24 Oct 2010

உன்மத்தம்




 



       சூடேறி குமிழ் விட்ட எண்ணெய்ச் சட்டியிலிருந்து அப்பளம் வறுத்தெடுத்துக் கொண்டிருந்த அவளின் முகம் முட்டி சமையலறை ஜன்னல் வழியாக வெளியேறுக்கிறது புகை.
   டானா வடிவ கடப்பக்கல் மேடை.அதன் மூலையில் பாத்திரம் கழுவும் ஸிங்க். மேடை அடியில் தண்ணீர்க் குடங்கள்,ஷெல்பில் மளிகைச் சாமான்கள். கேஸ் ஸ்டவ் ,சிலிண்டர்,கிரைண்டர், மிக்ஸி,குக்கர்,பத்திரங்கள் இத்தியாதிகளுடன் அவளும்.
அப்போதுதான் பிரஷர் வந்து கொண்டிருந்த குக்கரின் தலையில் விசிலை மாட்டி விட்டு வியர்வை பிசுபிசுத்த உடலுடன் குழம்பு வைத்திருந்த பாத்திரத்தை திறந்து கிண்டி விடுகிறாள்.கையோடு நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை எடுத்து சட்டியில் போடுகிறாள் வதக்குவதற்காக.
     அதற்குள்ளாக தாமதமாக எழுந்திருந்த கணவனுக்கு டீப் போடுவதில்,அல்லது போட்டிருந்த டீயை சூடு பண்ணிக் கொடுப்பதில் முனைகிறாள். இதற்கு ஊடாக அவளும் ஒரு டம்ளர் டீயை சாப்பிட்டுக்கொள்கிறாள்.
       அறைத்து வைத்திருந்த மாவை எடுத்து தோசை கேட்கும் கணவனுக்கு தோசையும்,இட்லி கேட்கும் பிள்ளைகளுக்கு இட்லியுமாக ஊற்றி வைத்து விட்டு........................,,,,,,,,,,,,,,,,,,,,,
பொடியாய் நறுக்கிய தேங்காய்ச் சில்லுகளையும், பொரிகடலையையும் மிக்சியில் போட்டு விட்டு......,,,,,
 இட்லி சட்டியை திறந்து பார்க்கும் அவளின் முகத்திற்கெதிரே இருந்த சமையலறை ஜன்னலிருந்து வந்த காலை நேர வெயில் அவளின் மேல் பட்டு அவளின் இருபுறமும் விலகி பிரிந்து வீட்டினுள் பிரவேசிக்கிறது.
   ஜன்னல் கம்பிகளின் ஊடாக வந்த வெயில் கற்றைகளில்,புகை கலந்து ஆவி பறந்து அவள் முகம் முட்டும் அந்த சமயங்களில் அந்த சமைலறையே ஒரு சின்ன தொழிற்சாலையாகவும்,அவள் அந்த தொழிற் சாலையின் இயந்திரம் போலவும் தெரிகிறாள்.
    அரிசி,பருப்பு,அரசலவு ,உப்பு,புளி,மிளகாய் என ஒருகையிலும்,
பாத்திரங்கள்,கரண்டிகள்,தோசைச் சட்டி,இட்லிக் குக்கர் என மறு கையிலுமாய் பகிர்ந்து கொண்டு உழலும் அவளுக்கு காலை எழுந்தவுடன் உடலின் இரண்டு பக்கங்களும் நான்கைந்து கைகளும்,இறக்கைகளும் முளைத்து விடுகிறதோ......... என சந்தேகம் கொள்கிற அளவுக்கு விரைவாக உழைக்கிறாள்.
      அந்த இறக்கைகளையும்,கைகளையும்,அவளின் வேலை வேகத்தையும் பார்த்த அவளின் மகன் சின்னவன் "அய்,அம்மா மிசின் வேகத்துல வேலை
செய்யுறாங்க" என்கிறான்.அவனது கணவன் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து பேப்பர் படிக்கிறான்.
இதில் அவள் என்பதும்,சின்னவன் என்பதும் ,கணவன் என்பதுவும் யார்,யாராக இருக்கிறார்கள்,?யார் யாராக உருவகப்படுத்தப்படுகிறார்கள்?வேறு யார்?நம்மையும், நம்மை சுற்றியுள்ள குடும்பங்கள் அனைத்திலும் உள்ளவர்களையும்தானே?

No comments: