23 Aug 2011

சிக்னல்,,,,,,,,,,


                         



     ஒரு வாரமே ஏறாது விட்ட பஸ் இப்போது அந்நியமாகத்தெரிகிறது.பஸ்ஸின்
படிக்கட்டுகளைப்பார்த்ததும்கால்கூசுகிறது. மனசுதந்தியடிக்கிறது. பளிச்சிட்டுத்தெரிந்த பஸ்ஸின் ஊதா நிறம்,அதனூடாக நீள,நீளமான கோடுகள்  டிசைன்கள், துணிபோட்டு மூடப்பட்டிருந்த அதன் அழகான இருக்கைகள்,பஸ்ஸினுள்ளேஅமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள்,சிறியவர்கள்,  பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் டிரைவர், கண்டக்டர் யாவரும் வெகு அந்நியமாய் தெரிகிறார்கள்.
      அவர்கள் யாவரும் இவனிடமிருந்து அந்நியப்பட்டுத்தெரிந்தார்கள்.இவனது மனதும்,செயலும் அதை உறுதி செய்வதாகவே/
     வலது கால் பெருவிரல் நகக்கண்ணில் பட்டஅடியும், ரத்தக்கசிவுமாய் மனம் தயங்கி கூசச்செய்கிறது.உடல்முழுக்க மூடி மனதிற்குள் குல்லாப்போட்டு அமர்ந்து விடுகிறான்.
     திங்கள் கிழமை அதிகாலை மூன்றரைமணிக்கு கிளம்பவேண்டும் என உத்தேசித்து இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து பல் விளக்கி கிளம்பிவிட்டான்.சொல்லி வைத்த ஆட்டோ வந்து விட்டது.
     “கவனமா இரு, புள்ளைங்கள பத்திரமா பாத்துக்க,ஒங்க அம்மாகிட்ட சொல்லிவரச்சொல்லீரு,பஸ் ஏறினதும் போன் பண்றேன்” என்றான் சதீஷ்.
     அதிகாலையின் தூக்கக் கலக்கத்திலும் அழகாகத்தெரிந்தாள்.அவனது மனைவி.
சற்றே மெலிந்து தெரிந்தாள்.கன்னம் கொஞ்சம் ஒட்டி விட்டது.
     பார்த்துப் பார்த்து,தேடித்தேடியெல்லாம் இல்லை.பார்த்த பார்வையில் பூத்துப்போனவளை மனதுள் வந்து சட்டென அமர்ந்து விட்டவளைஅவசர அவசரமாய் ஒரு மாதத்திற்குள் கல்யாணம் கட்டி கூட்டி வந்து விட்டான் சுற்றம் சூழ.
    இன்று பெரிய மகள் கல்லூரி இரண்டாம் ஆண்டும் ,இளையமகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
    இடையில் வாழ்க்கையில் வந்த சிரமங்களை மென்று தின்ன பழகிக்கொண்டார்கள் கனவன் மனைவி இருவருமாக.இன்று வாழ்க்கையில் ஜெயித்து நிற்கிறார்கள் ஓரளவு.
    “ஏன் இப்பிடி இருக்க?ஆளே மெலிஞ்சு உருமாறிப்போயி,,,,,?-அவன்.
   “இல்லையேஅப்படியேதானஇருக்கேன்.நல்லாத்தான் வேலை செய்யுறேன்.நல்லாதான இருக்கேன்.”-அவள்.
   “மொகத்த கண்ணாடில பாரு.கண்ணைச்சுத்தி கருவளையம்,ஒழுங்கா தூங்கல போலிருக்கு.மனச தளரவிட்டுறாத.நீதான் மெயினான ஆளு இந்த குடும்பத்துல,
ஒன்னைய வச்சுதான் சுத்துது சக்கரம்.அத நிறுத்திபுடாத தாயே”என்றதும் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டவளாக/
   “என்ன..........செய்யச்சொல்றீங்க,சாப்பாடுஇல்ல,தூக்கம்இல்ல,நிம்மதியில்ல,அதான்,,,,,?
   “எதுக்கு நிம்மதியில்லாம?அதான் பக்கத்துல புள்ளைங்க இருக்காங்க,ஒங்க அம்மா இருக்காங்க,அவுங்கள பாத்துட்டு நிம்மதியா இருக்க வேண்டியதுதான......?”
    “சரி வுடுங்க...........வுட்டா பேசிக்கிட்டே இருப்பீங்க.எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீங்களா.......?டூத் பிரஷ்,சேவிங்க் செட்டு,ட்ரெஸ் எல்லாம் இருக்கான்னு ஒரு பார்வ பாத்துக்கங்க,அப்பறம் போனவாரம் மாதிரி பாதி வழியில திரும்பிவராம என்றவளின் மீது மின் விளக்கு வெளிச்சம் பட்டு அவளது உருவம் அருகில் படுத்திருந்த சின்னவளின் மீது படர்ந்து தெரிந்தது.படர்ந்திருந்த நிழலின் மேடு பள்ளங்கள் உருண்டு,திரண்டும்,குச்சி குச்சிகளாயும் காட்சியளித்தன.
   வர்ணம் உதிர்ந்து உருவங்கள் காட்டிய வீட்டின் சுவர் விளக்கு வெளிச்சத்தில் தெளிவாக/
   தரையின் அரை வெள்ளை டைல்ஸ்கள் சிந்திய வெளிச்சத்தில் மின்னியது.”இந்த கலர ஏன் போட்டீங்க,எதுனாலும் அழுக்குப்பட்ட பளிச்சுன்னு தெரியுதுல்ல”-மனைவி.
   “நீயும்தான கூட வந்து செலக்ட் பண்ணுன,இப்ப ஆயிரம் சொட்ட சொல்றயே”,_சதீஷ்.
   “அதுக்கில்ல இத சுத்தம் செய்ய படுற பாடு எனக்குள்ள தெரியும்.”_மனைவி.
   “சரி வுடு அப்படித்தான்.ஒன்னைய கட்டீடு நான் பாடா படலயா?அதுமாதிரிதான் இது.இதெல்லாம் கம்பெனி சீக்ரெட்டு,இதையெல்லாம் வெளியா சத்தமா சொல்லக்கூடாது.”
    பல சமயங்களில் அவர்களுள் நடக்கும் வீடு பற்றிய பேச்சுகளுள் இதுவும் ஒரு எளிய பதிவாக/
   “சரி எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா?பணம் எவ்வளவு வேணும்?”என்கிற பேச்சினூடாக ஆட்டோக்காரர் திரும்பவும் ஒருமுறை ஹாரன் அடிக்கிறார்.
சரியாக 3.40 க்கு வரும் பஸ்.பைபாஸ் ரோடு போய்தான் ஏற வேண்டும்,பழைய பஸ்டாண்டிற்குள் பஸ்கள் எதுவும் வருவதில்லை.டவுன் பஸ்தவிர/
   இங்கிருந்து  ஒருமணி நேரம் அல்லது ஒண்ணேகால் மணி நேர பிரயாண தூரத்தில் மதுரை,பின் மதுரை  to திருப்புவனம் அங்கே பஸ்டாண்டில் இறங்கி டீசாப்பிட்டு விட்டு ,டாய்ல்ட் போய் விட்டு பஸ் ஏறினால் 8.55 அல்லது 9.15 குள் போய்விடும் இவன் போக வேண்டிய ஊருக்கு/
   முதன் முதலாக இப்படி வந்த போது நிதானம் பிடிபடவில்லை.மதுரையில் இறங்கி டாய்லெட்டில் அமர்ந்திருகிற நேரத்தில் பஸ்களை தவரவிட்டிருக்கிறான்.ஒரு இடத்தில் கால் மணிதாமதம் பிறிதொருஇடம் போகும் போது முக்கால் மணி நேரம்,ஒருமணிநேரமாக நீண்டு முடிந்து போகிறது.
     அப்புறம்தான் பிடிபட்டது.பயணங்களின் வழக்கமான புழக்கத்தில் மதுரையை விட திருப்பத்தூர் வசதியாகப்பட்டது.அங்கேயே இறங்கி விடுவான்.கடமையை முடித்து பஸ் ஏற சரியாக இருக்கும்.
   போன வாரம் கடைசி நாளன்று   அலுவகத்தில் அடுத்த நாள் வந்து விடுவேன் என்றபடி ஊருக்கு வந்தவனை உடல் பாடாய் படுத்தி எடுத்து விட்டது.உடல்நிலை சரியில்லாமல் படுத்து விட்டான்.
    ஏற்கனவே இருக்கிற அல்சர்.நரம்புக்கோளாறு எல்லாம் கை கோர்த்துக்கொண்டது.10 நாட்கல் லீவு சொல்லி விட்டான்.இங்கிருந்தே டெலிபோனில்.
   அன்று எடுத்த  விடுப்பு நேற்றுடன் முடிவடைகிறது.திரும்பவுமாய் பஸ் ஏறி வேலைக்குப் போகவேண்டும்.
    பஸ் ஏற கால் கூசுகிறது.மனம் தயங்கி அச்சம்கொள்கிறது.இடித்துக்கொண்ட வலது கால் பெருவிரல் வலியும்,நகக் கண்களினூடான ரத்தக்கசிவுமாய் தடுத்து நிறுத்தி வைக்கிறது.
   உடல் நலமில்லாத நாளின் இடையில் ஓர் நாள் பஸ்ஸில் ஏறி திருமங்கலத்தில் இறங்கி பாதியிலே வந்து விட்ட பயங்கரம்  உறைக்க இன்றுதான் நகர்கிறான்.
போலாம்,ரைட்,,,,ரைட்/   

4 comments:

அழகிய நாட்கள் said...

பயணங்கள் முடிவதில்லை இறுதியான பயணம் வரை. பலவித அனுபவங்களை பயணங்கள் தருகிறது. சில நேரங்களில் பயத்தையும் சேர்த்துதான்...பயணம் முடியும் வரை காத்திருப்பது முடியாதுதான்.

vimalanperali said...

பயணங்கள் முடியும்வரைகாத்திருக்க முடியாதுதான்.அது தரும் அனுபங்களை பகிர்ந்து கொள்வதுதானே.

ரிஷபன் said...

இருக்கைகள்,பஸ்ஸினுள்ளேஅமர்ந்திருக்கும் ஆண்கள், பெண்கள்,சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் டிரைவர், கண்டக்டர் யாவரும் வெகு அந்நியமாய் தெரிகிறார்கள்.


பழக்கப்பட்ட பயணங்கள் ஒரு இடைவெளி விட்டு மீண்டும் போனால் புதுசு மாதிரி தான் இருக்கும்.

vimalanperali said...

வணக்கம் ரிஷபன் சார்.நலம்தானே?பழக்கப்பட்ட பயணங்கள் மட்டும்தானா?பல்லவிஷயங்கள் இடைவெளிவிட்டுப்போனால் புதுசுமாதிரியாகவே/