24 Aug 2015

கதையல்ல கதையே,,,,

பரப்பிப்போட்டிருந்த மண் சிறிது சிறிதான கற்களையும் பெரிதான பாறை போன்றகல்லையும் காட்சிப்படுத்தி காண்பித்துக்கொண்டு சென்றதாய்/

உற்றுப்பார்த்தலும்,உள்ளின் உள் சென்று பார்த்தலுமாய் காட்சிப்படுகிற கணங் களில் நன்றாகவே இருந்தது. 

மண்ணும்கல்லும்சுக்கானும்போதும்போதும்என்கிறஅளவிற்குகலவைகாண்பி
த்து கலர்க்காண்பித்தும்நின்றதாய்/கரிசல்மண்ணில் தோண்டிய கிணற்றுச் சுக்கான்ஒருபுறமும்செவல் தரை கிணற்றிலிருந்து கொண்டு வரபட்ட சுக்கான் மண்மறுபுறமும்,கூடவே ஊடுபாவாய் வண்டல்மண்ணும் பரவியிருந்த காட்சி கண்ணுக்குள் நின்ற கொலாஜ் ஓவியமாய்/

பொதுவாகவே இப்படி ஒரு கலப்பு எங்கும் வாய்க்கபெறாததாகவே.இவனும் பார்த்திருக்கிறான்,கேட்டிருக்கிறான் அல்லது கேள்விகூடப்பட்டிருக்கிறான். இந்த மாதிரியாய் கலப்பு மண் கொண்ட பூமி இருக்கிற ஊர் ரொம்பவும் குறைவு என்கிறார்கள். 
கண்மாய்க்கரை இறக்கத்திலிருந்து மந்தையின் பரப்பு முழுக்கவுமாய் பரவியும் பொன்னம்மா கடை வாசல் வரையும் பரவி நின்ற மண் வெட்டியின் செதுக்கலிலும் வியர்வை நனைவிலும் ஒன்று போல் பாய் விரித்துக் காணப் பட்டிருந்தது.

இவ்வளவு அகலத்திற்கும் இவ்வளவு பரப்பிற்குமாய் காட்சிப்பட்ட கல்லும் மண்ணும்ஊர்எல்லைமந்தையின்மீதுராமுஅண்ணனின்வண்டியையும்பிச்சை மாமாவின் வண்டியையும் காட்சிப்படுத்தி நின்றதாய்/

வண்டிப்பைதாவிலும்ஆரக்காலிலுமாய்ஊதாப்பெயிண்ட்அடிக்கப்பட்டுநின்றிரு ந்தது ராமு அண்ணனின் வண்டியாகவும்,அது அல்லாது நின்றிருந்தது பிச்சை மாமாவின் வண்டியாகவும் இருந்தது.

”ஆமா சொல்லு,அந்த நொட்ட யெழவுக்குத்தான் இந்த இது வேணான்னு சொல் றதுன்னு என்கிற குறை சொல்லோடு எந்தப்பேச்சையும் சலிப்போடு ஆரம்பி க்கிற ராமு அண்ணனிடம் ஒற்றைமாடுதான்இருந்தது. பெரிய மகள் செண்ப கம் வயசுக்கு வந்த போது ஜோடியில் ஒன்றை பிரித்து விற்று விட்டார், அவருக்கும் மனதில்லைதான் பாவம் என்ன செய்ய எதையோ விற்று எதை யோ வாங்கிய கதைதான்.

அன்றிலிருந்து இவர் வண்டி பூட்டும் போதெல்லாம் ஒற்றைக்க்காளையை தேடி அலைய வேண்டியிருக்கும். ஊருக்குள் அவரைப் போல ஒற்றைக்காளை வைத்திருந்தது கிழக்குத்தெரு தாஸ்தான்.ஆனால் அவரிடம் போய் நிற்க இவருக்கு தயக்கம். காரணம் தாஸிடமிருந்தது வலது பக்கமாய் வண்டியில் பூட்டி ஓட்டிய மாடு.ராமு அண்ணனதும் வலது பக்க மாடுதான்.இடது வலது மாய் எந்தப்பக்கமாய் மாற்றி மாற்றி கட்டினாலும் ஓடக்கூடிய காளைகள் பிச்சை மாமாவிடம்தான் இருந்தன.ராமு அண்ணன் போய்க் கேட்டால் பிச்சைமாமா காளைகளை உடனே அவித்துட்டுப்போ என்பார்.

ஆனால் ராமு அண்ணனுக்குத்தான் அவரிடம் போய் நிற்க ஒருவித மனக் கூச்சம்.காரணம் பிச்சை மாமாவின் மகன் ராமு அண்ணனின் மகளை போன மாதம் நிறை வெள்ளிக்கிழமையன்று நல்லதண்ணீர் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கப்போன போது ஏதோ கேலி பேசிவிட்டான் என சண்டை போட்டு விட்டார்.

ராமு அண்ணனின் அவ்வளவு கோபப்பேச்சையும் கேட்டுக் கொண்ட பிச்சை மாமா டேய் கிறுக்கா ஓம் மக ஒரு வகையில் ஏன் மகனுக்கு தங்கச்சி மொற வேணும்டா,,,,,/ஏதோ சின்னப்புள்ளைகசண்டைக்குஇப்பிடி வரிஞ்சி கட்டீட்டு வந்து முருக்கிட்டு நிக்கிறீயே வெக்காமாயில்ல ஒனக்கு போடா அங்கிட்டு சின்னப்பயலே என சப்தம் போட்ட நாளிலிருந்து அவரிடம் போய் ஒத்தை மாடு கேட்பது ராமுஅண்ணனுக்கு பிடித்தம் இல்லாததாகவே/

ஆனால் இரண்டு பேரும் வண்டிகளின் சக்கர இரும்புப் பட்டையையும் இறுக்கிப்பிடிக்கஅடிக்ககொடுப்பது சுந்தரம் இரும்புப்பட்டறையில்தான்/ பொறி பறக்கிற இரும்புப்பட்டறையில் கரைகிற கங்கு போல் எப்பொழுதும் பசித்த வயிருடன்தலைநிறைந்தசிந்தனையுடனுமாய்த்தான்இருப்பார்.நல்ல மனிதர்,

கூர் மழுங்கிப்போனப்போன கோடாலியை தொழுவதற்காய் போன போது கோடாலியைபட்டறையில் காயவைத்துவிட்டு இவன் கையில் சம்மட்டியைக் கொடுத்து விட்டார்,

பழுக்கக்காய்ந்திருந்த கோடாலியை இவன் முன்னாய் சதுரமான இரும்புப் பட்டையில் வைத்து விட்டு சம்மட்டி யைதூக்கி அடிக்கச் சொன்னார்,, இவனுக் கானால்அம்மாதிரியானவேலைகளில்பழக்கமில்லை.

இதற்குமுன்னால் கோடாலி தூக்கிவிறகுபிளந்திருக்கிறான்.பெரிய பெரிய மரத் தூர்களைப்பிளக்க சம்பள ஆள்வேண்டும் இதற்கு லாயக்கு மரம் வெட்டிய வர்கள்தான் என சித்தப்பா சொன்ன போது வேண்டாம் நானே செய்கிறேன் என ஒப்புக்கொண்டு வெட்டி வந்த மரங்களைப்பிளந்தான்,

முழுதாக ஒரு வேப்ப மரமும்,ஒரு முருங்கை மரமும்/முருங்கை மரம் புழு விழுந்து முத்திப்போய் இனி காய் காய்க்க லாயக்கற்ற நிலையில் இருந்தது. வேப்ப மரம் நடு தோட்டத்தில் பரந்து விரிந்து கிளை பரப்பி இடத்தை அடைத்துக்கொண்டு நின்றது,அது அடைத்துக் கொண்டு நின்ற இடத்தில் வெள்ளாமை எதுவும் விளையவில்லை.ஆகவே இரண்டையும் வெட்டி விட லாம் என முடிவெடுத்து மரம் வெட்டுகிற முத்துச் சாமியை வைத்து வெட்டி தொழுவம் கொண்டு வந்து சேர்த்தார்கள்,

மரம் வெட்டும் போது இவனுக்கு ஒரு ஆசை,ஆனால் மரத்தின் மீதேறி வெட்ட முடியாது,மரமேறத்தெரியாது,அப்படியே தெரிந்திருந்தாலும் இவனுக்கு கூட மரத்தின் மீதேறி அரிவாள் வைத்து வெட்டுமளவு வேலை தெரியாது,தரையில் என்றால் சரி வேலையை கச்சிதமாய் செய்து விடுவான். அது போலவே மரத்தை வெட்டிகொண்டு வந்து தொழுவத்தில் போட்ட தினத்தன்றைகு மறு நாள் முருங்கை மரத்தை வெட்டுக்கம்பி வைத்து பிளந்து விட்டான்,

பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வந்த முழு முருங்கை மரத்தையும் கம்பியால் வெட்டிப் பிளப்பது ஈஸியாய் இருந்தது. கொஞ்சம் கடினமான வேலையாய் இருந்த போதும் கூட நீர் மரம் கம்பியைக்கொண்டு குத்திப் பிளப்பது ஈஸியாக அமைந்துபோனது.ஆனால் வேப்ப மரத்தை அப்படிப்பிளக்க முடியாது, பச்சை மரமாய் இருக்கும் போது வெட்டினால் ஈஸியாய் இருக்கும் அல்லது காய்ந்துபோனால் கடினம் எனச்சொன்ன முத்துச்சாமி மறு நாள் இவன் வேப்ப மரத்துண்டுகளைப்பிளக்கும் போது வந்து விட்டார்.

மொட்டையாய் இருக்கும் கோடாலியைப்பாத்தவுடன் முதலில் இரும்புப் பட்டறையில் கொண்டு போய் தொழிந்து விட்டு அப்புறமாய் விறகை வெட்டு ங்கள், அப்பொழுதான் ஈஸியாக இருக்கும் என்றார்.சரி கோடாலியைத் தொழிய இப்பொழுது சுந்தரம் பட்டறை வைத்திருப்பாரா,,,என்கிற சந்தேகத் துடன் பட்டறைக்குப் போனதுமாய் காலையில் ஆறு மணிக் கெல்லாம் பட்ட றை யை ஆரம்பித்திருந்த சுந்தரம் இவனை சம்மட்டி அடிக்கச் சொன்னார், இவனுக்கானால் சம்மட்டி அடிப்பது ஒன்றும் புதிதில்லை, ஆனால் பழுக்கக் காயவைத்தகோடாலி முனையை பொத்தி அடிக்க வேண்டும், இவனுக்கு அதுவரவில்லை,இவனது சம்மட்டி அடி கோடாலி முனையில் பள்ளம் பறித்தது,இவன் அடிக்கிற ஒவ்வொரு அடிக்குமாய் விழுந்த பள்ளம் கோடாலி முனையை சிதைத்து விடும் என சொல்லிப் பார்த்த சுந்தரம் கடைசியில் இவனிடமிருந்து சம்மட்டியை வாங்கி கோடாலி முனையை பதமாக்கித்த ந்தார்.

கோடாலியைஇவன் பதமாக்கிவாங்கி வரும் வரை முத்தையாதான்விறகை வெட்டிக்கொண்டிருந்தார். ரோமக்கட்டைதட்டாததினசரிஷேவிங்கில் மழு மழு வென இருக்கும் அவர் வெள்ளைவேஷ்டி வெள்ளைச்சட்டையில் பளிச் சென்று தான் இருப்பார்,வேலை செய்கிற போது கழட்டி வைத்து விடுகிற சட்டை,வேஷ்டி தூசு படாத இடத்தில் பத்திரமாய் இருக்கும் இவர் சாயங் காலம் வேலை முடித்து எடுத்துப்போடுகிற வரையிலுமாய்.

வேர்வைக்கோடுகள் வழிகிறஅவரதுகறுத்த முகத்தில் வேலைத்தளத்தில் எப்பொழுதும் அலுப்பு ஒட்டிக் கொண்டு வெளித்தெரிந்ததில்லை.அது போல் தான் இவன்கோடாலியை தொழிந்து கொண்டு போவதற்குள்ளாய் விறகை வெட்ட ஆரம்பித்திருந்தார். ஏன் எனக் கேட்டதற்கு நீ இப்பொழுதுக்கெல்லாம் வருவது போல் தெரியவில்லை. அதான்நான்பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பி த்து வைத்தேன்.போட்ட சுழியை நீ தொடர்ந்து கொள் எனக்கு இன்னோர் இடத்தில் வேலைஇருக்கிறது என போய் விட்டார்.கையில் வைத்திருக்கிற அரிவாளைக் கொடுத்துவிட்டு.

பொதுவாக முத்துச்சாமி அவ்வளவு ஈஸியாக யாரிடமும் அரிவாளை தர மாட்டார்.அரிவாளைகொடுத்து விட்டுப்போகும் போது சொல்லி விட்டுத்தான் போனார்,பாத்து சூதானமா வெட்டுப்பா,நான் யாருக்கும் இதைத்தர்றதில்லை, ஓங்ஆர்வத்தப்பாத்துதான்குடுக்குறேன்ஆமாம்என்றார்.அவரின்இந்தச்சொல்லில் இவனுக்குஒரு பெருமை,ஆகா யாருக்குமே தராத அவரின் தொழில் ஆயுத த்தைஇவனிடம்நம்பிஒப்படைத்துவிட்டுப்போகிறார்என/

ஆனால் இவனுக்குத் தெரியாது அவரது தொழில் ஆயுதமாய் வீட்டில்இருக்கிற கோடாலியையும், அரிவாளையும் தனது பெண்டு பிள்ளைகளைக்கூட தொட விட மாட்டார்.

யாராவது கேட்டால் இல்லை எனச்சொல்லாமல் கொடுப்பதற்கு ஒரு கோடா லியும் அரிவாள் ஒன்றும் வைத்திருந்தார்,சம்சாரிகள் நிறைந்தி ருக்கிற ஊர். இப்படித்தான் இரண்டு மாதங்களுக்கு முன் கடைசித்தெரு ராமையா கேட்ட போது அரிவாள் இல்லை எனச்சொல்லி விட்டார் முத்துச்சாமி .அவர் உடனே கையோடு இவனது சித்தப்பாவிடம் போய் சொல்லிவிட்டார் கூட ரெண்டு சொல் சேர்த்து/

சித்தப்பா முத்துச்சாமியிடம் கேட்ட போது அருகில் ராமையா இல்லாதது அவருக்கு சௌகரியமாய் போய் விட்டது.சொன்னார் முத்துச்சாமி சித்தப்பாவிடம் இல்லை,அவருக்கு பொருள் கொடுப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை,ஆனால் தொழில் செய்கிற பொருளை பத்திரமாக கையாள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வு அவரிடம் இல்லை, போன தடவை என்னிடமிருந்து வாங்கிப்போன அரிவாளை கல்லில் வைத்து வெட்டி இருப்பார் போலும். அரிவாள் பூராவும்அங்கங்கே சிதைவு,என்ன செய்ய பின்னே, சுந்தரம் பட்டறையில் போய் தொழிந்து விட்டு வந்துதான் தொழிலுக்கு பயன் படுத்தினேன் அந்த அரிவாளை அது மரம் வெட்டும் போது சைடு கொப்புகளை அருவவும்வெட்டவும்தான் ஆகிறது என்றாலும் அது இல்லையானால் எனக்கு கை ஒடிந்தது போல் இருக்கும், அதனால்தான் யாரிடமும் கொடுப்பதில்லை, வீட்டில் இன்னொன்று மொன்னை அரிவாள் கிடக்கிறது.அதுதான் வெளியில் யாருக்கும் கொடுப்பது அவர் அரிவாள் கேட்டு வந்த அன்று அந்த அரிவாளை எடுத்துக்கொண்டு எனது வீட்டம்மாள் முள் வெட்டப்போயிருந்தாள்.என்ன செய்ய பின்னே அப்படித்தான் சொல்ல வேண்டியிருந்தது,அவரானால் எனது மரம் வெட்டும் அரிவாளையாவது கொடு என்றார்,இல்லை என்று விட்டேன் அதுதான் உங்களிடம் வந்து பிராது வாசித்து விட்டார்.என முத்துச்சாமி சொன்ன உண்மை கேட்டு விட்டு ராமையாவை ஒரு பிடிபிடித்து விட்டார் சித்தப்பா,அன்றிலிருந்து ராமையா முத்துச்சாமியின் வீட்டுப்பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பதில்லை. படுத்தால் முத்துச்சாமி கனவில் வந்தார். கூடவே பட்டறை சுந்தரமும் வந்தார், முத்துச்சாமி வருவது சரி.சுந்தரம்,,,,? என்ன இது கோளாறு கனவிலா,அல்லது கனவு காண்பவர் மனதிலா,,,,?புலன் விசாரணையில் கனவில் இல்லை, கோளாறு மனதில் எனத்தான் தோணியது,

பக்கத்தில்சுந்தரம்நிற்க,அவர்பக்கம்சித்தப்பாநிற்கஅவரதுபக்கமாய் முத்தையா நிற்க சுற்றிய புகையினூடாக வந்து போன ராமையா இது லாயக்கில்லை என நமக்கு என நினைத்துக்கொண்டிருக்கையில் இவர்களுடன் பேசிக் கொண் டிருந்தசுந்தரம்எங்கோமறைந்து போவார். அவர் போய் பிச்சை மாமாவையும் ராமுஅண்ணனையும் சந்தித்து யப்பா பக்கத்துல பக்கத்துல வண்டி வச்சிருக் குற புண்ணியவாண்களா ரெண்டு பேருக்குமே ஒண்ணு சொல்றேன். ”வண்டிப்பட்ட ரொம்பதேய்ஞ்சிபோச்சிப்பா, அடுத்த தடவைக்கெல்லாம் வேற தான் போடணும். இல்ல இருக்குறத சரிக்கட்டி ஓட்டணும்ன்னு நெனைச் சிங்கின்னா போயிக்கிட்டு இருக்குற வண்டிச்சக்கரத்துல இருந்து பட்டை தனியா கழண்டுக்கிட்டு வந்துரும். பாத்துக்கங்கங்க.

புதுசாபோடுங்க நம்மள மாதிரிதான அதுகளும்,ஆயுள் காலம் இவ்வளவுன்னு இருக்குல்ல.அதவுட்டுட்டு,,,,,,,என்கிற அவரது பேச்சை கேட்ட அன்றிலிருந்து ராமுஅண்ணனும்,பிச்சைமாமாவும்பேசிக்கொண்டார்கள்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. ராமண்ணன் வேலையாய் வெளியூர் போயிருந்த போது வீட்டிற்குவந்தராமண்ணனின்உறவினர்கள்ராமண்ணனின் அம்மாவை அடித்துப் போட்டு விட்டு போய்விட்டார்கள்.தள்ளாத வயதில் உடல் முழுவதும் காயங்களுடன் படுத்திருந்த தாயாரைப்பார்த்ததும் அழுதே விட்டார் ராமு அண்ணன்.

அவரது எதிர் வரிசை வீட்டிலிருந்த பிச்சை மாமாவின் வீட்டிற்குப்போய் இப்பிடி ஒரு சம்பவம் நடந்தப்ப ஒங்க வீட்டு பொம்பளபுள்ளைங்க பாத்துக்கிட்டுதான் இருந்தாங்களாம்ல,ஏன் அப்பிடி ஏங் மேல இருக்குற கோவத்துல அவுங்க அடி படுறதக்கூட கேக்காம வுட்டுட்டீங்களே என வந்து புலம்பியிருக்கிறார். எப்பிடி ய்யா கேப்பாங்க ,வாய்ப்பேச்சு வாய்ப்பேச்சா இருக்கும் போது பொசுக்குன்னு கைநீட்டுறஆளுஇல்லைய்யா நீயி,,? சாதரணமா மறக்குற மாதிரியான செயலாயா நீயி செஞ்சது,, சொல்லு/ என்னவோ ஒரு வேகத்துல நடந்த சண்டையில எங்க வீட்டு ஆம்பளய மண்டைய ஒடைச்சவன்ல்லய்யா நீயி/மண்டைய ஒடச்ச தோட மட்டும் நில்லாம அவன வண்டி கட்டி தூக்கீட்டுப் போகும்போது ஆட்களோட வந்து வழி மறிச்சவன்ல்லயா நீயி,,?அன்னைக்கி ஊர்க்காரங்க மட்டும் வந்து தடுக்கையிலன்னா ஏங் புள்ள செத்துல்லய்யா போயிருப்பான். எங்க வீட்டு வெள்ளாமையில ஒங்க வீட்டு ஆடுகஎப்பிடி விழுந்துச்சின்னு கேட்டதுக்காயா இவ்வளவு அளப்பற,,,? அப்புறம் எப்பிடி நாங்கஒனக்கு ஆதரவா நிப்போம்ன்னு நெனைக்கிற,,,,?என பிச்சை மாமாவின் அம்மா சொன்ன போது கையெடுத்துக் கும்பிட்ட ராமு அண்ணன் அன்றிலிருந்து இன்று வரை அவரது வீட்டின் நடு ஹால்வரை போய் வருமளவிற்கு நெருக்கமாகிப் போகிறார்.

ஆனாலும் இன்றுவரை பிச்சை மாமாவிடம் ஒத்தை மாடு கேட்பதில் இருக்கிற தயக்கம் ஊரந்ததாக இருக்கிறது. இருந்தாலும் விடுவதில்லை பிச்சை மாமா ,அட வாப்பா சும்மா என மாட்டை அவிழ்த்துக்கொண்டு போகச்சொல்லி விடுவார். பிச்சை மாமாவின் மாடுகளில் ஒரு சௌகரியம் வலத்து மாட்டை இடது பக்கமும், இடத்து மாட்டை வலது பக்கமுமாய் பூட்டலாம்,இழுத்த இழுவைக்கு வரும். வண்டியிலும் சரி,ஏர்க்கலப்பையிலும் சரி ஒன்றும் பிரச்சனை பண்ணாமல் ஓடிக் கொள்ளும்/பிச்சை மாமாவின் குணத்திற்கு தகுந்தாற்ப் போல மாடுகளும் அமை ந்துள்ளது அவரது ராசி என்றார்கள் ஊர்க்கார்கள். ராசிதான் இல்லை எனச் சொல்லவில்லை,அந்த ராசியிலும் கொஞ்சம் கரும்புள்ளி வைத்தாற்போல ஆகிப்போனதே,,,,,?

உழைப்பதெல்லாம்சரிதான்,சொன்னபடியெல்லாம்கேட்கிறது,போகச்சொன்னால் போகிறது,வரச்சொன்னால் வருகிறது,படுக்கச்சொன்னால் படுக்கிறது,எழுந்து ஓடச் சொன்னால் ஓடுகிறது,எல்லாம் சரிதான்,ஆனால் முரண்டு பிடித்தால் ஒரே பிடிவாதம்தான்.தூக்கி எறிந்து விடும் அல்லது கீழே தள்ளிவிட்டு விடும்.யார் என்ன எனவெல்லாம் பார்க்காது.

இப்படித்தான் நல்ல வெயில் மாதத்தின் ஓர் நாளில் குப்பை அடித்துக் கொண்டி ருந்தார்,பிச்சை மாமா, பெத்தவாடு அப்பாவி தோட்டத்திற்கு குப்பை போக வேண் டும், வண்டி போவதற்கு செம்மையான வழி இல்லை, பெத்தவாடு அப்பா குப்பை அடிக்கச்சொன்ன முதல் நாள் இரவு இவன் வீடு தேடி வந்து விடுகிறார் பிச்சை மாமா,என்னடா மாப்புள என பேச்சை ஆரம்பித்தவர்,,,, சொன்னார்குப்பை அடிக்க வேண்டியிருப்பதையும்,அதற்கான வழியி ல்லா மல் இருப்பதையும்/ரோட்டு வழி போய் வந்தால் ஒரு நாளைக்கு மிகச் சொற்பமாகத்தான் நடைஅடிக்கவேண்டி வரும்,இதேது கண்மாய்கரைபோய் இறங்கி சுந்தரம் பட்டறை வழி போனால் கொஞ்சம்பக்கம்.கொஞ்சம் நடையைகூட்டி அடிக்க லாம்,

ஆனால் அதில் இருக்கிற கனமான பிரச்சனை கண்டு யாரும் அந்தப்பக்கமாய் வண்டிகட்டிப்போனதில்லை.சுந்தரம்பட்டறையைத்தாண்டியதும் ஓடுகிற சாக்க டையை தாண்ட வேண்டும்.அதில் வண்டியை இறக்கினால் வண்டி சாக்கடை கடந்து மேலேறாது. அப்படியேமேலேறிப்போனாலும்வயக்காட்டுக் கரைகளைக் கடந்தும் அதன் ஊடாகப்போகும் பெரிய வாய்க்காலைக்கடந்து திரும்பவுமாய் நம்பி வயலில் இறங்கி மேலேறிப்போக வேண்டும்,இத்தனை சிக்கல் இருக்கும் போது எப்படி ?

பெத்தவாடு அப்பா பிச்சை மாமாவிடம் சொன்னதை பிச்சை மாமா இவனிடம் அப்படியே சொன்னார்.நீயிஎன்னசெய்வயோஏது செய்வயோ எனக்குத் தெரி யாது நாளைக்குஅவருதோட்டத்துக்குநம்மகுப்பை அடிக்கிறோம். என பிச்சை மாமா சொல்லி விட்டுப்போன நிமிடத்திலிருந்து தூக்கம் பிடிக்க வில்லை இவனுக்கு.

மறுநாள்அதிகாலைநான்குமணிக்கெல்லாம்எழுந்துமண்வெட்டியோடும்கண்ணன் கடை டீயுடனுமாய்கிளம்பியவன்நேராக கண்மாய்க் கரை இறக்கம் முடிந்து அம்புக்குறியிட்ட சுந்தரம் பட்டறையில்தான் போய் நின்றான்.

இப்பொழுது இதுதான் பெரும் பிரச்சனை ,சுந்தரம் பட்டறைக்கு எதிர்த்தாற் போலி ருந்த இடத்தில் கட்டிக்கிடந்த குட்டை சாக்கடை நீரால் நிரம்பியிந்தது.

இவனுக்குத்தெரிந்து மழை நேரங்களில் மழைத்தண்ணீரும், மற்ற நேரங்க ளில் சாக்கடை நீருமாய் வந்து கட்டி நிற்கும்/குட்டையைச்சுற்றி நின்ற சீமைக்கருவேலை மரங்கள் சாக்கடை தண்ணீர் குடித்து அவ்வளவு செழிம் பாக இருக்கிறதா அல்லது மழைத்தண்ணீர் குடித்து அப்படி இருக்கிறதா என சொல்லாடல் செய்யலாம்.

ஆனால் இவன் அதற்கெல்லாம் தயாராக இல்லை.இவனது ஒரே பிரச்சனை இப்போதைக்கு ஊரின் கழிவு நீரில் பாதியை இங்கு குட்டையாக தேக்கி வைத்து காட்சி தருகிற இதிலிருந்து பிரிந்து போகிற சாக்கடையை வண்டி கடக்க வழி செய்ய வேண்டும்.அதற்கானதை எப்படி செய்வதெனவே இப்பொ ழுது யோசிக்க வேண்டும்.

என்னசெய்யலாம்,சொல்லுங்கள்எனஅந்தஅதிகாலை நேரத்திலேயே பட்டறை போடஆயத்தமாய் இருந்தசுந்தரத்திடம்கேட்டு அருகிலிருந்த அவரது சொந்தக் காரரின்படப்பிலிருந்துகம்மந்தட்டை கட்டுகளைஉருவி எடுத்துக்கொண்டான்.

இவனேநேரடியாய்சென்றுஎடுத்திருக்கலாம்,படப்புக்காரன் ஒன்றும் சொல்லப் போவதில்லைதான், இருந்தாலும் கூட ஒரு ஆளை சேர்த்துக் கொண்டு போய் எடுப்பதுஉசிதமாய்ப்பட்டது,படப்புக்காரன்ஒரு சிடுமூஞ்சி.ரெண்டும் கெட்டான் வேற/எந்நேரம் என்ன பேசுவான் எனத் தெரியாது, ரெண்டாவது ஈஸியாக சண்டை இழுத்து விட்டுவிடுவான் யாரும் எப்படியும் சண்டை போட்டு சாகட்டும் என,

ஆனால் அவனது செய்கைகளைப்பார்க்கும் போது அப்படி இருக்காது. ரொம்ப வும் நாகரிகமாகப்பேசுவான்,ரொம்பவும் நாகரிகமாக சிரிப்பான், ரொம்பவும் நாகரீக மாக கைகொடுப்பான்.ரொம்பவும் நாகரீகமாக தோள் தட்டிக் கொடு ப்பான்,

அவன் போட்டிருக்கிற வெள்ளைச்சட்டைக்கும், அவனது செய்கைக்கும் துளியும் சம்பந்தம்இல்லாதது போல் நடந்து கொள்கிற படப்புக்காரனின் செய்கை இவனுக்குத்தெரியும் ஆகவே இப்படி,,,?

பத்துகட்டுகளாவதுதேறும் சின்னச்சின்ன கட்டுகளாய் இருந்தது.போதும் தேவையானால் பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்கிற மனோ நிலையில் கம்மந் தட்டை கட்டுக்களோடு வந்தவன் சாக்கடையில்பெரிதுபெரிதான கற்களை எடுத்துப் போட்டான், வண்டியின் அகலத்திற்கு வழி அமைத்தது போல இரண்டு பக்க முமாய்/ அது இருந்தது சாக்கடை குட்டையின் ஓரமாய் முளைத்துக்கிடந்த முட்செடிகளின் கீழாக,,வீடு கட்டுபவர்கள் வேறுமண் சுவர் வைத்து தொழுவம் கட்டுபவர்கள் தேவை போக மிஞ்சியவற்றை தேவை யில்லை என அங்கு கொண்டு வந்து போட்டிருந்தார்கள்.அதுவே ஒரு சிறு குவியலாய் காட்சிப் பட்டு தெரிந்தது. பாலம் பாலமாக அகலமாய்த் தெரிந்த கற்கள் சாக்கடையின் வழவழப்பையும் நெளு நெளுப்பையும் குறைக்கும். அதன் மீது கம்பந்தட்டை கட்டுகளைப் போட்டு பரத்தினான். கம்மந்தட்டை விரித்துப் போடப் பட்டிருந்த ரோட்டைப் போல் பரத்தி அகலம் காண்பிக்கவும், கரடு முரடாய் தெரிந்த கற்களின் மீது மாடுகள் மிதிக்க ஏதுவற்றதாய் இருப்பத்தைத் தவிர்க்கவுமாய்,,/

இப்பொழுது இரண்டடிஆழத்திற்கும்மூன்று அடி அகலத்திற்குமாய் வாய் பிளந் திருந்த சாக்கடைபாதைஅமைந்து வழிகாட்டியது,இப்பொழுது பரப்பி வைத்திருந்த கம்மந்தட்டைகளின் மீது சாக்கடையில் இருந்து அள்ளிய கட்டியான மண்ணை பரப்பிய கம்மந்தட்டை மீது மண்வெட்டியால் அள்ளி பரப்பிப் போட்டான், அள்ளிப்போட்ட மண் கம்மந்தட்டை வழுக்காமல் இருக்க என்கிறகைகோர்ப்பில் சாக்கடையில் போடப்பட்டிருந்த பெரிய கற்களும் ,அதன் மீது பரப்பட்டிருந்த கம்மந்தட்டைகளும், அதன் மீது போடப்பட்டிருந்த கெட்டியான சாக்கடை மண்ணும் எல்லாம் ஒன்று சேர்ந்து கை கோர்த்து கட்டிப்பட்டுப் போனது,

கட்டிப்பட்டுப்போன மண்மீது ஏறி காலை அழுந்தப்பதித்து நடந்து பார்த்தான், இந்தப்பக்கமிருந்து அந்தப்பக்கமாய் நடந்து பார்த்தான், அந்தப் பக்கமிருந்து இந்த பக்கமாய் நடந்து பார்த்தான்,எப்பிடி இருந்து எப்பிடிநடந்து பார்த்தாலும் இவன் போட்டப்பாதை இவனுக்கு பழுது பட்டுத் தெரியவில்லை,

கொஞ்சம் நெலு நெலுப்பு பட்டுத்தெரிந்த மண் மீது இரண்டு தடவை வண்டி ஏறி இறங்கினால் சரியாகிப்போகும்.தடம் விழுந்து விடும் அப்புறமென்ன ஈஸி யாக வண்டி போகும் என்கிற நினைப்புடன் வயக்காட்டின் கரைக ளில் இருக்கிறமேடுபள்ளங்களைசரிசெய்துவிட்டுகையோடுகொண்டுவந்திருந்த
மிச்சகம்மந்தட்டை கட்டுகளை கரையில் இருந்த வாய்க்காலில் போட்டு விட்டுநிரப்பி விட்டு நம்பியின் வயக்காட்டில் இறங்கி வயக்காட்டின் இரண் டரை அடி உயரக்கரை மண்வெட்டி கொண்டு இழுத்து சரி செய்து பாதை உருவாக்கி விட்டு பிச்சை மாமாவுக்கு தகவல் சொல்லி விட்டான்.

பிச்சை மாமா இந்நேரம் வண்டியில் குப்பையுடன் ரெடியாய் இருப்பார்.முதல் வண்டி குப்பை மட்டுமே பிச்சை மாமா அடித்தார்,இரண்டாவது வண்டியிலி ருந்து இவன்தான் அடித்தான்.பிச்சை மாமா கூடச்சொன்னார். வேண்டாம்டா மாப்பிள, மொரண்டு பண்ணுற மாட்ட வச்சிக்கிட்டு நா படுற பாடு போதாதா,,,,? நீ வேற பாடா படணுமா,,,,,?என்கிற பிச்சை மாமாவின் பேச்சையும் மீறி இவன் குப்பை அடித்ததை விட குப்பை அடிப்பதற்காய் போடப்பட்டிருந்த பாதை பெத்த வாடு அப்பாவிற்கு மிகவும் பிடித்துப்போனது.

என்னதான்மனம் பிடித்துப்போனாலும் சிலவற்றை கலைக்கத் தானே வேண் டியி ருக்கிறது.கலைத்தான். 

சாக்கடையிலிருந்துகம்மந்தட்டைகளையும்கற்களையும்எடுத்துபோட்டுஅப்புற
ப் படுத்தினான்.இவன் அப்புறப்படுத்திய தினத்திலிருந்து சாக்கடை நன்றாக ஓடியதாகச்சொன்னார்கள்.

இவன் அப்படியாய்சாக்கடையிலிருந்து கம்மந்தட்டைகளையும் கற்களையும் அப்புறப் படுத்திய தினத்தன்று நிறை கண்மாய் நீரில் மாடுகளை குளிப்பாட்டப் போன போது வழக்கம் போலவே சண்டித்தனம் பண்ணிய முரட்டு கூர்க்கொம்புக் காளை பிச்சை மாமாவை தண்ணீருக்குள்ளாய் தூக்கி தள்ளி விட்டது.சுதாரித்து எழுந்த அவர் எட்டி மாட்டின்மூக்காணங்கயிற்றை பிடித்துக் கொண்டு மாட்டை விளாசி விட்டார் விளாசி.

தண்ணீருக்குள் கிடந்ததற்கும் அதற்கும் உடம்பெல்லாம் தடிப்புத்தடிப்பாய் வீங்கிப்போய் விட்டது.அதை வாங்கிய யாரும் ஒரு மாதத்திற்கு மேல் வைத்தி ருந்ததாய் சரித்திரம் இல்லை.இல்லாத சரித்திரத்தை புனைந்து உருவாக்கிய வராய் ஆகிப்போனார் பிச்சைமாமா அந்த மாட்டை வாங்கிய நாளிலிருந்து/

அது போலத்தான் பி.டி வாத்தியாரும் அடங்காத மாடு ஒன்று வைத்திரு ந்தார், ஒரு நாள் களத்தில் புனையல் போடும் போது முன்னால் போய்க் கொண் டிருந்த மாட்டுக்காரரை தூக்கி தள்ளிவிட்டு விட்டது. கோவங்கொண்டு ஓடி வந்த பி டி வாத்தியார் களத்தின் அருகில் கீழே கிடந்த கல்லை தூக்கி மாட்டின் கொம்பு மீது போட்டு விட்டார்.மாட்டின் ஒற்றைக் கொம்பு அந்த இடத்திலேயே ஒடிந்து போனது.கொம்பு ஒடிந்த அந்த கணத்திலேயே மாடு அந்த இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தும் போனது. அதற்கப்புறமாய் பி டி வாத்தியார் வேறொரு மாட்டை வாங்கவில்லை.இருந்த ஒற்றை மாட்டையும் விற்று விட்டு பேசாமல் இருந்து விட்டார்,என்ன செய்யப்பா அது கொஞ்சம் சண்டித் தனம் பண்ணுற மாடுன்னாலும் கூட அது இருந்த யெடத்துல இன்னொரு மாட்ட யோசிச்சி பாக்க முடியல/

அது போலவே இப்பொழுது பிச்சை மாமாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார் சிறிது நாட்களாக/சொன்ன சொல் அப்படியேநிற்கமனம்சம்மதத்திற்குள்ளாக வில்லை முழுமையாக/

முட்டைவிட்டதண்ணீர்முழுமையாகவெளித்தெரியவில்லையாயினும் கூட கட்டி நின்ற தண்ணீர் தன்னை காட்சிப்படுத்திச் சென்றது.

நேற்றைக்கு முன் தினம் இரவு வந்த கனவில் பெரிதான கண்மாய் வந்தது. கலங்க லான புதுத்தண்ணீர் பார்க்க கலங்கலாக இருந்தது.மழை நாட்களில் கரிசல் காட்டுத்தண்ணீரும்,செவல் தரைத் தண்ணீரும் ஒன்று சேரும் கண் மாய் அது. அப்படி சேரும் நீருக்கு தனிகுணம்இருக்கும் எனச்சொன்னார் கள்.

வடக்கே உன்னி பட்டிகாடுகளிலிருந்து செவல் தண்ணீரும் கலுங்குக் காடுக ளிலி ருந்து இருந்து வருகிற கரிசல்க்காட்டுத் தண்ணீரும் மழை நாட்களில் கை கோர்த்து கலக்கும் போது கண்மாய்க்கும் கலக்கிற தண்ணீருக்கும் கூடுதல் பலம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்/

கொண்டு போன இரு சக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு நீண்டுபோனகண்மாய்க்கரையில்ஒருதடவைபோய்திரும்பியபோது கண்மாய் சுருங்கி பெரிய கிணறாய்த்தெரிந்தது.

இப்போது கண்மாய்க் கரையின்இருமருங்கிலுமாய்தெரிந்ததூர்பெருத்த இச்சி மரங்களைக்காணோம்.கரைதுவங்குகிறஇடத்தில்இருந்தஅய்யனார்கோவிலைக் காணோம்.நன்றாகஎடுத்துக்கட்டியிருந்தார்கள்முன்புஒருமுறைபார்த்தபோது.

முன்னெல்லாம்கோயிலுக்குள்போகமுடியாது.நெருஞ்சிச்செடிகளும்,கோரைப் புற்களும், இன்னும் பெயர் தெரியாத செடிகளுமாய் கைகோர்த்தும் உடல் உரசியுமாய் கிடக்கும். சாமி சிலையும் மற்ற சிலைகளுமாய் நிற்க வைக்கப் பட்டிருக்கிற இடத்தில் மட்டும் கொஞ்சம் இடம் விட்டு செதுக்கியிருந்தார்கள்.

பரவாயில்லை அந்த அளவிற்கு என நினைக்காமல் இப்பொழுது தைரியமாக கோயிலுக்குள் போய் வரலாம் ,நெருஞ்சியும் கோரைப்புல்லும் சிமெண்ட தரை யாக மாறியிருந்தது.

வழக்கமானடிசைன்போட்டஹாலோபிளாக்கற்கள்தான்.கோயிலின்கேட்டைப் பூட்டியிருந்தார்கள்.உள்ளேபோகமுடியவில்லை.எப்பொழுதோஎதற்காகவோ நினைத்து வேண்டியிருந்த தேங்காயை அன்று போன பொழுது உடைத்து விட்டு வந்தான்.உடைந்த தேங்காயின் சின்ன சில் ஒன்று இடைவெளி விட்டுத் தெரிந்த கிரில் கேட்டு வழியாக உள்ளேபோய் விழுந்தது.

இப்போது அன்று விழுந்த தேங்காய்ச் சில்லைக்காணோம். கோயிலையும்
காணோம். கோயில் இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி கண்மாயாக காணப் பட்ட இடம் கிணறாக உருமாறித்தெரிந்தது.

நிறைகிணறாகதெக்தெக்கென நிறைந்து நின்ற தண்ணீர் கலங்கலாகவும் புதுத் தண்ணீர் போலவுமாய் தெரிந்தது.மழை பெய்து காடுகளில் தண்ணீர் புரண்ட நாட்களில் கரிச ஊருணியில் இது போலாய் புதுத் தண்ணீரைப்பார்க்கலாம்.

அந்தப் பக்கமாய் காட்டுக்கு வேலைக்குப்போகும் போது ஊருணியில் தண்ணீர் மோந்து கொண்டு போயிருக்கிறான்.

இவனிடம்இவனதுபாட்டியோஅம்மாவோசொன்னதாகநினைவு.அந்தஊருணிக் கரையில் இருக்கிற சுத்தமான கரிசல் மண்ணை எடுத்து தலைக்குத்தேய்த்து க்குளித்தால் தலை முடி பஞ்சு போல இருக்கும் என்பாள். இவனும் அப்படியாய் ஒரு சில தடவை ஒரு சிலருக்கு அங்கிருந்து மண் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்திருக்கிறான்.

ஒரு தடவை அப்படி மண் எடுப்பதற்காகப்போன போது கரையின் ஓரம் மண் கிடைக்காமல் தண்ணீருக்குள் இறங்கி பிசுபிசுப்பான கொழகொழவென்ற மண்ணை தண்ணீருக்குள் இருந்து அள்ளி துண்டில் கட்டிக்கொண்டு முழங் காளவு அப்பியிருந்த கரிசல் மண்ணுடன் கரையேறி வந்த பொழுது தற்செய லாய்அந்தப்பக்கம் போன கிருணன்னன் இவன் கரையேறும் வரைகாத்திருந்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே கூடவே வந்தார்.

“ஊர் இருக்குற நிலையில இந்த மாதிரி அந்தி நேரத்துல ஒத்த சத்தையில வராத,இப்ப என்னகரிசமண்ண தேய்ச்சி குளிக்காட்டி குடியா முழுகிப் போகுது. ஆளுதாவளந்துருக்கயே தவிர இன்னும் வெளி ஒலக நிதானம் தெரியலையே, எங்கயும் எல்லா யெடத்துலயும் ஒரே மாதிரி இருக்காது புரிஞ்சிக்க.இப்ப நம்ம ஊருக்குள்ல நாலஞ்சி ஊரு இருக்கு புரிஞ்சிக்க.கொஞ்சம் சூதானமா இரு மண்ணள்ளவந்தேன்,,,,,,,,,,,,,,,,வந்தேன்னுபேசீட்டுத்திரியாதலூசுப்பயலே,அங்க பாத்தியா ஊரணிக்கரைக்கு அந்தப்பக்கம் ரெண்டு பேரு திரியிரத,இந்நேரம் நான்இங்க வரலையின்னா ஒருவேளை தண்ணியோட தண்ணியாபோயிருப்ப எனஅவர்சொன்னபிறகுதான்கவனிக்கிறான்.ஆமாம் உண்மையிலுமே ரெண்டு உருவங்கள் தெரிந்தன கரையின் அந்தப்பக்கமாய்/ அதைப்பார்த்த கணத்தில் மனதுதிக்கெனஆகிப்போனது.வாஸ்தவம் தானே, கிருஷ்ணன்னன் சொன்னது என நினைத்தவாறே தலையைக்குனிந்து கொண்டு நடந்தநாட்கள்நினைவுக்கு வந்தன.

மனம் நிறைந்த நினைவுகளுடன் தண்ணீருக்குள் குதிக்கிறான்.தலை துவட்ட கையில்துண்டுஇல்லை.பனியனைப்பிழிந்துஅரைகுறையாகவாவது துவட்டிக் கொள்ளலாம்.அல்லது இவன் கையிலிருந்த கர்ச்சிப்பே அரைத் துண்டு அளவி ற்காய் இருக்கிறது.

ராமநாதன் அண்ணன் இப்படித்தான் வைத்திருப்பார்.அவரது ஊர்பக்கமாய் ஒரு துஷ்டிவீட்டிற்குபோயிருந்த போதுதான் தெரிந்தது,அவர் மட்டுமல்ல அவரைப் போலவே பேண்ட் பாக்கெட்டில் பாதித்துண்டும் மீதித்துண்டு வெளி யிலுமாய் கர்ச்சிப் போலதொங்குகிறகாட்சியைப்பார்க்கலாம்.

சிலநேரம் பேண்ட் பாக்கெட்டின்னுள்ளாக சில வேளை வலது அல்லது இடது தோளில்தொங்கிக்கிடக்கும்.அந்தவகையில்இவன்வைத்திருக்கிறகர்ச்சீப் (துண்டு)பரவாயில்லைபோலிருக்கிறதுதான்,அவரிடம்கேட்டால்சொல்லுவார். இது மட்டுமில்லை இந்தா பாரு என தோள்பையினுள்ளாக இருக்கிற தண்ணீர் பாட்டிலின் அருகாமையாய் இருக்கிறதுண்டைஎ டுத்துக் காட்டுவார். இருக்க ட்டும்எதற்கும்எனவைத்துக்கொள்வதுதான்.எதற்காவதுஆகும்எனக்குஇல்லை யானால் கூட இதோ உன் கூட்டாளிகளுக்கு ஆகிப்போகும் பார் எனச் சிரிப்பார்.

அதாவதுப்பா என ஆரம்பித்தால் அவராட்டம் தண்ணீர் குடிக்காமல் பேசுவார், அவரது பேச்சில் கள்ளம் கபடம் இருக்காது,அதை விட பேச்சின் ஊடாய் அவர் சிரிக்கிறசிரிப்பிருக்கிறதே,அடேயப்பாகேட்கவும்காணவும்கோடிப்புண்ணியம்  செய்திருக்க வேண்டும்.

அவரது பேச்சுடனான துண்டும் ஞாபகத்திற்கு வர தண்ணீரில் குதித்தான், உட லும் மனதும்ஒரு சேர நனைந்துகுளித்து வருடங்கள் ஒரு சில ஆகிப் போயின.

காலையில் ஐந்தே முக்கால் அல்லது ஆறுமணிக்கு எழுந்ததுமாய் குடிக்கிற ஒரு ஸ்டார்ங் டீயுடன் சட்டையை போடுக்கொண்டோ அல்லது வெற்றுட ம்புடனோமல்லப்பனின்டீக்கடையில்போய்தான்நிற்பான்.அங்கும்ஒருஸ்டாரங்,  முடிந்தால் இன்னொன்று என அடுத்தத்ததாய் குடிப்பான்.

டீக்கடைக்காரர் கூட வைவார்.ஏண்டா இப்பிடிச்செய்யிற எப்பிடிச்சுத்தியும் வீட்ல ஒரு டீக்குடிச்சிருப்பயில்ல.அப்பறம் இங்க வந்து ஒரு டீ,சமயத்துல சேந்தாப்புல அடுத்தடுத்தாரெண்டு டீ க்குடிச்சிப்புடுற,ஒடம்பு என்னத்துக்கு ஆகும்ப்பா,,நீ எத்தன டீக்குடிச்சாலும் எனக்குத்தேவை காசுதானப்பா,இப்ப ஒண்ணும் தெரியாது,ஒடம்பு எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு மொத்தமா திருப்பிக்குடுக்கும்.அப்புறம் ஐய்யோன்னாலும் வராது,அம்மான்னாலும் வராது பாத்துக்க என்பார்.பதிலுக்கு சிரித்துக்கொள்வான் இவனும்/அந்த சிரிப்பிற்கும் பேச்சிற்கும் ஊடாக இரண்டு டீ கைமாறியிருக்கும் கடைக்காரரிடமிருந்து /கையில் வாங்கியதை வாயில் ஊற்றிவிட்டு காசு கொடுத்து முடிக்கிற மாயக்கணத்தில் வேறொரு லோகம்/

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுவாரஸ்யம்! நன்றி!

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/