28 Jan 2013

தப்படி,,,,,,


                        

காற்றடி காலம் என்பதால் இலைகளின் உதிர்வு அதிகமாய் உள்ளது போலும்..

பிரஷ்ஷை வலதுகையிலும் ,பல்பொடியை இடது கையிலுமாய் தட்டி வைத்துக்கொண்டு  ஏணிப்  படியோரம் நிற்கையில்தான் தோணுகிறது.ஏணிப்படிகளையும் மொட்டை மாடியையும் கூட்டிவிடலாம் என/

சதுரச்செங்கல் மின்னிய மொட்டை மாடியின் தரைப்பகுதியெங்கும் சிதறிக்கிடந்த இலைகள் புங்க மரத்திதும்,வேப்பமரத்திதுமாய்இருந்தன.

நேற்றுகாலையிலேயே பார்த்துவிட்டேன்.ஏதோ வேலை அல்லது நேரமின்மைக்காரணம். நினைத்திருந்த வேலைதட்டிப்போய் விட்டது. இத்தனைக்கும் நேற்று லீவு நாள்தான்.முழுநீள லீவு நாள்என்றபோதிலும்கூட.   

ஏதோ பிறண்டு விட்ட அல்லது பொறுப்பற்ற தனத்தின் விளைவோ என்னவோ நேற்று மனதில் சூழ்க்கொண்ட அந்த வேலையை இன்று முடிக்கலாம் என விளக்குமாரை கையிலெடுத்துக்கொண்டு ஆயத்தமாகி விடுகிறேன். ஒன்று,இரண்டு,மூன்று,,,,,,,என தனது நெற்றியில் ரோஸ்க் கலரை பூசிக்கொண்டுசிரித்தபடிக்கட்டுகள் பதினைந்தைக் கடந்துமேலேறுகிறேன்.வழக்கமில்லாத வழக்கமாய் இன்று அதிகாலை நான்கு மணிக்கு வந்து விட்ட விழிப்பு ஒரு மணிநேரம்கழித்துகொண்டு போய் நிறுத்திய இடம் பெரியவரின் டீக்கடையாக இருந்தது.

விழிப்பு கொள்ள வைத்து விடுகிற அதிகாலைகள் நேர்கோடிடும் இடம் பெரும்பாலான நாட்களில் அந்த  டீக்கடையாகவே இருந்துள்ளது. “சீக்கிரம்தான் எழுந்து விட்டீர்களே, அப்படியே பாலை வாங்கி வந்து விடுங்கள்”,என்கிற மனைவியின் சொல்லுக்கு கட்டுப் பட்டவனாய் தூக்குச் சட்டியை தூக்கிகொண்டு கிளம்பி விடுவான்.அது ஒரு மனோ நிலை.சில நேரம் பால் வாங்கச் சொல்லும் மனைவியை எரிச்சல் மிக பார்க்க வேண்டி இருக்கும். அவளும் புரிந்து கொள்வாள் அல்லது அவளே போய் வாங்கிவந்து விடுவதும்  உண்டு. ”இந்நேரம் பெண்கள் அதிகமாகநிற்பார்கள்பால்வாங்க,நான்போய்அங்கு நிற்பது தர்மசங்கடமாய் இருக்கும்,ஆகவே நீயே போய் வாங்கி வந்து விடு” என்பதுவே அவனது சொல்லின்  சுருக்கமாய் இருக்கும்.

பெருத்த தொந்தி மீது போர்த்தப்பட்டிருந்த ப்ரெளன்க்கலர் பனியனும் வெள்லைக்கலர் வேஷ்டியுமாக நின்றஅவர் என் தலையைப் பார்த்ததும்டீயை ஆற்றி விடுகிறார்.

எத்தனை பேர் வந்த போதும்சரி.அந்தஅரைலிட்டர்படியில்ஆற்றியடீயைகேஸ் அடுப்பின் இரண்டாவது பர்னரில்சுடவைத்து விடுவார்.மிதமான சூட்டுடன் பக்கத்தில் முதல் பர்னரில் வெந்து கொண்டிருக்கிற ஈயச் சட்டியில் நுரைத்துக்கொண்டிருக்கிற பால் அரை லிட்டருக்குள்ளிருக்கிற  டீயைப் பார்த்து கண் சிமிட்டும்.

பாட்டிலினுள்அடைப்பட்டுக் கிடக்கிறகடலை மிட்டாய்,முறுக்கு,மற்றமிட்டாய் வகைகள்  அவரின்தலைமீதுதொங்குகிற  பாக்குகள்அடுக்கப்பட்டிருக்கிற சிகரெட் பாக்கெட்டுகள் எல்லாம்சேர்த்துஅதைடீக்கடை எனஉருவகப்படுத்தி அடையாளம் காட்டிவிடும். வெகு முக்கியமாய்  பால்ச்சட்டியிலிருந்து வருகிற ஆவியையும் சேர்த்து/

டீக்கிளாஸை கையில் வாங்கும் போதுதான் கவனிக்கிறேன்.கடையின் நடையிலிருந்த பக்கவாட்டுச்சுவரில் இங்கு சிறந்த முறையிலும்,குறைந்த செலவிலும் UBS வேலைகள் செய்து தரப்படும் என எழுதப்பட்டிருந்தவாக்கியங்களின்கீழ்எலெக்ட்ரீசியனின் பெயரும் அவரது போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.பத்திலக்க எண்னை திரும்பத் திரும்ப மூன்று முறை படித்ததில்  ஈஸியாய் மனப்பாடம் ஆகிப்போனது.

கடந்த மூன்று மாதங்களாய் வேகம் குறைந்து ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிற மின்விசிறியை ரிப்பேர்ப்பார்க்கவும், போஸ்ட் மரத்திலிருந்து வீட்டுக்கு வருகிற மின் வயர்கள்  மூன்றில் ஒன்று பிரிந்து தொங்குகிறதை சரிசெய்யவும் ரொம்பநாட்களாய்ஆள் தேடிக் கொண்டிருந்தான்.வருகிறேன்எனச்சொல்லியஎலெக்ட்ரீஷியன்வேறுவேலைஇருப்பதாகசொல்லிச் சென்றுவிட்டார்.

இப்போது இந்த நம்பர் மிகவும்உதவும் போலத்தெரிகிறது. அந்த வேலைக்கு. டீக்கடைக் காரரிடம் அந்த நம்பருக்கு உரியவர் யார்,எங்கிருக்கிறார்?என கேட்டு விட்டு வீட்டுக்கு வருகிறேன்.வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் டீக்கடைசுவரில் தெரிந்த நம்பர்களை மனதில் கொண்டு நம்பர்களை அழுத்தியபோது எதிர்முனையில் எலெக்ட்ரீசியன்சொன்னார். ”இதோ வந்து விடுகிறேன் அரை மணி அல்லது முக்கால் மணியில்”/  என்கிற  பேச்சுடன் துண்டிக்கப்பட்ட போன் பேச்சை மனதில் தாங்கியவனாக பலபொடியும்,பிரஷ்சுமாய் படியோரம் நிற்கிறேன்.

கடைசிப்படித் தொட்டதும் விரிந்த மாடிவெளி இலைகளை அதன் மாரில் போட்டு தாலாட்டியவாறாய் காட்சிபடுகிறது. மாடியின் கைபிடிச்சுவரின்நான்கு மூலைகளிலுமாய் காற்றால் குவிக்கப்பட்டிருந்த இலைகளும் மாடிப்பரப்பெங்குமாய் சிதறி விரிந்திருந்த இலைகளுமாய்என்னைப்பார்த்துசிரித்த போது நான் கையிலிருந்த விளக்குமாரை தரை பதிக்க ஆரம்பிக்கிறவனாய்/

நான்கைந்து தடவைகள்தான் கூட்டியிருப்பேன்.பாட்டுக்கேட்பதற்காய்கையில்கொண்டு போன செல் போன்மெல்லச்சிணுங்கஆரம்பிக்கிறது.எடுத்துகாதுகொடுத்தபோது
எலெக்ட்ரீசியனே தான்.

”வந்து விட்டேன்.உங்களது வீடு இருக்கிற இடம் நோக்கி,நீங்கள் அடையாளம் சொன்ன இடத்தில்நிற்கிறேன்.என/

கையிலிருந்தவிளக்குமாரையும்,கூட்டியகுப்பையையும், சட்டயணியாத எனது வெற்று மேனியில் விழுந்து இதப்படுத்திய வெயிலையும், சற்றே புறம் தள்ளியவனாகவும் அல்லது அப்படியேவிட்டுவிட்டவனாகவும் செல்கிறேன், அவர் நிற்பதாய்சொன்னஇடம் நோக்கி/

ரொம்பவுமெல்லாம் இல்லை.எனது வீட்டிலிருந்து சிலமீட்டர்தூரத்தில் நின்றிருந்தஅவருக்கு  கையசைத்தவாறேபடிகளில்இறங்கிவருகிறேன். அவர் நின்றிருந்த இடம் கார்மேகம் டெய்லர் குடியிருந்த சந்து .

அந்த  சந்துதான்  எனது  மற்றும் நான் குடியிருந்த தெருக்காரர்கள் அனைவருக்குமான
பாதையாய் இருந்தது.எங்கள் அனைவருக்குமான பாதையும் வழியும் அதுவல்ல. சொல்லப்போனால் அது எங்கள் தெரு முட்டுச்சந்து.எங்களது தெருவின் கடைசிவீடு வரை சென்றுவிட்டு வந்த வழியேதான் திரும்பவேண்டும்.

ஆனால் எங்களது கடந்த வீதியில்தான் அந்த சந்து இருந்தது.அந்த சந்தில் இருக்கிற முதல் வீட்டுக்காரர் நினைத்தால் இப்பொழுது கூட சந்தை சுவர் வைத்து எழுப்பி மறைத்து விடலாம்.ஆனால் அவரின் விசாலமனதோ அல்லது அவரிடம் சுவர் எடுக்க காசில்லையோ தெரியவில்லை.அப்படியேவிட்டு விட்டார். அதுவே தற்பொழுதான் எங்களின் நடைபாதையாகிப்போனது.

“இதுஎதுக்குமில்லுக்காரரு  வீடுன்னு சொன்னாலே வந்துருப்பேன்ல”,என்றார்.தரையில் கிடந்த சின்னக்கல் ஒன்றை எத்தியவாறே/

“பரவாயில்ல,இப்பஎன்னஅதுக்குவாங்க,நான்எலெக்ட்ரீசியன்னாயாரோவந்து நிப்பாரு ---ன்னு  பாத்தா நீங்க வந்துநிக்குறீங்க,நீங்கநம்மாளுல்ல,,அப்புறம்பால்யேவாரமெல்லாம் எப்பிடியிருக்கு இப்ப?,,என்ற என்னை ஏறிட்ட எலெக்ட்ரீசியனின்  ஒரிஜினல் முகம் பால்க்காரர் என்பதே/பால்க்காரர்,பால்க்காரர், .,,,,,என பலரால் பெயரானவர்  நான்  பார்த்த நாளிலிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.மெயின் ரோட்டிலிருக்கிற கல்யாண விநாயகர் பால்ப்பண்ணையிலிருந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பால் வாங்கி வந்து ஊற்றுவார்.

அல்லி தெரு ,முல்லைத்தெரு மல்லிக்கிட்டங்கி தெரு,நாராயணா நகர், விவேகாந்தா காலனி ,எம்ஜியார்நகர்,,,,,, இன்னும் சிலதெருக்களுக்குஊற்றுகிற பால்தான்  காலையும் மாலையும் காபியும்,டீயும்,மோரும் தயிருமாய் இருந்தது.

வந்தவர் காலை தாங்கித்தாங்கி வருகிறார்.ரத்தக்கட்டு எனவும் சென்றவாரம் சைக்கிளில்  இருந்து விழுந்து விட்டதாகவும் சொன்ன அவர்,அவ்வளவு கனமான கேன் வைத்து பால் வியாபாரம் செய்தநாட்களில்கூடசைக்கிள்ஒருதப்படிஅக்கம்,பக்கம் சென்றதில்லை. ஆனால் எலெக்ட்ரீசியனாய் திருப்புளி பிடித்த பிறகு சைக்கிள் தடுமாற ஆரம்பிக்கிறது என்றார்.

இடது கால் பாதமது,வீக்கம் கண்டிருந்த பகுதியில்சுண்ணாம்புதடவிகாய விட்டிருந்தார். சீனியும்,சுண்ணாம்பும் கலந்துபோட்டபத்துஎன்றார்.ரொம்பவும்தான் காலைத்தாங்கினார். இப்படி காலைத் தாங்குறவரிடம் எப்படி வேலை சொல்ல என்கிற எண்ணம் வராமல் இல்லை என்னில்/

வீட்டினுள் வந்தவர்  டேபிள் கேட்டார். நான் ஸ்டூல்தான் இருக்கிறதுஎன எடுத்துக் கொடுக்கிறேன். மின் விசிறியை கழற்றிப்பார்த்தவர் ”கண்டன்சர்”போயிருக்கிறது, புதுசாகத்தான் வாங்கிப் பொருத்த வேண்டும் எனவும் இப்பொழுதே போய் வாங்கி வந்து விடுங்கள்,கையோடு மாற்றி விடலாம் என்கிறார்.நான் கடை இருக்குமா இந்நேரம் என பதிலுக்கு கேட்டவுடன் இருங்கள் வருகிறேன் என தனதுபையிலிருந்து ஒன்றை எடுத்து கொண்டுவந்து மாட்டுகிறார்,  புதுசுதான்,வாங்கினேன்  தேவையில்லாமல் போய்விட்டது என்றவாறு வந்து மாட்டுகிறார்.

மாட்டிய பொருளுக்கு 35 ரூபாய்.தனக்குக் கூலியாக நீங்கள் பார்த்து ஏதாவது கொடுங்கள் என்கிறார்.

எனக்கு கூலியின் நிதானம் தெரியவில்லை.என்னிடம்சில்லைறைரூபாய்களும் இல்லை. மனைவியைக்கூப்பிட்டு நூறு ரூபாய் வாங்கிக் கொடுத்தேன்.இன்னும் குறைத்துக் கொடுத்திருக்கலாமோ என்கிற எண்ணத்துடன்/

ரூபாயை வாங்கிக்கொண்டு கிளம்பும் போது அவரிடம் கேட்கிறேன்.எப்பிடி காலையில பால் ஊத்தீட்டு மத்த நேரத்துல இந்த வேலையப் பாத்துக்கிறதா/எனக்கேட்ட போது இல்ல சார்,இப்ப பால் ஊத்தலயில்ல,அத வுட்டு ஒரு வருசம் ஆச்சு,இப்ப எலெக்ரிக்கல் வேலௌயும்,பிளம்பிங் வேலயும்தான் முழுசா,என்றவரிடம்,,,,போன மாசம் பொண்ணுக்கு  ஒடம்பு சரியில்லைன்னு டாக்டருகிட்ட கூட்டீட்டு வந்தீங்களே, எப்பிடியிருக்கா? என்கிறேன்.

“நல்லாயிருக்காசார்.பத்தாம்வகுப்போடபடிப்பநிறுத்தீட்டேன்,மாப்புளபாத்துக்கிட்டிருக்கேன்  என கிளம்புகிறார்.

9 comments:

ezhil said...

உங்களின் அனுபவம் அழகான உங்கள் வரிகளால் மெருகூட்டப்பட்டிருக்கிறது. தப்படிக்குத்தான் எனக்கு அர்த்தம் தெரியவில்லை...

உஷா அன்பரசு said...

அன்றாட நிகழ்ச்சியை ரசித்து சொல்லியிருக்கிறீர்கள்.

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் எழில் மேடம் சொல்ல விட்டுப்போனது தப்படி என்றால் நமது காலடியே,எட்டு எடுத்துவைத்தல்/

சேக்கனா M. நிஜாம் said...

நல்ல எழுத்து நடை !

தொடர வாழ்த்துகள்...

vimalanperali said...

நன்றி சேக்னா நிஜாம் சார்.

அன்புடன் மலிக்கா said...

அன்றாட நிகழ்வுகளின் பிரதிபளிப்பு, பாராட்டுகள்..

vimalanperali said...

வணக்கம் மல்லிக்க அவர்களே.நன்றி தங்களின் வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/