சிணுங்கலாய் கேட்ட சிரிப்பு சத்தம் எனது கைபேசி மணியை ஒத்திருக்க ஒலிவந்த திசையை ஏறிட்டுப்பார்க்கிறேன்.
எனது எதிர்வரிசையில் இரண்டு டேபிள் தள்ளி யாருமற்ற இடத்தில் பூங்கொத்து ஒன்று சிரித்தவாறாய் அமர்ந்திருந்தது.
பூங்கொத்துக்குகை,கால்களும்,உடலும்உயிர்அசைவும்இருக்குமாஎன்ன?இருந்ததே,
எப்படிஅது சாத்தியமானது?
உற்று நோக்கினால் பூங்கொத்துக்கு பதில் குழந்தை அந்த இடத்தில்.கையை ஆட்டுகிறேன்,அதுவும்கைஆட்டுகிறது.சிரிக்கிறேன்.அதுவும் சிரிக்கிறது.
கண்ணடிக்கிறேன், அதுவும் கண்ணடிக்கிறது. தலையை ஆட்டுகிறேன், அதுவும்
தலையை ஆட்டுகிறது.உதடு குவித்து முத்தம் தருகிறேன்.அதுவும் உதடுகுவித்து முத்தம் தருகிறது.
“அருகில்வரலாமா?சரிவா. கைகொடுக்கலாமா?ம்,கொடு. உன்னைதூக்கிக்
கொள்ளட்டுமா?ம், தூக்கிக்கொள், உன்னுடன் ஆசையாக பேசலாமா?ம்,பேசு. இரண்டு
பேரும் தனியாக ஓடிப்போய் விளையாடலாமா?ம்,விளையாடலாம்.(ம்,சரி மனதை கட்டுக்குள் கொண்டு வா,என்கிறதொரு குரல்,அசரீரியாக/மனது அவிழ்ந்து போகிற நேரங்களில் இப்படி ஆகிப்போகிறதுதான்.)
கிட்டத்தட்ட எனது பார்வையில் இரண்டும் ஒன்றாகவே/ வெறும் ரத்தமும், சதையும்
இன்னபிற உறுப்புகளும் கொண்டது மட்டுமா மனித உடல்.குழந்தையின் உடலும் அதற்கு விதிவிலக்கு அற்றே/ விதியும் ,விலக்கும் எதற்கு இப்பொழுது?
குட்டியாக அமர்ந்து நிமிர்ந்து நேர்பார்வை பார்த்தவாறு சிரித்துக்கொண்டிருந்த குழந்தையின்முன்னால் விரிக்கப்பட்டிருந்த குட்டியான இலை.அதில் குட்டிக்குட்டியாய் இரண்டு இட்லி,குட்டிக்குட்டியாய் இரண்டு பூரிகள்,குட்டிக்குட்டியாய் இரண்டு வடைகள் கூடவே கூட்டிக்குட்டியான அளவுகளில் பரவித்தெரிந்த சாம்பார்,சட்னி என கலவையாய் விரிந்திரிந்த இலையில் குழந்தையின்குட்டிக்குட்டியான கைகள் பட்டதும் இலையும்,இலையிலிருந்த உணவும் சிலிர்ப்பு கொண்டு ரங்கோலியின் வர்ணம் பூசிக்கொண்டதாக நினைவு.
அட பூங்கொத்து ஒன்று உடல் அசைத்தும்,கைவிரித்தும்,வாய்திறந்துமாய் சாப்பிடப்
போகிறது.
குட்டியான அதன் சின்னோன்டான உடலுக்கு,சின்ன வயிறுக்கு,அதன் சின்ன வாய்க்கு,அள்ளி எடுக்கிற சின்னதான குட்டியான கைகளுக்கு அது போதும் என நினைத்துவிட்டார்களோ என்னவோ?/
குட்டியாய் பொதிந்து தெரிந்த அந்த பூங்கொத்து பாப்பாவா, பையனா?
தெரியவில்லையே?
போட்டிருந்த உடைஅதை சரியாய் சொல்லவில்லை. கிராப் வைத்திருந்த முடி தூக்கலாக/
என்னைப்பார்த்து சிரித்த குழந்தையை நான் பார்தேனா,அல்லது நான் பார்த்த நேரமாய் குழந்தை சிரித்ததா தெரியவில்லை.இருவருக்குமிடையில் ஓடிய நெசவு அதை முடிவு செய்யாமலே அந்தரத்தில் தெரிந்ததாயும்/
இப்படி கண்ணுற்றதும்,இருந்ததும்,மிதந்ததுமாய் தெரிந்த காட்சிப்படலங்கள் நேற்று வேறு மாதிரியாகத்தெரிந்தது.
தூக்கி சிலும்பியவாறு இருந்த குழந்தையின் தலைமுடியை கோதியவாறு அருகில் வந்து நின்ற அவளது பாட்டி நேற்று காலை சாப்பிட்டுக்கொண்டிருக்கிற நேரத்தில் இடுப்பில்குழந்தையைசுமந்துகொண்டும்,கண்ணில்நீர்சுமந்தவாறும் இருந்தாள்.
நான்,என்னைதவிர்த்து இன்னும் இரண்டுமூன்றுபேர்சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கப்போகிறார்.இருவர் துவக்க நிலை அல்லது நடு நிலைஎன நினைக்கிறேன்.நான் அப்போதுதான் இலையில் வைத்திருந்த பூரியை பிய்க்க ஆரம்பிக்கிறேன்.
பூரி பிய்த்து சாம்பாரில் நனைத்து சட்னிதடவி வாயினுள்ளாக இறக்கப்போகிற நேரம் குழதையை சுமந்துகொண்டிருந்தவளின் அழுகையும், விசும்பலும்,புலம்பலும் கொஞ்சம் கூடுதலாகவும்,தூக்கலாகவும் கேட்டது.
பூரித்துண்டு எனது அனுமதி பெற்று உள்ளே போகப்போகிற நேரம் அழுகையான அவளதுபேச்சுஅந்தஇடத்தின்அளவையும்,சூழலையும் மீறித்தெரிந்ததாய்/
“தண்ணியப்போட்டாகழுதஎங்கிட்டாவதுபோயிசெத்துத் தொலைய வேண்டியதுதான,
எதுக்கு அடுத்தவுங்கள வந்து தொந்தரவு பண்ணனும்,மூதேவி”
“ஏதோ தெரிஞ்சவுங்க,மொகதாச்சனியத்துக்காக சும்மாவுட்டாங்க,வேற யாரவதுன்னா இந்நேரம் வெட்டுக்குத்து ஆகியிருக்கும். அறிவு கெட்ட நாயி,இவனுக்குப்போயி புள்ளைய குடுத்து இப்ப அதுபொழப்பும் கெட்டு நடு வீதியில் நிக்குது” என அவள் அங்கலாய்த்தபோது நான் தவிர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றவர்களெல்லாம் போய்விட்டிருந்தனர்.
அடுத்தவர்களின் பிரச்சனையை,புலம்பலை காதுகொடுத்து கேட்பது அநாகரீகம் அல்லது தேவையற்றது என்கிற வெற்று வார்த்தைகளுள் மனம் புதைத்துக்கொண்ட நாகரீகர்களாய்ப்போன பண்பு இதுமாதிரி பேச்சுக்களை ,புலம்பல்களை ,சண்டைகளை கண்டும் கேட்டும் ஒதுங்கிப்போகிறதாய் ஆகிப்போகிறது.
அந்த நேரம் மட்டும், கண்ணையும், காதையும், மனதையும் கழட்டி தனியே ஒரு
அறைக்குள் வைத்து பூட்டி கையோடு சாவியையும் தொலைத்து விடுகிறார்கள்.
அப்புறமாக சாவியை அவர்கள்தேடி எடுத்து திறப்பதற்குள்ளாக நிறைய விஷயங்கள் முடிவுற்றுப்போகிறதாக/
நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை.அது அண்ணனும்,தங்கையுமாக சேர்ந்து நடத்துகிற கடை.
சிறியதான கடைதான்,தீப்பெட்டி சைஸில்.இரண்டு டேபிள் 8 பேர்வரை அமர்ந்து சாப்புடிடுகிற வசதியை தன்னகத்தே கொண்ட கடை .காபி,டிபன்,டீ,மதியம் தக்காளி சாதம்,தயிர் சாதம்,லெமன் சாதம் ,சாம்பார் சாதம் என விற்கிற கடையாய் ரோட்டின் மீது/
அண்ணனுக்கு வயது 60 தை நெருங்கி இருக்கும்.தங்கை அதை விட பத்து வயது குறைந்து தெரிந்தவராக/
அந்த கடையில் இருந்த டேபிள்,சேர்,நாற்காலிகள் ,சாம்பார் வாளி ,இட்லி சட்டி மற்றும் இதரப்பொருட்களோடு,பொருட்களாயும்,உயிர்முளைத்துத்தெரிந்தசிற்பமாயும் அசைந்து தெரிந்த அவர்கள் இருவரும்/
கைக்கும்,வாய்க்குமாய் ஓடிக்கொண்டிருப்பது போக பாத்திரச்சீட்டு, பலகாரச்சீட்டு,
சேமிப்பு கொஞ்சம் என ஓடிக்கொண்டிருக்கிறதாயும், நிலைக்கொண்டதாயும் அவர்களது வாழ்க்கை.
அண்ணனின் பெண்ணைத்தான் தங்கையின் மகனுக்கு திருமணம் செய்து
கொடுத்திருந்தார்கள்.
ஒன்றுக்குள்,ஒன்றாய் ஆகிப்போன சம்பந்தம்.சம்பந்தத்திற்கு சாட்சியாய் அவளது இடுப்பில்அழுகையுடன் கைகால் முளைத்து அமர்ந்திருந்த பூங்கொத்து/
பூங்கொத்தின் தகப்பன் நேற்று முன் தினம் இரவு ஊர் தூங்கிப்போன நேரம் போதையின் உச்சத்தில் பக்கத்து வீட்டு கதவை தட்டியிருக்கிறான்.அதுபோதையின் உச்சத்தில் அவனை அறியாமல் நடந்த தற்செயல் நிகழ்வா?அல்லது அவன் மனம் திட்டமிட்டதா? தெரியவில்லை.
ஆனால் அவன் திட்டமிட்டே அப்படி செய்திருக்கிறான் என ஒரே களேபரமாகி கடித்து காறிதுப்பி 25 வருடங்களாக ஒண்ணுக்குள் ஒண்ணாய் இருந்த குடும்ப உறவுகள் இரண்டிலும் விரிசல் விட்டுப்போனது.
வழக்கம் போல விரிசலை ஊதி பெரிதாக்க மனம் மரத்தது நாலு காத்திருக்கமல்லவா நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு/அவர்களது விஷயத்திலும் அடு தவறாமல் நடந்தது.
விரிசலை ஊதி,ஊதி பெரிதாக்கி பெரிய பள்ளம் ஏற்படுத்திவிட்டார்கள்.நல்ல வேலையாகபள்ளத்தில்விழுந்து அமிழ்ந்து போகாமல் அக்கம்,பக்கம்,ஏரியா சொந்தம்,ஏரியா கவுன்சிலரிடம் போய் சுமுகத்தில் முடிந்த பேச்சு என்பதோடு மட்டுமாய் நின்று போனது.
அதுவே பெரிய விஷயம் என அவள் அழுகையுடன் சொல்லி முடித்தபோது நான் சாப்பிட்டு முடித்திருந்தேன்.
கைகழுவிவிட்டுகடையைவிட்டுவெளியேவரும் போதுதான் கவனிக்கிறேன்.கடையின் உள் சுவரில் ஒரு ஓரம் கருப்பு வெள்ளையில் எம்.ஜி.ஆர் போட்டோவும்,கலரில் அந்த அண்ணன்காரர் போலீஸ் உடையிலும் இருந்த போட்டோவும்,அவரதுவலதுபுறம் சின்ன வயதில் இருந்த அவரது மனைவியின் போட்டோவும்,இடது புறம் சின்ன வயதில் சிரித்தவாறு தெரிந்த அவரது தங்கை கணவரின் போட்டோவும்/
இதையெல்லாம் சிலநிமிடங்கள் உற்றுப்பார்த்தவானாகவும்,மௌன சாட்சியினனாயும்
அந்தக்கடையை விட்டு வெளியேறுகிறேன்/
8 comments:
தங்களின் எழுத்திற்கு வாசகனாகி விட்டேன். பாராட்டுக்கள். தொடருங்கள் .....தொடர்கிறேன்.
http://atchaya-krishnalaya.blogspot.com
http://atchaya48.blogspot.com
வணக்கம் அட்சயா அவர்களே/நலம்தானே?தங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.
வணக்கம் ஹேமா மேடம்.தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.விதைக்கப்பட்டிருக்கிற மனிதர்களின் விதங்கள் பலவாய் இருக்கிற போது இது போல எழுதுவது சாத்தியமாகிறதுதானே/நன்றி.
பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
வணக்கம் தமிழ் தோட்டம் சார்.நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.
தங்கள் கண்ணும் கருத்தும் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள் தரும் உருக்கமும் சிந்தையோட்டமும் அபாரம்!
வணக்கம் நிலா மகள் அவர்களே/தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மிகவும் நன்று.
Post a Comment