11 Nov 2010

வெற்றிடங்களின் விளிம்புகளில்,,,,,,,,,

           

        விரித்து காயப் போட்ட துணியாய் நீண்டு கிடக்கிறது வீதி.
இன்னும் இருள் விலகாத காலை நேரம்.சாலையில் விரையும் பால்க்காரனின் சைக்கிள் மணிசப்தம்.காலைக் கோழியின் விடியல் அறிவிப்பு.சற்று தூரமாய் கேட்கும் ஒருமரத்துப் பறவைகள் கலையும் கீச்,கீச்./
டீக்கடை ஸ்பீக்கர்களில் வழியும் பக்திப் பாடல்கள்.உடல் சில்லிடும் குளிரில் தலையில் மப்ளரோடும் ,இறுகக் கட்டிய ஸ்கார்போடும் ஆங்காங்கே டீக்கடைகளில் பூத்து நிற்கிற மனித முகங்கள்.தெருவின் இரண்டுபக்கமும் வளர்ந்து நின்ற வீடுகளின் முன் நீர் தெளித்து கோலமிடும் பெண்கள்.
ரம்யமாய் தெரிகிறது வீதி.அந்த அதி காலை அமைதியை கிழித்தவாறே சைக்கிளில் வேகமாய் விரைகிறான் அந்த இளைஞன்.அவன் விரைந்த திசையையே கவலையோடு டீக் கடைக்காரரும்,அவனது பக்கத்து வீட்டு நபரும் பார்த்து விட்டுச் சொல்கிறார்கள்.
      “அவன் ஒரு கஞ்சா கேஸ் தேறாது தெனம் இதே வேலைதான் அவனுக்கு.விடிஞ்சிரப்புடாது,அந்த இத்துப் போன சைக்கிளை எடுத்துட்டு கிளம்பீருவான்.”என்றார்கள்  டீக் குடித்துக் கொண்டிருந்த என்னிடம்.
    முப்பதுக்குள் இருக்கலாம் வயது.தலை நிறைந்து கலைந்திருந்த முடி.ஷேவ் பண்ணப்படாத முகம்.ஒட்டி உலர்ந்த தேகம்.கசங்கிய முழுக்கை சட்டை,பொடி கட்டம் போட்டு.கசலையாய் கட்டியிருந்த்ச் கைலி,வாயில் ஒரு சிகரெட்.
      எல்லோரையும் போலவேதான் அவனையும் வளர்த்திருக்கிறார்கள் அவனது பெற்றோர்கள்.கண்ணே,மணியே எனப் பாராட்டி வளர்த்து தங்க தொட்டிலிலே தூங்க வைத்து என்கிற “மனோகரா” சினிமாப் பட டைப் வசனமளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அவர்களால் முடிந்த அளவு  கையூன்றி சுவர் பிடித்து சமூகம் பற்றி அவனை வளர்த்து படிக்கவைத்து,வாழ்க்கையை கற்றுக் கொடுத்து MA படிக்கவும்  வைத்துவிட்டார்கள்.
     அது ஆயிற்று அவன் படித்து முடித்து ஐந்து வருடங்கள்.அவனும் எம்ளாய்மெண்ட் நியூஸ்” படிக்காத நாளில்லை. “Wanted coloumn” களை மேய்ந்து,மேய்ந்து அவனது விழிகள் அலுத்துப் போயின.
   வேலைக்கான விண்ணப்ப மனுக்களும்,இண்டர்வியூக்களுக்கு போய்வர அவன் செலவளித்த தொகைமட்டும்   இரண்டு,மூன்று ஆயிரங்களை தொடும் என்றார்கள் அவனது வீட்டார்கள்.
   அவன் படித்த பள்ளி நாட்களில்,கல்லூரிநாட்களில் N.C.C, ஸ்போர்ட்ஸில் இருந்திருக்கிறான்.
படிப்பில்பெரும்பாலும்முதல்மூன்று,அல்லதுஐந்துஇடத்திற்குள்வந்திருக்கிறான்.
பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி என தூள்க் கிளப்பியிருக்கிறான்.இதற்காக அவன் வாங்க்கிய பரிசுகளும்,பதக்கங்களும்,நற்சான்றிதழ்களும்,இன்னும் அவனது வீட்டு மர அலமாரியில்.
   இன்று அந்த பரிசுகளின் மீதும்,பதக்கங்களின் மீதும் காரி உமிழ்ந்த விதமாயும் புறந்தள்ளும் விதமாயும் அமைந்து போன அவனது நடவடிக்கைகள்.
    அவனது அன்றாட நடவடிக்கைகள் அப்படியாகிப் போகக் காரணம் என்ன?அந்த காரணத்திற்கான மனோநிலை எந்தப் புள்ளியிலிருந்து அவனில் ஆரம்பிக்கிறது.
      பக்கத்து வீட்டுக் காரர்கள்,நண்பர்கள்,எதிர்வீட்டுக்காரர்கள்,அந்தத்  தெருவாசிகள்,சொந்தக்காரர்கள்,நண்பர்கள்,அனைவரும் கல்யாணம் வீடு.பேறு,
பிள்ளைகள் என செட்டில்ஆகிவிட்ட போது இவன் மட்டும் இன்னும் வேலை கிடைக்காதவனாய்.
     அஞ்சுக்கும்,பத்துக்கும் பெற்றோர்களின் கையை எதிர்பார்த்து,,,,,,ஒரு டீக் குடிக்க முடியாமல்,ஆசைப் பட்ட ஒரு  சினிமா பார்க்க முடியாமல் சொந்தங்களிடமும், நண்பர்களிடமும் “இன்னும் ஒருவேலையிலும் செட்டில் ஆகலையா”என்கிற கேலியான கேள்வியுடனும்,
 “தண்டச் சோறு” என்கிற பட்டத்துடனும் வெம்பித்திரியும் அவனது மனோநிலையிலிருந்துதானே?
     அப்படியான மனோநிலையில் அலைபவர்களைப் பற்றி “இவர்கள்” என்னதான்  கவலைகொள்கிறார்கள்.
    அவர்களைப் பற்றிய “இவர்களின்”மனோநிலை என்னவாக இருக்கிறது. “அரசு வேலைகள் மட்டுமா சுயதொழிலும் உங்களது வாழ்வில் ஒளியேற்றும் என்பதை தவிர்த்து?”
     இப்படியான தவிர்த்துகளை தவிர்த்து முழு பரிணாமம் பெற்ற வடிவமாய் எமது இளைஞர்கள் உருவாவது பற்றி “இவர்கள்” கவலைப் படாமல் இருக்கும் வரை,,,,,அதிகாலை அமைதியை கிழித்தவாறே சைக்கிளில் விரையும் இளைஞன் இந்த சமூகத்தின் அவலமாகிப் போவான்.
      அம் மாதிரியான அவலம் நமக்கு சம்மதம்தானா?என்கிற எளிய கேள்வியை கேட்கத் தோனுகிறது.பதில் தெரிந்தால் சொல்லுங்களேன் கொஞ்சம்./   

7 comments:

தமிழ் உதயம் said...

தவறு அவர்கள் மீதா, இவர்கள் மீதா. படித்தது M,A என்பதை மறந்து ஒரு வேலை தேடலாம். வேலையும் கிடைக்கலாம்.

vimalanperali said...

வாஸ்தவம்தான் ஸார்,ஆனால் படிப்பும்,பட்டமும் பின் எதற்கு?வேலைவாய்ப்பு,பொருளாதாரம்,கல்வி இவை மூன்றும் இருந்தால் ஒரு தேசம் எப்படியிருக்கும்?தேடுகிற வேலை படித்த படிப்பிற்க்கு அமையுமா?சம்பாத்தியம் சுபப்படுமா?சமூக மதிப்பு இருக்குமா?எதிகால வாழ்கை நன்றாக அமையுமா?,,,,,என்பது போன்ற இதர,இதர கேள்விகளை தன்னில் தாங்கி ஏற்று சரிசெய்யும் பொறுப்பு இவர்களுக்கும்,அவர்களுக்கும் இருக்கிறதுதானே சார்?

எல் கே said...

விமலன் சார், இன்றைக்கு இருக்கும் நிலையில் தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு, முதலில் ஒரு வருமானம் வேண்டும். பின் அதில் இருந்து மெல்ல உயரலாம்.

vimalanperali said...

வருமான வரவை உத்திரவாதப்படுத்துவது யார்?

vimalanperali said...

போட்டி நிறைந்த உலகில் வருமானம் ஈட்டுவது அவ்வளவு எளிதான காரியாக இல்லை என்பதே சுடும் உண்மையாகவும்,,,,,
அதை சரிசெய்ய வேண்டியவர்களாய் உள்ளவர்கள் யார் என்பதே இதன் கேள்வியாகவும்....../

pichaikaaran said...

எந்த ஒரு வேலைக்கும் தகுதியான ஆட்கள் கிடைக்காத நிலை ஒரு புறம்..

வேலை கிடைக்காத இளைஞர்கள் ஒரு புறம்..

அடிப்படையிலேயே ஏதோ ஒரு தவறு இருக்கிறது..

vimalanperali said...

அடிப்படைத்தவறுகளை களைய வேண்டியவர்களாய் யார் உள்ளார்கள் இங்கு?இந்த நேரத்தில் என்பதே கேள்வியாக உள்ளது.பார்வையாளன் சார்.