7 Jun 2015

நெசவு நூல்,,,,



சிவப்புக்கலர் ட்ரவுசர் என்றால்
அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கலரின் மீதிருந்த அபிமானமாஅல்லது
அது உடல் கவ்வி இடுப்பைப்
பிடித்து நிற்கிற கச்சிதமாதெரியவில்லை.
அந்தக்கலர் ட்ரவுசர் அணிந்திருந்தவர்களையும்
அவர்களின் நடையையும் வெறிக்க வெறிக்கப்
பார்ப்பவன் நாட்களின் நகர்தலொன்றில்
எப்படியாவது சிவப்பு ட்ரவுசர்
எடுத்து விடவேண்டும் என்கிற
கனவுடன் இருந்தான்.
அவனுடன் கூலி வேலைபார்க்கிற
நாகு மாமா,கருத்தம்பி ,
கோவிந்தப்பா,கிட்ணன்ணன்,,,,,,,
இவர்களில் நாகு மாமாவும்,கருத்தம்பியும்
மட்டுமே சிவப்புடரவுசரை
அடையாளமாகக் கொண்டவர்கள்.
அப்படி எத்தனைதான் எடுத்து
வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.
காண்கிற வேளையெல்லாம்  
சிவப்பு டரவுசருடனேயே
காட்சிப்பட்டுத் தெரிகிறார்கள்.
இறக்கை முளைத்த தட்டாம் பூச்சியாய்
உடல்  ஒட்டித் தெரிந்த அவர்களுக்கு
அது பார்க்க நன்றாக பொருந்தித்தெரிந்தது.
அவர்களிடம் கூட கேட்டுத்
தெரிந்து  கொள்ள ஆசை.
எவ்வளவு ஆகும் துணிஎடுக்க,தைக்க என,,,,,/
தினமும் எங்காவது ஓரிடம் தேடி  
கூலி வேலைக்குச் செல்கிற
அவனின் பாடு அன்றாடம்
அடுப்பெரிக்கவே சரியாக/
உள்ளூர் வேலைக்குப்போய்
தோட்டங்காடுகளில் சம்பாதித்தபோதும் சரி,
வெளியூர் சென்று வேலை செய்த
நாட்களிலும் சரி,
கையில் மிஞ்சியதென ஏதுமில்லை.
அம்மாவின் உடல் நலம்.
தங்கையின் படிப்புக்கு,
தம்பியின் செலவுக்குஎன சென்று விட்டது
போக எஞ்சியதெனகையில் ஏதுமில்லை.
மெலிந்து கருத்த இந்த உடலுக்கு
ஆகப்போவது அதிகமில்லை.
ஒரு மீட்டர் துணி எடுத்து
ஐயாக்காளை டெய்லரிடம்
கொடுத்தால் போதும்.
தைத்துக்கொடுத்து விடுவார்
டரவுசரை வெகு அழகாக/
போட்டுக்கொண்டு திரியலாம் தானும்
சட்டையில்லா வெற்று மேனியில்
இடுப்பைப்பற்றிய சிவப்புட்ரவுசரும்,
தோளில் துண்டுடனுமாய்/
என்கிற நினைவுடனேயே
நகர்கிற அவனது நாட்கள்/

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

விளிம்பு நிலை மனிதனின் ஆசை
வார்த்தைகளில் வழிகிறது நண்பரே
தம+1

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/