17 Oct 2010

அடையாளம்

 
                      




நகரின் நெரிசலான  நாற்ச் சந்திப்பு சாலை அது.
அதன் இடது முனைதிருப்பத்தில்இருக்கிறது அந்தபெட்டிக்கடை.அதில் இல்லாத வியாபாரம்
கம்மிதான்.

பீடி, சிகரெட், கடலை மிட்டாய்,வாழைப் பழம் என ஒரு பெட்டிக்கடையை
அடையாளப்படுத்தும் வகைகளுடன்சேர்த்துதினசரி பேப்பர்களும் குமுதம்,
ஆனந்தவிகடன் இப்படியான வாராந்திர,மாதாந்திர ஏடுகளும் கிடைத்தன.

       நகரில் எங்கும் கிடைக்காத சார்மினார் சிகரெட்டை எனது நண்பர் அங்குதான்
வாங்குவார்.

      இருபத்தைந்து வருடங்களாக அங்கு அமர்ந்திருக்கும் அந்தக்கடையை 'அக்கா கடை' என்றார்கள்.
      அக்கா கடை என்கிற பெயர்தான் நிலைத்துவிட்டதே, இனி நாம் எதற்கு? என அந்த வீட்டின் ஆண்களும் கடை வியாபாரத்தில் நிற்பது அரிதாகிப் போனது.
       கடையை ஒரு பெண்தான் நிர்வகித்தார். "என்ன வேணும்"என்கிற அவரது அதட்டலான கட்டை குரலே அந்தக் கடையின் சுழலை தூரத்திலிருந்து அறிமுகப் படுத்தும்.         அவர்கள் திருநெல்வேலியிலிருந்து இந்த ஊருக்கு வந்து பிழைக்க கதியற்று நின்றபோது இந்த பெட்டிக் கடைதான் அவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது.
         இருபத்தைந்து வருட வாழ்க்கையின் தளும்புகள் சுவடுகளாக அவர்களுள்.
        எத்தனைவிதமான மனிதர்கள்,எத்தனை விதமான சூழல்கள், எத்தனை விதமான சகிப்புத்தன்மைகள் என இன்னும் இன்னுமான அத்தனை விதமான சமூகசீண்டல்களுக்கும்,தீண்டல்களுக்கும்
மத்தியில் குடும்பத்தை இழுத்து வாழ்க்கையின்  அத்தனைக்கும்  ஈடு  கொடுத்து  நிலைத்து  நின்று  தனது மகளுக்கும்,மகனுக்கும் திருமணம் செய்து கொடுத்தார்.       "வெற்றிலை போட்டு குதப்பிய வாயும் ,கட்டைக் குரலுமே" அவரது அடையாளமாகிப் போகிறது இந்த இருபத்தைந்து வருடங்களில்.
         கடந்த நாட்களில் தன்னை இப்படியெல்லாமுமாக அறிமுகப் படுத்திக் கொண்டவர் ,இன்று தனது மகனுக்கு மணம் முடித்த மருமகளை கடையில் நிறுத்தியுள்ளார்.
 மருமகளாக வந்த அவள் அந்தக் கடையில் எத்தனை நாட்களாக நிற்கிறாள் என சரியாகத் தெரியவில்லை.ஆனால் நான் ஆறு மாதத்திற்கு முன் பார்த்த அதே தோற்றத்திற்கு நேர் எதிர் இன்று.
சொக்கவைக்கும் அழகு இல்லைஎன்றாலும் கூட கழுத்தில்,காதில் தங்கத்துடன் பார்ப்பதற்கு பளிச்சென்று முகலட்சணமாய் இருந்தாள்.
மென்மையான பேச்சுக்கு சொந்தக் காரியாகவும்  இருந்த அவளை இரண்டு நாட்களுக்கு முன்தான் பார்த்தேன்.
    கழுத்திலும், காதிலும் ஒட்டிக் கொண்டிருந்த தங்கம் மட்டுமல்ல. அவளது முழு தோற்றமே மிஸ்ஸிங்.
அவளின் மாமியாரைப் போலவே கட்டைக் குரலும், வெற்றிலைபோட்டு குதப்பிய வாயுமாய், காவியேறிய பற்களுடன், முகலட்சணமே மாறிப் போயிருந்தாள்.
          அன்று மட்டும் என இல்லை.நான் அவளைப் பாக்க நேர்கிற அடுத்தடுத்த நாட்களிலெல்லாம் அப்படித்தான் காட்சியளித்தாள்.
இந்த இடத்தில் இயல்பாகவே எழும் மெகாசைஸ் கேள்வியை தவிர்க்க இயலவில்லை.
       கடந்த இருபத்தைந்து வருடங்களாக கடையிலிருந்த பெண்ணும் சரி,கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக கடையில் இருக்கும் பெண்ணும் சரி, இவர்களிருவருக்கும் வெற்றிலை(சமயங்களில் குட்கா புகையிலை) போடும் பழக்கம் ஏன் வந்தது?
அவர்கள் ஏன் அந்த பழக்கத்தை பழகவேண்டும்? காபி,டீயைப் போலத்தான்
அதுவும் என்றால்தன்னையே வருத்தி தனது முகத் தோற்றத்தையே மாற்றிக் காட்டுகிற அளவிற்கா அந்தப் பழக்கத்தை அவர்கள் கை கொள்ள வேண்டும்?
    அப்படியெல்லாம் அவர்கள் ஏன் போகிறார்கள்? தனது அழகையும் யவ்வனத்தையும்சிதைத்துக்கொள்கிறஅளவிற்கான நிலைமைகளை அவர்களாக விரும்பி ஏற்றுக் கொண்டார்களா?
அல்லது  வலிய  திணிக்கப்பட்ட சமூக நிர்பந்தத்தில் அப்படி தங்களை இழிநிலைத் தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டார்களா,,,,,,?என்பது இன்றும் புரியாத புதிராகவே,
  தினமும் கடைக்குப் போகிற  நான் இதைப் பற்றி இது நாள் வரை அவளிடம் கேட்டதும் இல்லை,அவளும் சொன்னதில்லை. அடுத்து போகும் போது கேட்கவேண்டும் கட்டாயமாக./












 

No comments: