31 Oct 2010

அந்திமம்

                                
       அவரை நாங்கள் அந்நியமாகப் பார்த்ததில்லை.தொந்திரவாகவும் உணர்ந்ததில்லை.
எழுபத்தைந்து வயது கடந்து விட்ட அந்த மூதாட்டியை பாட்டி என்றே அழைத்தோம்.அவரும் எங்கள் அனைவரையும் டேய் என்றுதான் அழைப்பார்.
    மாதா மாதம் எங்களது வங்கிக்கு வருவார். வட்டிப் பணம் எடுக்க.(மொத்தமாக போட்டிருந்த பணத்திலிருந்து மாதாமாதம் வட்டி எடுக்கிற மாதிரி ஏற்பாடு)
      முதுமையை எட்டி விட்ட போதிலும் அவரது உடலிலும்,மனதிலுமாய் ஒட்டிக் கொண்டிருந்த ஆரோக்கியம் எங்களை ஆச்சரியப் படவைத்ததுண்டு.
அந்த வயதிலும் தனது உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் சனாதன விதவைத் தாய்.இன்றளவும்  யாருடைய துணையும் அற்று தனியாளாய் இந்திய கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மூதாட்டிகளை போல இவரும்./
அவரை பார்க்கும் கணங்களில் தனியாளாய் வசிக்கும் எனது தாயின் ஞாபகம் வர மறப்பதில்லை.
அவர் வங்கிக்கு வரும் போதெல்லாம் சொல்லுவார்.”இப்பொழுதான் களை எடுத்து விட்டு வருகிறேன்” “ஆட்டுக் குட்டிக்கு  புல்லுப் புடுங்கப் போனேன்.” “வீட்டுலசமையல் வேலை இருந்துச்சிஎன./
விடுங்கடா,ஏந்துன்பம் என்னோட, பணத்தக் குடுங்கப்பா நான் போறேன், தலை போற வயசுல இந்த கெழவியப் பத்திப் பேச என்ன இருக்குடா என்பார்.        அவரது மகன் பெயரிலும்,மருமகள் பெயரிலுமாக வங்கியில் டெபாசிட் இருந்தது மாதந்திர வருவாய்த் திட்டத்தில்.
அதில் கிடைக்கும் வருவாயை மாதாமாதம் தனது தாய்க்கு தந்து விடுமாறு ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தார்கள் வங்கிக்கு./
அதன் படியே தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருந்தது இந்த ஏற்பாடு. பணம் எடுக்க வரும் அந்த மூதாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு உடனே போவதில்லை.
   “போடா,வாடா,இந்தக் கெழவிக்கு ஒங்க மத்தியானச் சாப்பாட்டக் குடுங்கடா”.......,,,,,,,,,,,, என்றெல்லாம் நிறையப் பேசிக் கொண்டு செல்வார்.    பெரும் பாலும் மதியநேரம்,அல்லது கணக்கு முடிக்கப்போகும் நேரமாகப் பார்த்துதான் அவர் வருவார்.
     அவரின் பேச்சு பெரும்பாலான நாட்களில்ஒங்க சாப்பாட்ட எடுத்து சாப்டுருவேன்டாஎன்பதாகத்தான் முடியும்.அல்லது அந்தப் புள்ளியில்தான் மையம் கொண்டு நிற்கும்.
ஒரு நாளானால் அவரது கையில் இருந்தடிபன் பாக்ஸைஎடுத்துக் கொண்டு விட்டேன்.மள,மளவென்று அழுதே விட்டார் பாவம்.
    இம்மாதிரியன நடைமுறைகள் இன்று, நேற்றல்ல நான் அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்த நாள் முதலாக இதுதான் நடைமுறையாக./   இப்படியான நடைமுறையின் ஊடாக ஒருநாள் அலுவலகத்திற்கு கணவன்,மனைவியுமாக இருவர் வருகிறார்கள்தோற்றத்தில், உடையில்,அலங்காரத்தில் பணக்காரத்தனம்.
     “டாடா சுமோவில்தான் வந்திருந்தார்கள்.மடிப்புக் கலையாத சூட்,கோட்,டை.சூ என கணவனும்,,,,,,, விலைஉயர்ந்த புடவைக் கட்டு,வாசனை செண்ட் ,பவுடர் பூச்சு,லிப்ஸ்டிக், நகை அலங்காரம் என மனைவியுமாய் ./         
      வந்தார்கள்,மேலாளரிடம் சென்றார்கள்,இரண்டு பேருடைய டெபாசிட் பத்திரங்களையும் காட்டி முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். இடையில் முடிப்பதால் வட்டி குறையும் என்றோம். பரவாயில்லை.பண்ணிக் கொடுங்கள் என்றார்கள்.
எல்லாம் முடிந்து பணம் வங்கிக் கொண்டு போகும் போதுதான் நான் கேட்டேன்.என்ன சார் திரும்ப பணம் எதுவும் போடுவீங்களா,இல்ல,,,,,,,, ?/ “இல்ல சார் நானும் ஏங் வொய்ப்பும் இதுவரை வெளிநாட்டுல இருந்தோம்.இப்ப இங்கயே செட்டில் ஆயிடலாம்னு ஒரு யோசனை.சின்னதா ஒரு பேக்ட்ரி வைக்கலாம்னு இந்த பணமெல்லாம் ட்ராப் பண்றேன்.மிச்சம் இருந்தா கொணாந்து போடுறான் கண்டிப்பா./ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
       சரியாக அவர்கள் போன அரைமணி கழித்து அந்தப் பாட்டியும் வந்து விட்டார். என்னப்பா வந்தாங்களா ஏங் மகனும்,மருமகளும்.?
     பாட்டியின் குரலில் சுதி குறைந்திருந்தது. தேகம் வாடி முகம் கறுத்துக் காணப் பட்டார்.திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையின் பரிதவிப்பு அந்த பாட்டியின் முகத்தில்.
     ஏங் பேர்ல இருக்குற கணக்க முடிச்சு குடுங்கடா,என அந்த பாட்டி நீட்டிய அவரது கணக்குப் புத்தகத்தில் 150 ரூபாய் இருந்தது
ஏதாவது இந்த அனாதக் கழுதைக்கு செலவுக்கு ஆயிட்டுப் போகட்டும்டா என கலங்கிய விழிகளுடன் நின்றார்.
     மகனும் மருமகளும் வந்தார்கள், பணம் கொடுத்தோம்.தாயாரும் வந்தார்கள் பணம் கொடுத்தோம்,இனி மேல் யார் வருவார்கள் அந்த தாய்க்கு பணம் போட?இனிமேல் அவர்  எங்கு போவார் மாதா மாதம் பணம் எடுக்க?
      அவரது வாழ்க்கையின் அன்றாட நகர்வுக்கான பொருளாதாரத்தை அவர் எங்கிருந்து ஈட்டுவார்?
   என்பது போன்ற நிறைந்து போன கேள்விகள் எங்களில் எழாமல் இல்லை.இப்படி விடை தெரியாத கேள்விகள் பல அந்த மூதாட்டியின் கண்ணீருக்குப் பின்னாலும், அவரைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் கண்ணீருக்குப் பின்னாலும்./


No comments: