,/

பதட்டத்தில் பாட்டிலில் இருந்த தண்ணீர் மொத்தமாக வாயில் விழுந்து விட விழுந்த தண்ணீர் இவனது முகம் முழுவதுமாய் பரவிப்பாவி மூக்கில் ஏறி புறையேறிவிடுகிறது,

ஏறிய புறை தொண்டையை அடைத்தும் மாறி மாறி வந்த இருமலும் செருமலும் கண்ணில் நீரை வரவழைக்க லேசாக முட்டிய மூச்சு கொஞ்சமா ய் திக்கு முக்காட வைத்து தரையில் அமரச்செய்து விடுகிறது.

இவன் பஸ்ஸில் ஏறாததை உறுதி செய்து கொண்டு பஸ்ஸை கிளப்ப விசில் ஊதிய கண்டக்டர் மறு விசில் கொடுத்து பஸ்ஸை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி வந்து நெஞ்சை நீவி விட்டு விட்டு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்கச் செய்து தன் தோள்சாய்த்தணைத்து கூட்டிக்கொண்டு போய் பஸ்ஸி ல் ஏற்றினார்,

ஏன் சார் இவ்வளவு அவசரப்பட்டு தண்ணி குடிக்காட்டி என்ன,,,?பஸ்ஸீல ஏறீட்டு குடிக்க வேண்டியதுதான,,?என்றவரை ஏறிட்டவன் செருமலும் இருமலும் குறைந்து கண்களில் கட்டிய நீர் நின்ற போது தனக்காய் எழுந்து இடம் கொடுத்தவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவரை அவ்விடத்தில் அமரச் செய்து விட்டு பின் புறபடிக்கட்டின் ஓரம் நின்று காற்று வாங்கியவனாய் சொல்கிறான்.

“எங்கண்ணே ஒங்க பஸ்ஸில நின்னுக்கிட்டு போயி ஊரு சேருறதே பெரும் பாடா இருக்கு,இதுல எங்கிட்டு பஸ்ஸுக்குள்ள வந்து தண்ணி குடிக்க,,,,,,,? நான் கூட மொதல்ல அப்பிடித்தான் நினைச்சேன்,பஸ்ஸீல ஏறுனதுக்கப்புறம் தண்ணி குடிச்சிக்கலாமுன்னு,ஆனா இந்த நெனைப்பு எனக்கு வந்தப்ப பஸ்ஸீ வந்துக்கிட்டு இருந்தத கவனிக்க விட்டிட்டேன்.அதுக்குள்ள நீங்க வரவும் எனக்கு பதட்டமாகிப்போச்சி/அதுக்கப்புறம்நடந்ததெல்லாம்நீங்கபாத்ததுதான,,,?

“உள்ள படிக்குமே பெரிய மனசுதான் ஒங்களுக்கு,பஸ்டயம்,பிக்கப்பு படிக் காசு,,,ன்னு பாக்காம எனக்காக யெறங்கி வந்து வேலை செஞ்சீங்களே, அது பெரிய விஷயமில்லையா,,,,

“நீங்க அந்த நேரத்துக்கு ஓடி வரலைன்னாக்கூட அங்க ஏன்னு கேக்க ஆளு இல்லைண்ணே,,,,,சுத்தி அத்தனி பேரு பொழங்கிகிட்டு இருக்குற அவ்வளவு பிஸியான ஏரியாவுல,,,,,அதான் அதச்செய்யவும் ஒரு மனசு வேண்டியதிரு க்கு, அது ஒங்க கிட்ட இருக்கு,,,,”என இவன் சொன்னதும் கண்டக்டர் கொஞ் சமாய் வெக்கப்பட்டுக் கொண்டார்,

”இருக்கட்டும் சார்,இன்னைக்கி ஒங்களுக்கு நான் செஞ்சா நாளைக்கி எனக்கு யாராவது மொகம் தெரியாத ஆளு ஒதவுவாங்க,ஏன்னா நாங்க பாக்குற மோட்டார் தொழில் அப்பிடி, விதி வசத்துக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை எனச் சொல்லி விட்டு சப்தமாகச் சிரித்தார்,கூடவே பஸ்ஸினுள் ஒலித்த இளைய ராஜா அவர்களின் பாடல்களும்,,.,,,,,/

ஒர்க் ஷாப்பின் முன்னால் இருந்த வெளியில் வேப்பமரத்தடியில் நின்றிருந் தான்,பரந்து விரிந்த மரத்தின் கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்களும் அவ்விடத்தை பூக்கச்செய்வதாய் காட்சி கொண்டிருந்தது,

“இந்த வேப்ப மரம் எப்படி இந்த இடத்தில் முளை கொண்டிருக்கும்,யார் வந்து நட்டிருப்பார்கள் இதை.இங்கு காணப்படுகிற நூற்றுக்கு எண்பது வேப்ப மரங் கள் யாரும் நடப்படாமல் தானாய் சுயம் கொண்டு வளர்ந்தவைதானே,,? அந்த எண்பதையும் முளைக்கச்செய்ய விதைகளை நட்டு வைத்த கை யாருட யதாய் இருக்கும்,அந்த விதையை கொண்டு வந்தது யாருடைய வேலையாக இருக்கும்,அது எப்படி இவ்விடம் கண்டு வந்து விழுந்து துளிர் கொண்டு செடியாகி மரமாகி விருட்சம் கொண்டு நிற்கிறதே,,,இந்த மாயம் நிகழ்ந்த கனமும் இதை நிகழ்த்தியது யாராக இருக்கும் எனவும் சொல்ல முடியுமா இப்பொழுது,,,,,?”எனக்கேட்கஆளில்லாமல்தயங்கிநின்றபோது இவனை மனம் படாமல் உரசிச்சென்ற ஒரு அசரீரி ஒன்று சொல்லிவிட்டுச் செல்கிறது,

”கேட்கஆளில்லாமல் வெற்று வெளியில் சுற்றித்திரிந்த கேள்விகளை தானாய் முன் வந்து கேட்க நினைக்கிற தங்களுக்கு காற்றின் திசையிலும் அதை எதிர்த் துமாய்வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பறவைகள் தங்களது எச்சத்தின் மூலம்போட்டவிதைகளின்மூலமாய் முளைத்த மரமன்றி வேறெதாய் இருக்க முடியும் இவைகளெல்லாம் எனச் சொல்லி விட்டுச் சென்ற அசரீரியின் பேச்சு கேட்டு வியந்தவனாய் உறைகொள்கிறான்,

சின்ன மகள்தான் கொண்டு வந்து விட்டாள். கைவசம் இருக்கிற இரு சக்கர வாகனத்தில்,

நட்டுவைத்த பூச்செடி ஒன்று இரண்டு கிலோ மீட்டர்கள் நகன்று வந்தது போல,,,/

எப்பொழுதும் அவள் ஓட்டி வர இவன் பின்னமர்ந்து வருவான்,

இன்று இவன்தான் ஓட்டி வந்தான் எதுக்கு ”ஏங்கிட்ட குடுக்க மாட்டேங்கிறீங்க வண்டிய” என்றவளை ஏறிட்டவன் ,அதுக்கில்லப்பா,இந்த மாதிரி வேளைகள் ல நான் வண்டி ஓட்டுனாத்தான் உண்டு,வேற எப்ப ஓட்டப்போறேன், தவிர வர வர நீ வண்டிய வேகமா ஓட்டுற ,நேத்திக்கி மொதநாளு கொஞ்சம் சுதாரிக் காட்டி எதுத்தாப்புல வந்த லாரி மேல இடிச்சிருக்கும், இல்லை ஒதுங்கி கீழ விழுந்துருப்பம்,கேட்டா ரோட்டுல போற வர்றவுங்க ஒதுங்கிப் போக மாட்டே ங்குறாங்கன்ற,,,,அவுங்க அப்பிடிப்போறாங்கங்குறதுக்காக நாமளும் அப்பிடி வந்தா எப்பிடி,,,? என்கிற பேச்சின் நகர்வினூடே பேருந்து நிறுத்தத்தில் கொ ண்டு வந்து விட்டு விட்டுப் போனாள்,

வண்டியையும் மாற்ற வேண்டும்,கொஞ்சம் வசதியாய் ஸ்கூட்டி அல்லது பெரிய வண்டி வாங்கிக் கொள் ளலாம் என்கிற நினைப்பு தலை தூக்குறது அவ்வப்போது,,,/

இத்துப்போன சைக்கிள் என்றாலும் கூட அதை சரி செய்து,சரி செய்து சக்கட் டான்,சக்கட்டான் என ஓட்டித் திரிந்த நேரங்கள் போய் இப்பொழுது நினைத்த நேரத்தில் புது இரு சக்கர வாகனம் வாங்கி விட முடிகிறது,

அது போக இரு சக்கர வாகனம் வாங்கினால் தேவலாம் என்கிற நினைப்பு மனதில்குடிகொண்டமறுநிமிடம்வீட்டுவாசலில்ஷோரூம்காரர்கள்வண்டியைக்
கொண்டு வந்து நிறுத்தி விட்டு போய் விடுகிறார்கள்,

ஒரு பொருள் வாங்குவதை அவ்வளவு இலகு பண்ணி விட்டும் தவணை முறையில் தந்து விட்டுமாய் போய் விடுகிறார்கள்.

பின் என்ன சிரமம் இருக்கப்போகிறது, வாங்கிப் போடலாம்தான்,,,,என்கிற நினைப்பிற்கு தகுந்தாற்ப்போல் வண்டியில் பழுது ஏற்படுகிற நேரங்களிலெல் லாம் வண்டியை மாற்றி விடுவது உசிதம் என நினைக்கிறான்.அதையே வீடும் முன் மொழிகிறது.குறிப்பாக சின்னவள் பேருந்து நிறுத்தம் வரை வருகிற நாட்களிலெல்லாம் இவனில் அந்த நம்பிக்கை நாற்றை நட்டு விடு கிறாள்.

கல்லூரியின் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கிறாள்.அடுத்த ஆண்டு என்ன செய்வது படிப்பை முடித்து விட்டு ஏதேனுமாய் வேலைக்குச்செல்வதா, இல் லை மேற்படிப்பை தொடர்வதா என மனதில் மையமிட்ட புள்ளியைச் சுற்றி கோலமிடுவதா,இல்லை அதையே புள்ளியாக்கி விடுவதா என்கிற சின்னதான முடிவில்லா ஒரு விசாரணை வளையத்திற்குள்ளாய் இருந்தாலும் கூட எதற்கும் இருக்கட்டுமே என இரண்டு மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கலாம் என திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள்,,

தீட்டிய திட்டத்தின் கூர் முனை எவ்வளவு தூரத்திற்கு ஆழபாயும் என்பதை இனி வருகிற நாட்களே முடிவு செய்யும் ,கொஞ்சம் மாடர்னாக இருக்க வேண்டும் என்கிற ஆசையை மனம் தேக்கி வைத்திருப்பவள்.

அது அவள் மட்டும் வைத்து அடை காத்துக்கொண்டிருக்கிற ஆசையா என்ன, அவள் வயது பிள்ளைகளில் பாதிக்கும் மேலானோர் இப்படித்தானே இருக்கி றார்கள்,

தவிர இப்பொழுது பிள்ளைகளை வீடுகள் வளர்ப்பதில்லையே, வெளிச் சூழல் தானே வளர்க்கிறது,அதன் படி அவளும் ஆசை கொள்கிறாள் அதில் என்ன ஆச்சரியம் இருந்து விட முடியும் பெரிதாய்,,,/

வீடும் உறவும் உணவு கொள்ளவும்,உடை தரவும்,தங்குவதற்குமான இடம் தரவுமாய்இருக்கிறது,பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் அதன் உறுத்து மிகு காவலர்கள் போல் ஆகிப்போகிறார்கள்.

சிம்பிளாகத்தான்உடைஅணிந்திருந்தாள்.சாம்பல்க்கலர்பேண்ட்டில்முழங்காலு க்குக் கீழ்கறுப்புக் கலரில் வெள்ளைக்கோடுகள் போடப்பட்டி பார்க்க கொஞ்சம் அழகாகஇருந்தது,

அதற்குமேட்சானகலரில்வெளிர்க் கலரில்அணிந்திருந்த பனியனும் கண்ணை உறுத்தாமல்/

இவனதுபிராயத்தில்பெண்பிள்ளைகளை”பார்த்திருக்கப்பருத்துப்போனா” எனச் சொல்வார்கள்,இப்பொழுது அப்படி இல்லை போலிருக்கிறது. அல்லது இருக் கிறதா என இவன் கவனிக்கத்தவறிப் போனானா எனத் தெரியவில்லை,

அன்றாடம்பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண் டியதிருக்கிறது, இவனது மகளைப்பார்த்து இவனுக்கே கொஞ்சம் ஆச்சரியம் கலந்த வெக்கமாகிப்போகிறது,

இது போலான தருணங்களில் மகளைஅருகில் அழைத்து உச்சி மோந்து முத்தம்கொடுப்ப்பான்,”என்னப்பா,,,,என்னப்பாஏன் இப்பிடி தளுதளுத்துப் போறீ ங்க,,,” என அவளும் மனம் கட்டிய நினைவை முகம் காட்டியவளாயும் குட்டி போட்ட பூனையாயும் இவனை சுற்றிச் சுற்றி வருவாள்.

எல்லாம் சிறிது நேரம்தான் ,அப்புறம் அதெல்லாம் கலைந்து போகும்,இவன் மனைவி அருகில் வருகிற போது,,,”என்ன புள்ளை வளத்து வச்சிருக்கீங்க,அவ வாட்டுக்கு பேண்ட் சர்ட்டுன்னு போட்டுக்கிட்டு திரியிறா,நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க,,,,ஏன் சாதாரணமா சுடிதார் போட்டுக்கிட்டா ஆகா தா,இப்பிடித்தான்போட்டுக்கிட்டுப்போகணுமா,”என்கிறபொழுதுகளில்இவனது பதில் என்னவாக இருக்கும் என்கிறீர்கள்,,,,

நீங்கள் நினைப்பது போல்தான்சொல்கிறான். ”விடும்மா,இப்ப என்ன அவ கிழிச்சிப் போட்டுக்கிட்டா திரியிறா இப்ப உள்ள காலத்துக்கும் இப்ப இருக்குற உடை நாகரீகத்துக்கும் ஏத்த மாதிரி அவ போட்டுக்குறா,நம்ம புள்ள மட்டுமா போடுது,ஊரே போடும் போதுஅவ மட்டும் தனிச்சி நின்னா எப்பிடி,தவுர இது இந்தக்காலத்துப்புள்ளைகளுக்கு சௌரியமா இருக்குது, ஒங்க காலங்கள்ல இது போல இல்ல,நீங்க போடல, அப்பிடிப்பாத்தா அப்பயே வடக்கத்திப்பக்க மெல்லாம் பைஜாமாதான போட்டாங்க,,,,,அவுங்களுக்கு அது வழக்கமா இருந்துருக்கு,சௌரியமாவும் இருந்துருக்கு ,போட்டுக்கிட்டு இருந்துக்காங்க, இப்பக்காலத்துல அங்க இன்னும் கொஞ்சம் மாறிருக்கலாம்,அது போல இங்க இந்த உடைக,,,,/பாக்குறதுக்கும் போட்டுக்கிறதும், நல்லா இருக்குதானே,அத விட்டுட்டு ஏன் தப்புதப்பா யோசிக்கிற,இருக்குதுதா தப்புத்தப்பா அங்கொன் னும் இங்கொன்னுமா,,,,,அதுக்காகமொத்ததுக்கும்அப்பிடிகறுப்புக்கண்ணாடி போட்டுக்கிட்டு பாத்தது போல பாத்தா எப்பிடி,,,என்கிற சொல்கட்டுடன் முடித்த போது இவனை ஏறிட்ட மனைவி காலையில் வைத்தனுப்பிய தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கிறான் பேருந்து நிறுத்ததில்/

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பதில்...

வலிப்போக்கன் said...

உதவி செய்வதற்கு ஒரு மனம் வேண்டும். பெரும்பாலானவர்களிடம் அந்த மனம் இல்லை..

vimalanperali said...

வாஸ்தவம்.
அன்பும் நன்றியும்!