24 Oct 2010

நினைவாஞ்சலி



  

    கடந்து போன சுபயோக சுபதினத்தில்தான் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.தூக்கு மாட்டிக் கொண்டு

வீட்டில் ஆளரவமற்று விடப்பட்ட தனிமையில் அந்தக்காரியம் நடந்திருக்கிறது


     ஏன்,எதற்கு,எப்படி என்கிற விவாத வலைக்குள் நுழையும் முன்பாக என்ன நடந்தது எனப்

பார்க்கலாம்

    இன்றைக்கெல்லாம் இருந்தால் அந்தப் பெண்ணிற்கு 21 வயதைத் தாண்டாது.பெண்ணின்
திருமண வயது 19 என்கிற ஆட்டோக்களின் பின்புற வாசகங்களின் படி அவளுக்கு
திருமணமும் செய்து முடித்திருப்பார்கள்.
     பார்த்தவுடன் பற்றிக் கொள்கிற அழகு இல்லையென்றாலும் கூட துடைத்து வைத்த
இயல்பான அழகுடன்.பக்கத்து வீட்டு பிள்ளைகளிடம் பழகுகிற சினேகச் சிரிப்பும்,சினேக
பாவமும் அரவணைக்கிற பேச்சுமாய் அந்த தெருவில் அவள் குடும்பத்துடன்./


   அம்மா தையல் தைத்து வருமானம் ஈட்டுகிறார்.அப்பா மில் வேலைக்காரர்.இரண்டுபக்கமும்

சிறியதும், பெரியதுமாய் மொட்டை மாடியும், மாடி வீடுமாய் முளைத்துக் கிடக்கிற தெருவில்

உள்ள வேப்பமர காளி கோவில் எதிரில்தான் அவள் வீடு. இவளையும் சேர்த்து வீட்டில் மூன்று
பேர்.ஆண் இரண்டு,பெண் ஒன்று. அண்ணன்,இவள்,தம்பி என்கிற வரிசைக் கிரமம்./


    கட்டியிருக்கிற நைட்டியுடனும்,மேலே போட்டிருக்கும் துண்டுடனும் அந்தத் தெருவில்

உள்ள பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் சென்று வருமளவுபழக்கமும்,சகஜமும்,
நெருக்கமும்.


    இறக்கை முளைக்காத பட்டாம் பூச்சியாய் திரிந்த அவளிடம் இவனும்,இவனிடம் அவளும்

மனம் பறிகொடுக்க ஏதுவாய் இருந்திருக்கிறது.


இவள் பழகிய அத்தனை வீடுகளில் ஒரு வீட்டுக்கு பழக்கம் மற்றும் நட்பு முறையில் வந்து

போகும் அவன் B.A முடித்து விட்டுசொந்தமாக ப்ளாஸ்டிக் வியாபாரம் செய்பவனாம்.அது

தவிர்த்து சைடாக பிளைடு ,ஷேவிங் கிரீம் சோப்பு,பவுடர்,ஊறுகாய்,மசால் பொடி என
உள்ளுர் தயாரிப்புகளையும் வாங்கி கடைகளுக்கு சப்ளை செய்கிற ஏஜெண்டாய்./


    அம்மாதிரியான அவனது வேலையும்,சுறுசுறுப்பும் 10 ஆம் வகுப்பு தாண்டாத அவளை

முழுமையாக அவள்பக்கம் ஈர்த்தும்,சாய்த்தும் விட்டது.
    திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்ட இருவரும் ஆந்திராப் பக்கம் போய் திருமணம்

செய்து கொள்வதென தீர்மானிக்கிறார்கள்.(இருவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்காது,இருவரும்
வேறு,வேறு ஜாதி என்பதால் என நினைத்து) உள்ளூர் ரிஜிஸ்டர் ஆபீசெல்லாம் இவர்கள்
கண்களில் படாமல் போனதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.
 இருவரின் திருமண விஷயமும் ,அவர்களது பழக்க  வழக்கங்களும்  அந்தத் தெருவில்
 யாருக்கும் தெரியாத படியும்,சந்தேகம் வந்து விடாத படியும் நடந்திருக்கிறது.
அப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த  காதல்திருமணத்தில்
 போய் நின்றபோது .........,,,,பெண் வீட்டார் மிகவும் அதிர்ந்து போனார்கள்.நமது பெண்ணா,
இப்படியா?அவளை சுதந்திரமாக வளர்த்தது நமது முழு தவறு.என்கிற தவறான எண்ணத்துடன்  ஆந்திரா செல்கின்றனர் அவளது அண்ணன்,தம்பி,அப்பா மூவரும்./ 


   அந்த ஊரில் அவளை கண்டுபிடிக்க அவள் கொடுத்திருந்த முகவரியே பெரிதும்

உதவியிருக்கிறது . "நாங்கள் இங்குதான் இருக்கிறோம், திருமணம் செய்துகொண்டு,
எங்களை தேட வேண்டாம்."என்கிற கடிதத்துடன்தான் அங்கு போயிருக்கிறார்கள்.


   பத்து நாட்களாய் பிள்ளையை காணாத தவிப்பை விட வேற்று ஜாதிக் காரனுடன் ஓடிப்

போனாளே என்கிற எல்லை மீறிய கோபம் கண்ணை மறைக்க,எல்லை கடந்தது அண்ணன்,தம்பி.அப்பா மூவரின் செயல்களும்.


     அவனை அடித்து துவைத்து விட்டு அவன் கட்டிய தாலியை அறுத்தெறிந்துவிட்டு

பிள்ளையை கூட்டி வந்து விட்டார்கள் வீட்டிற்கு. இம் மாதிரியான நேரங்களிலெல்லாம்

அவர்கள் எம்மாதிரியான மன பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை பார்க்க மறுத்து./


    அவளை கூட்டி வந்த நாளிலிருந்து இந்த ஒரு வருடமும் அவள் தன்மையில்தான்,வீட்டுச்

சிறையில்தான்.அவர்கள் குடியிருந்த தெருவை  விட்டு அவளுக்காக இடம் மாறுகிறார்கள்.


அங்கிருந்தால் அக்கம்,பக்கம் என்ன,ஏதென்ற விசாரணை?
     அவள் பாத்ரூம் போகும் நேரங்கள் தவிர்த்து அவளுக்காக காவல் இருந்தார்கள். அவளது

ஒவ்வொரு அசைவும் ரகசியமாக கண்காணிக்கப் படுகிறது அவளது வீட்டாரால்


     புதிதாக குடிவந்த தெருவில் யாருடனும் பழகிவிடக் கூடாது ,பேசிவிடக் கூடாது என்பதில்

கவனமாக இருந்தார்கள். தெரு முனையில் இருக்கும் காய்கறிக் கடைக்கோ,பலசரக்குக்

கடைக்கோ போய் விடக் கூடாது.
பழைய ப்ரண்ட்ஸ்களை பார்க்கப் போகக் கூடாது.தெருவில் வரும் தேய்ப்பு வண்டியில்
 துணிகளை தேய்த்து வர அனுமதி கிடையாது. தெரு முனையில்
உள்ளகுழாயில் தண்ணீர் பிடித்து வர அனுமதி கிடையாது.காலையில் வீட்டு வாசலில்
கோலம் போடக் கூடாது.ஒரு கல்யாணம்,சடங்கு வீடு,வேறுவிழாக்கள்,,வைபங்கள்,சினிமா, சொந்தக்கார்ர்களின் வீடு.........எதுவும் கிடையாது
          அவளின் கலர்க் கலரான இறக்கைகள் பிய்த்தெறியப்பட்டு நான்கு புறமும் அடைக்கப்
பட்ட வீட்டின் சுவர்களுக்குள்ளேயே அவளது குடியிருப்பு.
செவிநிறைந்தவசைச்சொற்களோடும்,மனம் குத்திய இழிவுப் பேச்சுக்களோடும் நடை பிணமாய்
இருந்து வந்திருக்கிறாள்.
     நேர நேரத்திற்கான சாப்பாடு தண்ணி இத்தியாதி,இத்தியாதிகளெல்லாம் கூட அவளது
குடும்பத்தாராலேயே அவளுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.


       எந்த நேரம் தன் வீட்டார்கள் தன்னுடன் இருப்பார்கள்,?எந்த நேரம் தன்னை வீட்டிற்குள்

வைத்து பூட்டிவிட்டு போய் விடுவார்களோ...,,,, என்கிற எண்ணத்தில் அவள் மனம்

பேதலிக்காமலும் இல்லை. சமயங்களில் அவளது பெற்றோர் வெளியூர் போய் விட்ட நாட்களில்
நாள் முழுவதும் வீட்டிற்குள் கிடந்து உழல்வாளாம்


      சொல்லிப் பார்த்திருக்கிறாள்,கெஞ்சிப் பார்த்திருக்கிறாள்,அழுதும் அடம்பிடித்தும்

உண்ணவிரதமிருந்தும் பார்த்திருக்கிறாள்.வீட்டில். ம்ஹும்......,,,மசியவில்லை,அவளுக்காக

அவளது வீட்டில் பிறப்பிக்கப்பட்ட 144 தளர்த்தப் படவில்லை.


     மனம் கிழிந்து,ரணமாகி துடித்த அவள், அனைவரும் அவளை வீட்டிற்குள் வைத்து

அடைத்துவிட்ட சென்று விட்ட ஒரு சுப யோக சுபமுகூர்த்த நாளில் மின் விசிறியில் சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டு படு கோரமாய் இறந்து போகிறாள்.


      அவள் இறந்து இன்றோடு ஒருவருடம் ஆகிறதுஇந்த ஒரு வருடத்தின் முடிவில் நம்முன்

சில மெகா சைஸ் கேள்விகள் எழாமல் இல்லை.இப்படியாய் சடுதியில் நடந்து முடிகிற கோர

மரணங்கள் எதை  அறிவிக்கின்றன
       இப்படியான கோர மரணங்கள் நிகழ காரணம் எதுவாக இருக்கிறது. இது மாதிரியான
நிகழ்வுகளைப் பற்றிதான நம்மின் பார்வையும் ,நமது சமூகத்தின் பார்வையும்தான் என்ன? இருமனங்களிலும் இழையோடிய காதலில் ஜெயித்து வாழ்க்கையில் வெற்றி கொள்ளும்
லட்சியத்துடன் முன்னேறுபவர்களை பிரித்துப் பார்க்கும் கோரப் பார்வை நமது சமூக
அமைப்பில் எத்தனை காலம்தான் நீடிக்கும்?
    அப்படி நீடிக்கிற கோரப் பார்வையை நீக்குகிற பொறுப்பும்,கடமையும் யாருக்கு உள்ளதாய்
நினைக்கிறோம் என்பதே இந்த எழுத்தின் கேள்வியாக./ 












4 comments:

தேவன் மாயம் said...

வருக நண்பா! பெற்றோர்கள் அவசியம் சிந்திக்க வேண்டிய விசயம்!

vimalanperali said...

நன்றி சார்.உங்களது வருகைக்கும்கருத்துரைக்கும்.

semban said...

sir i am lion ragupathi Erode
i saw all your blogs
very very different i like very much

vimalanperali said...

வணக்கம் செம்பன்சார்.நலம்தானே?உங்களைப்போன்றவர்களின் நல்லாசியும்,ஆதரவும் தொடரும்வரை எனது வித்தியாசங்களும் தொடரும் என்பது திண்ணம் எனவே படுகிறது.