14 Oct 2010

கிரகப் பிரவேசம்



 
           அண்மையில்
ஒரு கிரகப் பிரவேச வீட்டிற்க்குச் சென்றிருந்தேன்.
கிரகப் பிரவேசம் என்பதே ஒருசுபயோக சுபதினத்தின் ராகு காலம் அற்ற காலை வேளையில் நடப்பதுதானே?
ஆனால் இவரது வீட்டுக் கிரகப் பிரவேசம் அப்படியெல்லாம் நடக்கவில்லை. முகூர்த்த நாளும்,முகூர்த்த வேளையும் அற்ற ஒருநாளின் மாலை
மயங்கியநேரத்தில் ரிப்பன்கட் பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அவரும்,அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அவரது துணைவியாருமாக ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்று கட்டியவீடு.
வீடு பார்க்க அழகாக இருந்தது.செங்கலும்,சிமெண்டும்,மார்பில்
தரையுமாய் பளிச்சிட்ட வீட்டில் அவர்களது உணர்வும், உதிரமும்
கலந்தே தெரிந்தது.
       அந்த கலப்பில் வராண்டா,ரூம்,ஹால் ,கிச்சன் இவற்றோடு சேர்த்து
புத்தகஅறை என தனியாக ஒரு ரூமை ஒதுக்கியிருந்தார்கள்.புத்தக
அறைக்குள்இருந்த இருபது புத்தகங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன புத்தம் புதிதாக.
அதிசயமாக அந்த புத்தக அறைக்குள் நுழைந்த மிகக் குறைந்த வெகு சிலரே அந்த புத்தகங்களை எடுத்து புரட்டுவதும் அப்படியே வைத்து விடுவதுமாக இருந்தார்கள்.
மாலை ஆறு மணிக்கு துவங்க இருந்த கிரகப்பிரவேச விழா அரை மணி தாமதத்துடன் ஆரம்பித்தது.அதுவரைபாடிக் கொண்டிருந்த பாடல்களை நிறுத்திவிட்ட மைக் செட்க்காரர், மைக்கை சரி பண்ணி டெஸ்டிங்கில் ஒன்,டூ, த்த்திரீ.............,,சொல்லிக் கொண்டிருந்தார்.
தொழிற் சங்கத்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களுமாய் வாழ்த்திப் பேசப்போகும் மேடை அது.
மேடை என்ன பிரமாதமாய்.வீட்டை ஒட்டிகுரோட்டன்ஸ் வளர்க்கலாம் என அவர் கட்டியிருந்த முழங்கால் அளவேயான உயரமுள்ள நீளமான நாற்சதுரத் தொட்டியின் மேல் பலகை போட்டு அதையே மேடையாக்கியிருந்தார்கள்.
மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணிவரை நடந்த அந்த விழாவில் அவரது சொந்தங்கள்,நண்பர்கள்,அக்கம், பக்கம் சக ஊழியர்கள் அவர் சார்ந்திருந்த தொழிற் சங்கத்தினர் என எல்லோரும் வந்திருந்த கிரகப் பிரவேச விழா நகரை ஒட்டிய இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்.
அவர் கட்டியிருந்த வீட்டின் விழாவிற்கு வரப் போக அவர் சார்ந்த தொழிற்சங்க அலுவலகத்தின் அருகிலிருந்து ஒரு வேன் "சன்டிங்" ஓடிக் கொண்டிருந்தது. அவரது தொழிற்சங்க சாக்கள் யாவரும் இறக்கைகளை புதுப்பித்துக்கொண்டுகிரகப்பிரவேசவேலைகளில் உணர்வையும்,
உழைப்பையும் கலந்து விட்டிருந்தார்கள்.
சமையல், சாப்பாடு .பந்தி ஏற்பாடு இத்தியாதி,இத்தியாதி என
எல்லாம் முடிந்து கிளம்பலாம் என்றிருக்கும் போதுதான் அந்த அறிவிப்பு வருகிறது காற்று வழியாக மிதந்து.
புதிய வீட்டிலிருந்து சிறிது தூரமே தள்ளியிருக்கக் கூடிய கிராமத்து மந்தையில் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கலை நிகழ்ச்சி என்றால் ஆடலும்,பாடலும்ரகமோநரிக் குறத்தி,கட்டபொம்மன் நாடகமோ அல்ல.
அன்றைய நாட்டு நடப்புகளையும் அரசியல் நிகழ்வுகளையும்,
நிலைமையையும் படம் பிடித்து காட்டிய நிகழ்வாய் அந்த கலை நிகழ்ச்சி.
அந்த கலைநிகழ்ச்சியை ஒட்டு மொத்த கிராமமும் உட்கார்ந்து பார்க்கவில்லையாயினும் கூட ஐநூறை தொடாத எண்ணிக்கையில் மக்கள் கூட்டமாய் தெரிந்தார்கள்.
நான்கு மணி நேரம் நடந்த கலை நிகழ்ச்சி கிரகப் பிரவேச விழாவின் உயிர் நாடியாய். அந்த கலை நிகழ்சியே அவர்களை ஈர்த்து பெரிதும் பேச வைக்கிறது.அந்த கிராமத்தில்.
அந்த நிகழ்வை ஒட்டி வீட்டுக் கிரகப் பிரவேசவிழா நாயகன் மீதான பார்வையும் மதிப்பும் கூடுகிறது அந்த கிராமத்து மண் மத்தியில்.
அந்த மண்ணை கை நிறைய அள்ளிப் பார்த்தால் இன்றும் அந்த கிராமத்துப் பேச்சின் பதிவு இருக்கலாம்.
கலை நிகழ்ச்சி,அதை ஒட்டிய ஈர்ப்பு மக்களின் பேச்சு இவை எல்லாம் ஒரு பக்கமாக இருந்த போதிலும் கூட ,,,,,,,,,,,,,சாப்பாடு, உபச்சாரம், விழா சந்தோஷம்,,,,,,,,என்கிற வகையறாக்களுக்குள் மட்டுமாக அடங்கிப் போகாமல் இப்படியானதொரு முற்போக்கு கலைநிகழ்ச்சியை நடத்தும் எண்ணம் அவருக்குள் எங்கிருந்து முளை விடுகிறது?
ஏன் அவர் அந்த நிகழ்ச்சியை அவ்வளவு செலவுகளுக்கு மத்தியிலும் சொந்தமாய் நடத்த வேண்டும்?
அப்படி நடத்தும் அவரின் உளகிடக்கையும், மனவெளிப்பாடும் எதாய் இருக்கிறது?
நாம் வாழும் சமூகத்தில் சமூகம் சார்ந்தும், மக்கள் வாழ்வு சார்ந்தும் ஏதேனும் ஒரு நல்ல நிகழ்வை நிகழ்த்த வேண்டும்.அது மக்கள் மனதில் சிறிய அளவிலான அசைவையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் ஆசையாகவும்,உளக் கிடக்கையாகவும் இருந்திருக்க வேண்டும் அந்த நேரத்தில்.
கிரகப் பிரவேச் செலவோடு இம்மாதிரியான கலைநிகழ்ச்சியை நடத்தும் செலவையும், ஏற்பாடுகளையும் ஒரு சுமையாக கருதாமல் செய்யும் மனம் ஒரு முற்போக்கு தொழிற்சங்க வாதியான அந்த அரசு ஊழியரினுள் மலர்ந்ததைப் போல எல்லோரினுள்ளும் ஏதாவது ஒரு வடிவில் மலர்வது சாத்தியமே என்பதையும் சொல்லி முடிந்தது அவர் வீட்டு கிரகப் பிரவேசம்.

2 comments:

அழகிய நாட்கள் said...

தோழர் விமலன்!
நீங்கள் குறிப்பிட்டதைப்போன்றதொரு புது மனை குடி புகும் விழாவை 2004 டிசம்பர் 13 காலை 10 மணி அளவில் என்று அச்சிட்டு நான் எனது குடும்ப்த்தினருடனும், உறவினருடனும் அலுவலக சகாக்ககளுடனும் கொண்டாடியிருக்கிறேன் கிரகப்பிரவேசத்தை.கணபதி ஹோமம் இல்லாமல் அப்பா அம்மாவின் புகைப்படத்தை மட்டுமே வைத்து குத்து விளக்கேற்றி, வந்தவர்களுக்கு அறுசுவையான உணவு பரிமாறி அன்பையும் பரிமாறிய ஒரு உன்னத நிகழ்ச்சி. புதிய ஆசிரியன் ஒரு 500 பிரதிகள் பேரா ராஜுவிடமிருந்து வாங்கி வந்தவர்கள் அனைவருக்கும் வழங்கியது கூட நிறைவான ஒரு நிகழ்வுதான்..

விமலன் said...

வணக்கம் தோழர்.உங்களது இல்ல கிரகப் பிரவேச நிகழ்வை நான் எழுதிவைக்கவில்லை.தவறுக்கு வருந்துகிறேன்