28 Oct 2010

மினுக்கட்டாம்பூச்சி





 

    அவர்கள் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.தங்களின் முப்பது வயதை கடந்து விட்ட மகனுக்காக.
ஆறடி உயரம் நல்ல கோதுமை நிறம்.ஐந்து லகரங்களில் சம்பளம்.சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் "சூப்பர்வைசர்" உத்தியோகம்.அங்கேயே சொந்தமாக ஒரு வீடு. கம்பெனி கொடுத்த லோனில் கட்டியது.
இது தவிர கம்பெனி தந்திருக்கும் கார், டெலிபோன், இத்தியாதி,இத்தியாதி என வசதிகள்.பீடி,சிகரெட் ,தண்ணி,வெண்ணி"டாஸ்மாக்"...........,,,,,,,என எதுவும் கிடையாது அவனிடம். மிஞ்சி,மிஞ்சிப் போனால் டீ அவ்வளவுதான்.
கம்பெனி கம்பெனி விட்டால் வீடு நண்பர்கள்,சினிமா இதுதான் அவனின் வாழ்க்கை.
அவன் பத்தாம் வகுப்புப் படிக்கும் போது அவன் படித்த பள்ளிக்குவந்து அவனை "செலக்ட்"செய்து கொண்டு போனது அந்த பிரைவேட் கம்பெனி. அது ஆயிற்று பத்து வருடங்கள் அவன் அந்த கம்பெனியில் சேர்ந்து.அங்கு போய்தான் படிப்பு பட்டங்கள் எல்லாம்முடித்தான்.
சரியாக அவனது இருபத்தைந்தாவது வயதில் கம்பெனி கொடுத்த லோனில் சொந்தமாய் ஒரு வீட்டை கட்டி முடித்து விட்டான்.அதை நினைத்து பெருமைப் படாமல் இருக்க முடியவில்லை.
        இருபத்தைந்துவயதில்எனக்கெல்லாம் செங்கல்,சிமெண்ட்,கல்,மணல்,
கொத்தனார் தவிர எதுவும் தெரியாது.பழக்கமும் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இரவு செகண்ட்ஷோ சினிமா,ஹோட்டலில் சாப்பாடு,தனியாக அலைவது லேட்டாகத் தூங்குவது,பகலில் கண்களிலும்,உடலிலும் தூக்கத்தை அப்பிக் கொண்டு அலைவது.இவைகள்தான்.
ஆனால் அவன் அப்படியெல்லாம் இல்லை. 22 கேரட்./
       அதற்காக அவனுக்கு எத்தனை பெண்களைத்தான் பார்ப்பது ?கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறதுஇன்றோடு.
தெரிந்தவர்கள்,நண்பர்கள்.திருமணத்தரகர்கள்,திருமணத்தகவல் நிலையங்கள் இதரர்கள் என அனைவரின் மூலமாகவும் பெண்ணின்
ஜாதகங்கள் போட்டோக்கள் என வாங்குவதும்,பொருத்தமில்லை என திருப்பிக் கொடுப்பதுமான புறந்தள்ளல்கள் தொடந்து கொண்டே இருந்தது.
 நானும் பையனின் பெற்றோரும் ஒரு வீட்டிற்கு பெண்பார்க்கப் போயிருந்தோம். வழக்கம் போலவே காபி,டீ இனிப்பு,காரம் எல்லாம் முடிந்தது.பெண் நன்றாக கண்ணுக்கு லட்சணமாக இருந்தாள்.அவர்கள் எதிபார்த்த நிறம்,உயரம்,படிப்பு,அழகு,இத்துடன் M.A, BED முடித்துவிட்டு பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக வேலைபார்க்கிறாள்
சிறிதுநேரம்பேசினோம்,சிரித்தோம்,பகிர்ந்துகொண்டோம்.கிளம்பினோம்.
பையனின் பெற்றோர் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.பெண்ணின் ஜாதகம்,போட்டோ வாங்கிக் கொண்டு.
நான் வீட்டிற்கு வந்து விட்டேன்.அவர்கள் போன ஒருவாரத்தில் ஜாதகம்
பொருந்தவில்லை என கடிதம் வந்தது.
அப்புறமாக ஒரு பெண்ணைப் பார்த்தோம்.இப்போது நான் மட்டுமே
போனேன்,அவர்கள் சார்பாக.வழக்கம் போல வே இவர்களிடமும்
பெண்ணின் ஜாதகம்,போட்டோ வாங்கி அனுப்பிய ஒரு வாரத்தில் ஜாதகம்
பொருந்தியுள்ளது,பெண்பிடிக்கவில்லை என பதில் வந்தது.
நானும் அவர்கள் சார்பாக பெண்பார்த்து,ஜாதகம்,போட்டோ வாங்கி அனுப்பி
அலுத்துப் போன போதுதான் ஒருதகவல் வருகிறது.அவர்கள் இந்த ஒருவருட்த்தில் பார்த்த பெண்களின் எண்ணிக்கை 60 ஆகிறது எனவும்
ஆனாலும் இன்னமும் பெண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
எனவுமாய்./
   இந்த நேரத்தில் நமக்குள் எழும் கேள்வி தவிர்க்க இயலாததாகிப்
போகிறது.
60 பெண்களின் ஜாதகம்+போட்டேக்களையும் ஜாதகங்களயும்  பார்த்து 
60 ஐயும் புறந்தள்ளும்எருமைத்தோல்மனோபவத்துடனும்,ஒருவித
மன நோயாளியின் அறிகுறியுடன் அலையும் பையனின்  பெற்றோர்
தங்களது பையனை எந்த 
இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள்?
தங்களது பையனுக்காய் வரும் பெண்ணை எந்த இடத்தில் வைத்துப்
பார்க்கிறார்கள்.
  இப்படியெல்லாம் பார்க்கும் இவர்கள் பெண்களையும் சமூகத்தையும்
எப்படிப் பார்க்கிறார்கள்? என்பதே அது./

2 comments:

அழகிய நாட்கள் said...

விமலன்!
"மின்வெட்டாம் பூச்சி"யாக மாப்பிள்ளைப்பையன் இருப்பதாகத்தெரியவில்லை. பார்க்கும் பெண்களையெல்லாம் மின் வெட்டாம் பூச்சியாகப்பார்க்கும் நோக்கு பையனின் பெற்றோருக்கு இருப்பதாகவே எனக்குப்படுகிறது நண்பரே! "மெனக்கெடுதல்" போன்றும் தெரிகிறது. ஒரு விஷயத்தை அதற்கே உரிய நேர்த்தியோடு காலத்தே செய்ய முடியாதவர்களை மெனக்கெட்டவர்கள் என்றுகூட சொல்லலாம்.

vimalanperali said...

நன்றி தங்களின் மேலான கருத்துரைக்கு