9 Oct 2010

கந்தகக்குச்சிகளாய்........,,,,




        அவளது இறப்பைப் பற்றி ஊரில்பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.
"உடல் நலமில்லை. கண்மாய்க்குள் குளிக்கப் போன இடத்தில் பேய் அடித்து விட்டது. இல்லை இல்லை எதையோ குடித்தோ,தின்றோ தற்கொலை செய்துகொண்டாள். அதெல்லாம் இல்லை அவளது உடலை அரித்துக் கொண்டிருந்த நோய் அவளை முற்றிலுமாக அழித்து
விட்டது." என ஊர் முழுக்க நாக்கு நுனியில் பேச்சுக்கள் சுழன்றன.

      நன்றாஇருந்தால் பதினெட்டு இருக்கலாம் அவளுக்கு வயது.

தச்சு வேலை செய்யும் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தவளை ஐந்தாம் வகுப்பு படிப்புடன்
நிறுத்திவிட்டார்கள்.

       சமூகத்தில் புழங்கும் வழக்கப்படியே "பெண் பிள்ளைக்கு எதற்கு படிப்பு" என நிறுத்தி
விட்டார்களாம்.

       பத்து வயதில் படிப்பில் படு சூட்டிகயாகவும்,நல்ல மார்க்கும் எடுத்த அந்த பெண் பிள்ளை வீட்டின் பொருளாதார நிலையைகாரணம் காட்டி தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்கு அனுப்பப் படுகிறாள்.

அவளது அக்காவும்,அண்ணனும் திருமணத்திற்குப்பிறகு அவரவர்
குடும்பங்களைப் பற்றி மட்டுமே அக்கறைப் படுபவர்களாகவே./
உடல் நலமில்லாத அவளது தாய் கிடைக்கிற நேரங்களில் காட்டு வேலைக்கு கூலியாகச் செல்வார்.
    தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போன முதல் ஒரு வாரமாக பசை மாவு,கந்தக நெடி,துத்த வாடை,சின்னதான தீப்பெட்டி ஆபீஸின் இறுக்கம்...............,,,,,,,,,,இதெல்லாம் பிடிக்காமல் அவதிப் பட்டிருக்கிறாள்.
   "போகப் போக எல்லாம் சரியாகிப் போகும்" என்கிற சமதான வார்த்தை சொல்லி ஒரு வாரத்திற்கு அப்புறமாய் தீப்பெட்டி ஆபீஸ் அனுப்படுகிறாள்.
நாளடைவில் அதுவே பழக்கமாகிப் போய்,அதுவே அவளது வாழ்க்கையின் நிரந்தரம் ஆகி ,அவளது வாழ்க்கையும்  தீப்பெட்டியாபீஸ் வேலைக்காகவே
 பிறப்பு எடுத்தது போல் முழு வேகத்துடன் வேலை,சம்பாத்தியம் என மாறிப் போகிறாள்.
    சுவிட்சைப் போட்டதும் இயங்கும் இயந்திரம் போல தினந்தவறாமல் அவளது உழைப்பு தீப்பெட்டி ஆபீஸில்.      வீட்டின் நல்லது,கெட்டது ,விஷேசம் எதிலும் அவள் தலை தெரிவது இரண்டாம் பட்சம்தான் .
     வேலையும்,சம்பாத்தியமுமாய் இருந்த அவள்அதிகாலையில் எழுந்து விடுவாள்.
 அவ்வளவு சீக்கிரமாக எழுபவள் எவ்வளவு அவசரமாக எல்லா வேலைகலையும் செய்து முடித்து விட்டு எவ்வளவு அவசரமாக எழுந்து, எவ்வளவு சீக்கிரம் கிளம்பி வேலைக்குச் செல்வாளோ? என்கிற கேள்வி என்னுள் ஆச்சிரியமாகவே./
     (அந்த பிரச்சினை அவளுக்கு மட்டும் இல்லை. அலுவலக வேலைக்கும் இதர வேலைகளுக்குமாய்ச் செல்கிற மத்திய தர வர்க்கத்து பெண்களதும், படிக்காத அடிமட்ட வர்க்கத்து பெண்களதினுமான பிரச்சினை இப்படித்தான் உள்ளது அவர்களது அன்றாட நகர்வுகளில். அதுவும் மாதவிடாய் விடாய் நாட்களிலும்,கர்ப்பப்பைபிரச்சினை உள்ள பெண்களின் நிலை இன்னும் மோசமாகவே.
      உடலில் அவஸ்த்தையும்,முகத்தில் புன்னகையுமாய் வேலைக்குச் செல்கிற அவர்களின் நிலை கேள்விக் குறியாகவும்,ஆச்சரியமாகவும்.)       அவ்வளவு சீக்கிரமாக வேலைக்குச் செல்பவள் காலைச் சாப்பாட்டிற்கோ,
மதியச் சாப்பாட்டிற்க்கோ வீட்டிற்கு வரமாட்டாள்.
      வீட்டிற்கு வந்து சாப்பிட்டுப் போகிற நேரத்தில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு வேலை செய்துவிடலாம் என்பது அவள் கணக்கு.
அவளது தாய் மூலமாகவோ,உடன் வேலை செய்யும் பிள்ளைகள் மூலமாகவே அவளுக்கு சென்று சேரும் பழைய சாதத்தையோ,மோர் சாதத்தையோ அவசர கதியில் அள்ளி எறிந்து விட்டு வேலையில் அமர்ந்து விடும் அவள் சாப்பாட்டின்போது கையில் ஒட்டியிருக்கும் பசை போக கைகழுவுவதுகூட கிடையாது.
   தீப்பெட்டி ஒட்டி காயாத வடுவாயும்,பிசு,பிசுப்பாயும் அவளது ஆட்க் காட்டிவிரலின் இன்னொரு விரலாய்த் தெரியும் பசையை சரியாகவும்,
சுத்தமாகவும் கழுவியும்,கழுவாமலும் சாப்பிடும் அவளது உடலினுள் சாப்பாட்டுடன் பசையின் விஷமும் கந்தகத்தின் விஷமும் போவது கண் கூடான நிகழ்வே.
    இப்படியாக நகர்ந்த அவளது அன்றாடங்களின் நகர்வுகளில் அவளுக்கென ஒதுக்கப்பட்ட அதிகபட்ச சந்தோஷம் இரவு நேரம் அவள் தொலைக் காட்சிப் பெட்டியில் பார்க்கும் ஆரோக்கியமான(?/) மெகாத் தொடர்களே.

  டவுன் என்றால் வேலைபார்த்து வாங்கும் வாரச் சம்பளத்தில் கவரிங் கடையில் ஏதாவது பிடித்ததை வாங்கி வைத்துக் கொண்டு கழுத்திலும்,
காதிலும்,கையிலுமாய் மாட்டிக் கொண்டு அழகு பார்த்துத் திரியலாம்.தெரிந்த ஜவுளிக் கடையில் பிடித்த கலராக தாவணி,கலர் ஜாக்கெட்,தாவணி என ஒண்ணுக்குப் பத்தாக அவர்கள் சொல்லும் விலையில் தவணைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
    ஆனால் பாவம் அதெற்கொல்லாம் கிஞ்சித்தும் வழியில்லாத கிராமத்தில் பிறந்த பெண் அவள்.

அவள் தீப்பெட்டி ஒட்டி சம்பாதித்த பணம் முழுவதும் அவளது குடும்பத்திற்காக மட்டுமே செலவழிந்துள்ளது.


     தம்பியின் படிப்பிற்கு,உள்ளூருக்குள் சீட்டுக் கட்ட,இன்னும் இதர,

இதரவானவைளுக்காக.
     இத்தனையும் செய்யும் அவள் நல்ல ஆடை உடுத்தி நான் பார்த்தது இல்லை.சாயம் போன பாவடை ,தாவணியும்,அக்குளின் ஓரம் கிழிந்த ரவிக்கையும்,எண்ணெய் வழிந்த முகமும்,படிய வாரப் படாத தலையும்தான் அவளது முழு அடையாளம்.
      அப்படியெல்லாம் அடையாளப் பட்டவள் தாய்,தந்தை அக்கம்,பக்கம்,

சகோதர,சகோதரிகள் என பேசி உறவாடிவிட்டு மகிழ்ச்சியாய் இருந்த அவள் அடுத்த இரண்டு நாட்களில் சட்டென இறந்து போகிறாள், ஒரு மதிய வேளையில் தீப்பெட்டியாபீஸில்  வாந்தி வருகிறதென மயங்கி விழுந்தவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.


      மறுநாளின் மதியம் அவள் ஆஸ்பத்திரியில் வைத்து இறந்து போகிறாள்.

இப்படி வலுக்கட்டாயமாக படிப்பை நிறுத்தி,தீப்பெட்டி ஆபீஸிற்கும் இதர கூலி வேலைக்குமாய்ப் போய் சம்பாதித்து சிறிய வயதிலேயே இறந்து போகிற பெண்பிள்ளைகளின் இழப்பு சம்மந்தப்பட்ட குடும்பத்தினராலோ,
 அக்கம்பக்கத்தினராலோ,சொந்த பந்தத்தினராலோ பெரிய அளவில் நினைக்கப் படாமல் இருப்பதும்,இவைகளெல்லாம் "ஜஸ்ட் லைக் தட்"ஆன நிகழ்வே என புறந்தள்ளப்படுவதுமான அவலம் இனியும் எத்தனை நாட்கள் தொடரும் இச் சமூகத்தில் எனத் தெரியவில்லை.?

2 comments:

அழகிய நாட்கள் said...

எண் 6, பிச்சை தெரு,(எம்ஜியார் தெருவுக்குப்பின்னால் இருந்த சாதியின் பெயரை நீக்கிவிட்டபடியாகையால்)ஒரு போராட்டக்கருவறை; திட்டமிடலின் தோற்றுவாய்; கலை இலக்கிய இரவுகளின் உதய மையம்; எழுத்தறிவு இயக்கம் என்ன அறிவியல் இயக்கம் என்ன இன்னும் எத்தனை எத்தனை இயக்கங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இருபதாண்டுகால உறவு அது; பிச்சை என்பவருக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விட அந்த வீட்டில் வாழ்ந்த அனைவரும் ( 6, பிச்சை தெரு)கட்டிடம் விட்டு சென்றாலும் கூட இன்னும் கனவுகாணும் குழந்தைகள்தான். பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் எதார்த்தவாதிகள் தான். குடும்பத்தோடு இயைந்த வாழ்வு வைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான் கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் பலருக்கு இது போன்ற கருவறைகளில் பணியாற்றும் தோழர்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் போற்றக்கூடியதன்றி வேறென்ன?

Anonymous said...

நன்றி தோழர்,உங்களின் கருத்துரை படித்ததும் உடல் புல்லரித்ததுப் போனது.