23 Jun 2013

எழுதிச்சென்ற பக்கம்,,,,,,,


                      

மிகச்சரியாக மூன்றுதான்,ஒன்று கூடி நான்கோ அல்லது ஒன்று குறைந்து இரண் டோ அல்ல.
உருட்டபட்டு வட்ட வடிவில் தேய்க்கப்பட்டிருந்த பூரிமாவின் வடிவுகள் அவை.வட்ட வடிவில் யாரோ ஒரு கை தேர்ந்த ஒவியன் வரைந்தெடுத்த ஓவியம் போல காணபட்ட அவைகள் அலுமினிய தேக்சா மூடியின் மீது பரப்பியும்,ஒன்றின் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டுமாய்/

அப்படிகூட்டுறவாய்அமர்ந்திருந்தஅவைகளைதனது வலது கையால் எடுத்து இடது கையில் வைத்துக்கொள்கிறார்.வலது கையால் கொதிக்கிற எண்ணெய்யில் வெந்து கொண்டிருக்கிற பொன் நிறம் காட்டிய பூரிகளை கையகலம் கொண்ட கண் கரண்டியால் அரித்தெடுக்கிறார்.

”என் கண்ணில் எண்ணெய் வழிந்தால்”என இறங்கிச்சொட்டுகிற எண்ணெய் ஒழுக லுடனும் தன் கையில் தாங்கிக்காட்டிய பூரிகள் மூன்றுடனுமாய்இருந்தஅவைகளை கரண்டியுடன் சட்டியின் விளிம்பில் தாங்கு கொடுத்து அப்படியே உட்கார வைத்து விட்டு இடது கையில் இருந்த வட்ட வடிவ பூரியின் வடிவை வலது கைக்கு மாற்றி  எண்ணெய் கொதிக்கும் சட்டியி னுள் வீசுகிறார்.

ஒருகிலோமீட்டர் அகலத்திற்கோ,அல்லது கால் பர்லாங்கின் சுற்றளவிற்கோ தன்னை  காட்டிக் கொள்ளவில்லை சட்டி.சின்னதாய் கைக்கு அடக்கமான சட்டிதான் அது. அதில்தான் இத்த னையும் செய்கிறார் அவர்.

ஒரேசீராக எரியும் ஸ்டவ்வின் மீது அகல விரிந்த தீ ஜ்வாலையின் மீது அமர்ந்திருந்த அந்த இரும்புச்சட்டி அதனுள் ஊற்றப்பட்டிருந்த அரைச்சட்டியின் அளவேயான எண்ணெயையும் அதில் வெந்து கொண்டிருக்கிற பூரிகளையும் சுடப்படுவதற்காய் வீசப்படுகிற பூரிமாவின் வட்ட வடிவங்களையும் உள்வாங்கிக்கொண்டுமாய் காட்சியளிக்கிறது.அப்படிஇருந்த இரும்புச் சட்டிசற்றேகரிப்பிடித்தும்,தன்கருநிறம்காட்டியுமாய்/

தண்ணீர்ஊற்றிபிசையப்பட்டமாவை உருண்டைகளாய்உருட்டிஅதை வட்ட வடிவில் தேய்த் தெடுத்து எண்ணெய் கொதிக்கிற சட்டியில் சுட்டெடுக்கிறவரின் வேலை அன்றாடம் அது வாகத்தான் இருக்கிறது.

சற்றே பொன் நிறமாயும் வெள்ளையாயும் கலர் காட்டி வட்டவடிவில் சுட்டெடுக்கப் படுகிற பூரிகள்சட்னி,சாம்பார்,மற்றும்உருளைக்கிழங்குமசாலாவுடன்சேர்த்துசாப்பிடக்கொடுக்கப்படுகிறதுபார்சலாகவோஅல்லதுகடையில்அமர்ந்துசாப்பிடுபவர்களுக்கோ/

திருப்பதிகடையில்எப்போதுமேஇந்நேரம்ரெடியாகஇருக்கும்.என்னவெனதெரியவில்லை.இன்னும் ரெடியாகவில்லை.ஆரம்பத்தில்சைக்கிள்க்கடை வைத்திருந்தவர். கடை நடத்தி கட்டுபடி ஆகவில்லையா அல்லது முடியவில்லையா,இல்லை சமாளிப்பது கடினமாக இருந்ததா தெரியவில்லை.கேட்டதில் வம்பு போலீஸ் கேஸ் என நிறைய வருவதாய்ச்சொன்னார்.

நன்றாக கடை நடந்து கொண்டிருந்ததாய் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த ஓரு நாளின் இரவு சைக்கிள்களை கைமாற்றி விட்டு ஒரு வாரத்திலேயே கடை இருந்த இடத்தை விரிவு செய்தும்,செமன் செய்தும் ஓட்டல் ஆக்கிவிட்டார்.

நன்றாகத்தான்ஓடிக்கொண்டிருந்தது,இப்பொழுதுவரை நன்றாகத்தான் ஓடிக்கொண் டும் இருக்கிறது.என்ன செய்ய பாலாய்ப்போன போதைப்பழக்கம் ஆளையே உருமா ற்றிப் போட்டு விடுகிறதுதே/

இரவு மணிபத்தைத் தொட்டுவிடக்கூடாது. ஒயின்ஷாப்பக்கம் நகன்றுவிடுகிறார், எத்தனைக் கூட்டம் கடையில் இருந்த போதும்.

முதலில் இரவில் கடைக்கு வருபவர்கள் யாராவது வற்புறுத்தினால் மட்டுமே குடித்தவர் இப்போதெல்லாம் பகலில்கூட,,,,/

போதையில் சிவந்திருக்கிற கண்களுடன் அவர் வணக்கம் சொல்லி மரியாதை தெரிவிக் கிறதை அவர் மேல் நல்லமதிப்புவைத்திருந்தவர்கள்கூடவிரும்பவில்லை.கடைக்கு வருவதைத் தவிர்க்கவும் திருப்பதியை  பார்பபதை தள்ளிப்போடவுமாய் விரும்பினார்கள்.இப்படி இருந்தநேரத்தில்அவனைப்பார்த்தால்நல்லமரியாதையுடன்பேசும்திருப்பதிஇப்பொழுதெல்லா ம் அப்படி இருப்பதில்லை என்றாலும் கூட பழகிய பழக்கத்திற்காய்,,,,,,,,,,

கடையை நெருங்கி விட்டிருந்த நேரம் அங்கு இன்னும் பூரி ரெடியாகவில்லை எனத் தெரிந்தது. இட்லி ரெடியாகி இருக்கலாம்,அல்லது தோசை கேட்டால் ஊற்றித் தரலாம். ஆனாலும்அவன்பூரிதான் வாங்க வேண்டும் என நினைத்துத்தான் வந்தான். அவனது பையனுக்கு பூரி என்றால் கொஞ்சம் இஷ்டம்.மதியச்சாப்பாடு டிபன் பாக்ஸிலும்,நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டிலுமாய் அடைபட்டிருந்த வயர்க்கூடையில் வைக்கப்படாத காலை டிபனை வாங்க வந்திருந்தான்.

இன்றைக்கு கேம்ஸ் என காலை ஆறரை மணிக்கெல்லாம் ஹாக்கி பேட்டுடனும், பந்துட னுமாய் சென்றுவிட்ட மகனுக்கு 8.40ற்குள்ளாக சாப்பாடுகொண்டுபோய் கொடுக்க  வேண்டும்.

9 ஆம் வகுப்புப்படிக்கிற அவனுக்கு கேம்ஸ்ஸில் நிறைய ஆர்வம் உண்டு. அவனது விருப்பப்படியே ஹாக்கிடீமில் சேர்ந்துவிட்டான்.விருப்பம் மட்டுமில்லை. ஸ்போர்ட்ஸ் கோட்டா,,,,,,வேலை,,,,,,,,,என்கிறபேச்சையும்உள்ளடக்கிவைத்திருக்கிறான்.”பையன்களாய் ஸ்கூலில் பேசுவார்கள் போலிருக்கிறது, நம் காலத்தில் எல்லாம் இதெல்லாம் எங்கே தெரிந்தது நமக்கு” என அவனும் அவனது மனைவியுமாக பேசிக் கொள் வார்கள்,மகன் அப்படி சொல்கிற சயங்களில்/

இதோ ரெடியாகிவிடும் பத்து நிமிடங்களில்,நீங்களும் கூட கிளம்புங்கள்.இன்னும் எதற்குஅவன்படிக்கிறபள்ளிக்குப்போய்திரும்பவருவானேன்? மூன்றும், மூன்றுமாய் ஆறு கிலோ மீட்டர் நீள்கிற இழுவைதூர பயணத்தில் தென்படுகிற காட்சிகளும், தொற்றிக் கொள்கிற எண்ணங்களுமாய் கூடவே வேஸ்டாய் செலவாகிற பெட்ரோலும் எதற்கு வீண் செலவு?அதுதான்ஏற்கனவேகுளித்துரெடியாகித்தானேஇருக்கிறீர்கள்?

,பேண்ட்சட்டையைமாட்டிகொண்டால் ஆயத்தம் என்ற குரலுடன் ரெடியாகி விடுகிற தன்மை வந்து விடும்.என்றைக்கும் இல்லாத அதிசமாய் இன்றைக்கு அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்து 6.00 மணிக்குள்ளாய் குளித்து ரெடியான அதிசயம் நடக்கும் போதே நினைத்தான்,அது இப்படி ஒரு தற்செயல் ஒற்றுமையாய் ஆகிப் போனது ,அதுவும் நல்லதற்கே எனச்சொன்ன அவனின் மனைவி மகனுக்கான மதியச்சாப்பாட்டையும் தண்ணீர் பாட்டி லையும் வயர்க்கூடையில் வைத்துக்கொடுத்த நேரம் மணி காலை எட்டை எட்டித் தொடப்போகிறதாய்/

பூப்போட்ட சேலையில்சிறுபிள்ளைபோல இருந்தாள்.அவளிடம் கேலியாக அடிக்கடி சொல்வதுண்டு.”உன்னை யாரும் பெண் கேட்டு வந்து விடாமல்,அப்புறம் என் பாடு சிக்கல் ஆகிவிடும்” என/

அம்மாவை கேலி பண்ணாமல் இருக்க முடியாது உங்களால்  என அதற்கு பதில் மொழி நவிழ்கிற மகள்”கல்யாண வயச நெருக்கி  நான் இருக்கையில  அம்மாவப் போயி ,,,,,,,, போங்க ப்பா என பொய்க்கோபம் காட்டுவாள்.கல்லூரியில் இளங்கலையில் மூன்றாமாண்டை குத்தகைக்கு எடுத்திருக்கிறவள்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அண்ணா போன் பண்ணி விட்டார். சென்னை யில இருந்து நண்பர் ஒருத்தர் வர்றாருப்பா,அவர ரயில்வே ஸ்டேஷன்ல ரீசீவ்பண்ணி எங்க சொந்தக்காரங்க வீட்ல விட்டுருப்பா என அவர் அடையாளம் இட்ட இடம் தோழரின் வீடாய் இருந்தது.

நண்பர் என அண்ணா குறிப்பிட்டவர் ஒரு பொது நலவாதியாய் இருந்தார்.

காலை 6.05ற்கு வரவேண்டிய ரயில் இன்னும்வரவில்லை.ஒருமணிதாமதமாகும் என்றார்கள். அதுவும் ஒரு வகைக்கு நல்லதாகவே போயிற்று, கையில் பெரிதாக அவன் எதுவும் பணம் கொண்டுவரவில்லை.ஆட்டோவிற்கு,அண்ணாவின் நண்பரு டன் சேர்ந்து அருந்த டீக்கு என எதற்குமே பணம் கொண்டு வரவில்லை,பத்து ரூபாயை மட்டுமே பையில் வைத்துக்கொண்டு எந்த தைரியத்தில் வந்தான் எனத் தெரியவில்லை.

இனி வீட்டிற்கு போய்விட்டு வரும் போது கையில் ஒரு இருநூறு ரூபாயாவது கொண்டு வர வேண்டும்.ரயில்வே ஸ்டேசனுக்கும், அவனது வீட்டிற்கும் இரண்டு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். சர்வேயர், மைக்கல் எல்லாம் இல்லாத உத்தேசக் கணக்கு இது/

அண்ணா சொன்ன நண்பரிடம் போன் நம்பர் வாங்கிக்கொண்டு அண்ணாவிடம் விஷயத்தைச்சொல்லி ரயில்வே ஸ்டேசனின்  சூழலிலிருந்து விடை பெறுகிறான். இந்த இடை வெளியில் வீட்டிற்கு போய் பையனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தானும் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம் என்கிற முடிவுடன் வீடு வந்து சேர்ந்த போது பிடாரனின் மகுடிக்கு சொக்கி ஆடுகிற பாம்பு போல மனம் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு தலையாட்டிக் கொண்டிருந்தான்.

இன்னும் அரை மணியில் ரெடியாக வேண்டும்.சூரியன் வெளிச்சம் காட்ட ஆரம்பித்து விட்டான்.அவனது வேலை அவனுக்கு,இவன் வேலையை இவன் செய்ய வேண்டுமே?என எண்ணம் பூத்தவனாய் இருசக்கரவாகனத்தை வீட்டின் ஓரமாய் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

சற்றெ நாட்களுக்கு முன்புவரை நின்ற இரண்டு வேப்பமரங்களும்,இரண்டுபன்னீர் மரங்களும் இப்போது இல்லை.போர்க்குழியின் அருகே முளைத்து நின்றதால் அனுமதியில்லாமல் அதனுள் நுழைந்து குழியை மூடிவிடும் ஆபத்து இருக்கிறது.தவிர வீட்டின் சுவரருகே இப்படி வேப்பமரங்களை வளரவிடுவது பெரும் தவறு.அஸ்திவாரக்குழிக்குள் சென்றுவிடக்கூடும். ஆகவே வெட்டி விடுங்கள் நாலாம் பேரிடம் கருத்துக்கேட்காமல்,என யாரோ எப்போதோ சொன்னது ஞாபகத்திற்கு வர அவர்கள் சொல்லிய ஒரு வருடத்திற்குள்ளாக அவர்கள் சொன்ன சொல்லின் ஈரம் காயும் முன் அதன் வடு தெரிய இருபது நாட்கள் முன்பாக வெட்டிய மரங்கள் இப்போது இல்லாதிருந்தாலும் கூட இரு சக்கரவாகனத்தை நிறுத்தும் போதெல்லாம் தன் உருக்காட்டி அசைந்து நிற்பதாய் ஒரு நினைவு அவனுக்குள்/

வெட்டிய இலைகளையும்,சிலும்புகளையும் குப்பையாய் ஒரம் கட்டி விட்டு வெட்டிய மரத்தை மட்டும் துண்டு போட்டு மரம் வெட்டியவர்கள் எடுத்துப்போன பின் அவர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை கூட்டி அள்ளி எரிக்க மிகவும் சிரம்பட்டுப் போனான.அவைகளை கூட்டி எரித்த மறுநாள் உடல் வலி மிகுதியாகி காய்ச்சலில் போய் சுழியிட்டது.அப்புறமாய் ரவி சுப்பரமணியம் டாக்டரிடம் போய்தான் அந்த சுழியை எடுக்க வேண்டியதாகிப்போனது.

ரவிசுப்ரமணியம் அவன் குடியிருக்கிற ஏரியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாய் இருப்பவர் இன்றளவுமாய்.இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து தனது மருத்துவ வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியிட்டவர்.

நெட் கனெக்‌ஷன் கிடைக்கவில்லை சரியாக,ஒவ்வொருமுறையும் கம்ப்யூட்டரில் பணி செய்கிற போதும் தேவுடுகாத்தது போல காத்திருக்க வேண்டியிருக்கிறது. கம்ப்ளெயிண்ட் கூட புக் பண்ணி விட்டேன் என ரயில்வே ஸ்டேசன் போய் திரும்பு கையில் எதிர்ப்பட்ட வெங்கடேஷ் அண்ணனிடம் சொன்னேன்.அவர் அங்கு பணிபுரிபவர்.

வேல மூர்த்தி சாலையிலிருந்த அக்கா கடையில் நீயூஸ் பேப்பர் வாங்கிக் கொண்டிருந்தார். அந்நேரமே நீட்டாக பேண்ட் சர்ட் அணிந்து இன் பண்ணியிருந்தார்.”தம்பி நம்பளப் பாத்தா நாலு பேருக்குஉற்சாகம்வரணும்தம்பி,டல்லாயிரக்கூடாது, அதுக்காக நம்ம ஒண்ணும் பெருசா மெனக்கெடனும்ன்னு இல்ல, என்பார்.

யாரது வெங்கடேஷ் அண்ணனா இப்படிப்பேசுவது?ஒரு காலத்தில்,,,ஒரு காலத்தில் என்ன?சற்றே பிந்தைய ஐந்து வருடங்களுக்கு முன்புவரை ஐந்தரை அடி உடம்பை சின்னோண்டான சாராய பாட்டிலுக்குள் அடைத்துக்கொண்டு திரிந்தவர்.எங்கு பார்த்தாலும்,எப்போது பார்த்தா லும் போதை நிரம்பிய விழிகளுடனும், உடலுடனும், நடையுடனுமாய் திரிந்தவர்.

அவரது அம்மா அவனிடம் சொல்லி அழுகாத நாள் இல்லை .எனக்கு மட்டும் ஏன்பா இப்பிடி?குடிச்சிட்டுகண்டயெடத்துலஅவன்விழுந்துகெடைக்கையிலமனசு கதருதுப்பா.அட அதுதான் பரவாயில்லைன்னு விட்டா எந்நேரம் யாரு கூட வம்புஇழுத்துட்டு வந்து நிக்குறான்னு சொல்ல முடியலப்பா,,,,,,,,என்கிற பேச்சுடனும் அழுகையுடனுமாய் வெங்கடேஷ் அண்ணனின் தாயார் வந்து சொல்கிற ஒவ்வொரு நாளும் அவனுக்கு சங்கடமாய் இருந்ததுண்டு. மிதமிஞ்சிய போதையில் எங்காவது விழுந்து கிடக்கிற வெங்கடேஷ் அண்ணனை தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்த நாட்களும் உண்டு.அதையெல்லாம் எப்போதாவது அவரைப்பார்க்க நேர்கிற சமயங்களில் நினைக்க வாய்க்கிறதுண்டு.அப்படியெல்லாம் இருந்த அவர் இப்படிச் சொல்வது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/

அவருடையஇந்தமாற்றத்திற்குக்காரணம்அவரின்சொந்தங்கள்தான்எனச்சொல்கிறார்கள். சிதைந்து கிடந்த வெங்கடேஷ் அண்ணனை கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி அவரின் உடலில் இருக்கிற அனாவசியங்களை எடுத்தெரிந்து விட்டு அத்தியாவசி யத்தை மட்டுமே அவரின் முழு உருவாய் ஆக்கி அவரின் ரத்தமும் ,சதையுமான உடலுக்கு புத்துயிர் ஊட்டிய வர்களும்,புது அர்த்தத்தைக் கொடுத்தவர்களுமாய் ஆனவர்கள்.

வெங்கடேஷ் அண்ணனை இன்று இந்த அளவில் அடையாளப்படுத்தி வைத்திருக்கிறவர்க ளாய்சொல்லப்பட்டார்கள்.அப்படிஅடையாளப்படுத்தப்பட்டஅவர் இப்போதெல்லாம் பாட்டிலு க்குள் அடைபட்டுத்தெரியாமல் இவருக்குள் பாட்டிலை சிறைபடுத்தி வைத்திருக்கிறார்.

அவரில்அடையாளப்பட்டுத்தெரிந்தஇந்தவித்தியாசம்அவரினுள்முளைவிடஆரம்பித்த நாளிலிருந்து பளிச்னெஸூம்,பிரெஷ்னெஸூமாயும், அதிகாலைக் குளியல், அன்றாடம்ரோமக் கட்டைதட்டாதஷேவிங்,நல்லதாய்உடுத்துதல்என்கிறஅடையாளங்கள் அவரின் மேல்ச்சட்டை ஆகிப்போகிறது.

அப்படியானஅடையாளம்முளைவிட்டுப்போனநாளிலிருந்துபாட்டிலையும்,போதையையும் ஓரம் கட்டிவிட்ட அண்ணன் வெங்கடேஷிடம் சொல்லிவிட்டு வந்த வேலை அனேகமாய் முடிந்து விடும்.நான் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் எனவுமாய் சொல்லி இருக்கிறார்.

வீட்டில்வந்துமனைவிரெடிபண்ணிக்கொடுத்தடிபன்பாக்சையும்,தண்ணீர்பாட்டிலையும் வாங்கிக்கொண்டிருந்த நேரம் அண்ணாவின் நண்பர் போன் பண்ணி வந்து இறங்கி விட்டதா கவும்,தன்னுடன் இன்னொரு நண்பர் வந்திருப்பதாகவும்நாங்களேஆட்டோப்பிடித்து சென்று விடுகிறோம்,அண்ணா சொன்ன வீடு எங்கிருக்கிரு க்கிறதெனமட்டும் சொல்லுங்கள்.நீங்கள் எங்களை அங்கு வந்துபாருங்கள் என்கிறார்.

எளிதாகிப்போகிறதுவேலை.சற்றேநிதானமாகக்கிளம்பலாம்.மிகவும் நிதானம் காட்டி னால் பையனுக்கு சாப்பாடு கொண்டு போய்க்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுப் போகலாம் என்கிற எண்ணத்துடன்கிளம்பிச்சென்றபோதுடிபன்வாங்கநின்றரோட்டோரக்கடைதான்இத்தனையும் அடையாளப்படுத்தியும், சுமந்து கொண்டுமாய்/

ஒன்று கூடி நான்கோ, அல்லது ஒன்று குறைந்து இரண்டோ அல்ல,மிகச்சரியாக மூன்று தான். சுட்டெடுத்தபூரிகளும்,சுடப்படுவதற்காய்எண்ணெய்ச் சட்டியில் வீசப்படுகிற மூன்று பூரிகளுடன் இன்னமும் ஒன்று சேர்த்து நான்காய் வாங்கி பார்சலாய் கொண்டு செல்கிறான்.

சுட்ட பூரிகள் விற்பனைக்காகவும்,சுடப்படப்போகிற வட்ட வடிவ மாவு வடிவங்கள் பூரியாய் உருவெடுப்பதற்காகவும்/

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் ஒருவர்...

அவர் கடை (Hotel) கூட்டம் அள்ளும்... ஆனால் அதே அடிமை...

ஆமாம்... இங்கும் ஒருவர் இருந்தார்...

ஆமாம் வாழ வேண்டிய வயசு... இரண்டு குழந்தைகள்...

...ம்... உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள்...

priyasaki said...

என் மனதில் பக்கம் பக்கமா எழுதிச்சென்றது. பூரியின் வர்ணனை என்கண் முன்னே கற்பனையில்..அருமையான சிறுகதை.நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

”என் கண்ணில் எண்ணெய் வழிந்தால்”என இறங்கிச்சொட்டுகிற எண்ணெய் ஒழுக லுடனும் தன் கையில் தாங்கிக்காட்டிய பூரிகள் மூன்றுடனுமாய்இருந்தஅவைகளை கரண்டியுடன் சட்டியின் விளிம்பில் தாங்கு கொடுத்து அப்படியே உட்கார வைத்து விட்டு இடது கையில் இருந்த வட்ட வடிவ பூரியின் வடிவை வலது கைக்கு மாற்றி எண்ணெய் கொதிக்கும் சட்டியி னுள் வீசுகிறார்.

அருமையான சித்திரம்..

Ranjani Narayanan said...

ஒவ்வொரு பாத்திரத்தையும் உங்கள் எழுத்துக்கள் வழியே கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்!

எம்.ஞானசேகரன் said...

பூரி வர்ணனை நன்றாக இருக்கிறது.

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.கவிதையாய் ஒரு கருத்துரை,,, நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பிரிய சகி அவர்களே,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே,நன்றி தங்களது
வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கவிப்பிரியன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக