7 Jul 2017

நிழல்களை காவு கொண்ட உருக்கள்,,,/

பரந்துபட்ட ஜன்னலின்நிழலை இவனது இடது உள்ளங்காலின்உருமறைத்துக் கொள்கிறது.உள்ளங்காலின் உருவை விட பரந்துபட்ட ஜன்னலின் உரு சற்றே பெரிதாகவும் அகலம் காட்டியுமாய்/

இருந்தபோதும்கூட கால் இருந்த தூரத்தையும் ஜன்னலின் நிழல் படர்ந்திருந்த தூரத்தையும் கணக்கில் கொள்ளும் பொழுது கொஞ்சமும் பிசகு படாமல் மறைப்பு தொடர்கிறதுதான்,கண் முன்னால் வைத்து விட்ட சின்னக்கல் போல/

கிராதி கம்பி வைத்த ஜன்னல் மேலும் கீழுமாய் இழுக்கப்பட்டகம்பிகளால் டிசைன் செய்து நெசவிடப்பட்டிருந்தது அது பார்க்க அழகாகவும் சிறியதா கவும் இருந்தது,

இன்னும் பெயிண்ட செய்யப்படவில்லை.ஜன்னலை வாங்குற பொழுது கம்பி களின் மீது பூசப்பட்டிருந்த ரெட் ஆக்ஸிட் பெயிண்ட் மட்டுமே கொண்டு காட்சிப்பட்டதாக/

இப்பொழுது மரம் விற்கிற விலையில் மரம் வாங்கி ஜன்னல் செய்வது கட்டுபடியாகாதென்றும் அப்படியாய் செய்வது தேவைஇல்லாததென்றும் கூறிய நண்பனின் பேச்சைக்கேட்டு கந்தன் மர டிப்போவில் வாங்கிய ரெடி மேட் ஜன்னல்தான் இது,

ஜன்னல் விற்ற கடையை விட ஜன்னலை வடிவமைத்தவர் பேசிய பேச்சு நன்றாக இருந்தது,எத்தனைக்கு எத்தனை அளவு கொண்ட ஜன்னல் இது,எந்த மரத்தால் செய்தது,நீங்கள் கட்டிய வீட்டில்ப்பொருத்தப்போகிற இடத்திற்கு இந்த ஜன்னலே போதுமா இல்லை இதை விட சற்றே அதிக விலை கொண்ட கொஞ்சம் நயமான மரத்தால் செய்த ஜன்னல் வேண்டுமா எனச்சொல்லி விடு வார்,

அவர் பேசிய பேச்சே ஜன்னலை வாங்க வைத்து விடுகிறது,அல்லது வாங்கு கிற முடிவிற்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

ஜன்னலை வாங்கப்போன அன்று இரு சக்கர வாகனத்தை பாய் சைக்கிள் கடையோரமாய்தான் நிறுத்தியிருந்தான்.ஜன்னலை வாங்கி விட்டு திரும்பி வரும்போது எதிர் வரிசையில் பாய் கடைக்கு எதிர் வரிசயில் இருந்த ரேஷன் கடையில் சீனி மண்ணெண்னை வாங்க கூட்டம் வரிசையாய் வால் பிடித்து நின்றிருந்தார்கள்,

அன்று மதியமே அரிசியும் போடப்போகிறார்கள் எனப்பேசிக்கொண்டார்கள். புதிதாகவந்தஆபீசர்கொடுத்தஆலோசனைதானாம்.முடிந்தால் உணவுப் பொரு ளை யும் எரி பொருளையும் ஒரே நாளில் வழங்குங்கள்,

நமக்காவது உத்திரவாதப் பட்ட ஒரு வாழ்க்கை இருக்கிறது,ரேஷனில் சாமான் வாங்க வருகிறவர்களில் பாதி பேருக்கும் மேலே அந்த உத்திரவாதம் கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள்.அவர்களுக்கு உதவுவது நாம் செய்த புண்ணியம்/

ஆகவே ரேஷன் வாங்க வருகிற அவர்கள் எரிச்சல் படுத்தினால் கூட கோபப் படாமல் பணியாற்றுங்கள் என சொல்லிவிட்டு விட்டார்.

அவரது சொல்லையே தேவவாக்காக ஏற்று செயல்படுகிற ரேஷன் கடை ஊழியர்களை அந்தக்கடைக்கு வருகிற மக்கள் தூக்கி வைத்து கொண்டாத குறையாகத் தான் வைத்திருந்தார்கள்,.

என்னதம்பி,,,,,,எண்ணெண்னே,என்னங்கய்யா,வாங்க சார்,என்கிற சொல்லாக்க மும் மாரியாதையும்தான் அங்கு ஓடியது.அது தவிர்த்து வேறில்லை.

அந்தக்கடைக்கு ரேஷன் பொருட்கள் இறக்க லாரி வந்து விட்டால் ரேஷன் கடைக்கு எதிர்த்தாற்போல் இருக்கிற பாய் சைக்கிள் கடைக்காரர்களும் அங்கு வந்து போகிறவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

அவ்வளவு இடைஞ்சலான இடத்தில் லாரி வந்து திரும்பி அதன் பின் பக்கம் காட்டி லோடு இறக்கத்தோதாய் நிற்க வைப்பதற்குள்ளாய் போதும் போதும் என ஆகிப்போகும்,

லாரியை நேராக க்கொண்டு வந்து நிறுத்தி ரிவர்ஸ் எடுக்கும் போது மிகச் சரி யாக சைக்கிள் கடை வாசலில் வந்து முட்டும் லாரி,இல்லையெனில் முட்டு வது போல் வரும்,சமயத்தில் சைக்கிள் கடையின் முன் பகுதியில் கொஞ்ச மாய் ஏறித்தான் இறங்க வேண்டி இருக்கும்.

அது பற்றி சைக்கிள் கடை பாயோ லாரி டிரைவரோ கவலைப்பட்டதில்லை. பாயிடம் கேட்டால் வாஸ்தவம்தான் இது கரணம் தப்புனா மரணம்ங்குற யேவாரந்தான்,இருந்தாலும்ஒரு ஐந்நூறு பேரு சாப்புடறதுக்கு பொருள் வருது, அத நம்ம நொட்ட சொல்லி வம்பிழுத்தமாதிரி ஆகிறக்கூடாது,அதான் என்பார்/

பக்கத்து சலூன் கடைக்காரர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பவ ராக இருந்து கொண்டிருப்பவர் பாய் சொன்ன அதே சொல்தான் என்னதும், வேறு பெரிதாக ஒன்றுமில்லை என்பார்.

பாயிடம் புதிதாக சைக்கிள் மாட்டிய ஒரு நாளில் அவர்தான் சொன்னார்,சார் சைக்கிள் மாட்டிறது என்னவோ பையனுக்குத்தான்னாலும் கூட இப்பதைக்கு சைக்கிள் ஒங்களுத்தான் தேவை ,ஏன்னா ஒக்காந்துக்கிட்டே இருக்கீங்க,வயசு ஐமதுக்கு மேல ஆகிப்போச்சி.

எனக்கெல்லாம்அம்பத்திரெண்டுமுடிஞ்சிஐம்பத்திமூணுஅடியெடுத்துவைக்கிது, நான் நின்னுக்கிட்டே தொழில்ப்பண்ணுற ஆளுதான்னாலும் கூட எனக்கு இப்ப கொஞ்சம் யோசனையா இருக்கு பெருத்துப்போன ஒடம்பப் பாத்து.நான் இதோ சைக்கிள்லதான் போயிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கேன் என்பார்.

வாஸ்தவம்தான்அவர் சொல்வதும் இனிமேல் தினம் பத்து கிலோ மீட்டர் தூர மாவது சைக்கிள் ஓட்ட வேண்டும் என முடிவெடுத்தவனாக வந்தவந்தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட சைக்கிளை தொடக்கூட இல்லை.

மித மிஞ்சிய சோம்பேறித்தனமும் ,மன அலுப்பும் பிறகு பார்த்துக் கொள்ள லாம் என்கிற தள்ளிப்போடலும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.

வீட்டை ரீமாடல் செய்து கட்ட வேண்டும் எனச் சொன்னபோது அல்லது அதற் கான வித்தை மனதில் ஊனிய போது மனைவி சொன்னாள், ”செய்யப் போற வேலையோட வேலையா சேத்து அடுப் படியமாத்திக் குடுத்துருங்க,

”இப்ப இருக்கிறயெடத்துல இருந்துக்கிட்டு என்னால நிம்மதியா ஒரு வேலை கூடசெய்ய முடியல,சேந்தாப்புல அரை மணி நேரம் அடுப்படியல நின்னு வேலை செய்ய முடியல, உக்காந்து காய்கறி நறுக்க முடியல, மிக்ஸியில ஒரு சட்னி வச்சி அரைக்க முடியல,ஒரு தோசை சுட முடியல, இட்லி அவி ச்சி எடுக்க முடியல.நின்னு சோறு வைக்க முடியல,வேக்காடா வேர்த்து ஊத்துது. ஒடம்பு.வேலைசெய்யவேஎரிச்சலாப்போகுது,ஏங்ஒடம்பேஎனக்கு அந்நியமாத் தெரியுது,இதுபோலானபொழுதுகள்ல,,,எரிச்சலாவும்கோபமாவும்போகுது,தவிர இப்பிடியேவேக்காட்டுலவெந்துட்டுக்கெடக்குறதுனாலஏதாவதுஒன்னுஒடம்புல வந்து தொந்தரவுங்குற பேர்ல ஒட்டிக்கிருது.

”சமயத்துல பேசாம சமையக்கட்ட வுட்டு ஓடிறலாமான்னு தோணிப்போகுது, அப்பிடிப் போனா எத்தனைக்கு கோவிச்சிக்கிட்டு எங்க போயி நிக்கிறது,நான் மட்டுமா பொம்பளைங்கள்ல பாதிப்பேருக்கு மேல எல்லாரும் அடக்கி வச்சி ருக்குற கோவத்தையும் வேகாலத்தையும் மனசுல வைச்சிக்கிட்டு எங்கிட்டா வது பேறதுன்னா இந்நேரம் கோவிச்சிட்டுப் போயி தெசை தெரியாமயில்ல நின்னுக்கிட்டு கெடந்திருக்கணும்,

“அதெல்லாம் இல்லாம அடுப்படியே கதின்னு கெடக்கமே அதுலயிருந்தே தெரியலையா,நாங்க மீறமாட்டாத ஆளுன்னு/

“நான் பொறந்த வீட்டுலயும் அடுப்படி இருந்துச்சி ,அது விறகு அடுப்புதான், இந்த மாதிரி ரூமு ரூமா பிரிச்சு வைச்ச வீடெல்லாம் கெடையாது,ஒரே ஹால்தான்,அதுலதான் அடுப்படி படுக்க ரூமுன்னு கண்ணாலேயே அளவெ டுத்தது போல நாங்களே பிரிச்சி கட்டி வச்சிருந்தாங்க,

அப்பிடி பிரிச்சி வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருந்துச்சி. இல்லை ன்னா வீடு வீடா இருக்காது,ஒரு சத்திரம் போலத்தான் இருக்கும்,மடக்கி வைக்கப்பட்டஒரு ஹால்ல ஒருபக்கம் அடுப்படி,அதுல இருந்து நீண்டு வந்தது போல அடுப்படி இருக்குற வரிசையிலயே தண்ணி வைக்குற யெடம். அடுப் படிக்கும்தண்ணிக்கொடம் வைக்கிற பட்டியக்கல்லுக்கும்ஊடால மடக்குப் போ ட்டு ஒரு யெடம்,

“என்னதான் மண் அடுப்பா இருந்தாக்கூட வெறகு வைச்சி எறிக்கிறதுக்குத் தோதா அமைப்பா நல்லா இருக்கும் பாத்துக்கங்க, அடுப்படி, பொங்கி வைச்ச சோறு கொழம்பு சட்டிகள யெறக்குறதுக்கு அந்தமடக்கு,அத ஒட்டி தண்ணிக் கொடம் வைக்கிற பட்டியக்கல்லுன்னு அமைப்பா இருக்கும்,

சமைக்கிறவுங்களுக்கும்அடுப்படியிலமத்த மத்த வேலை பாக்குறவுங்களுக் கும் ஈஸியா இருக்கும்,

“அந்த ஈஸியும் அமைப்பும் இப்பம் லட்சக்கணக்குல போட்டுக்கட்டுன வீட்ல இல்ல,அந்த சௌகரியமும் காத்தோட்டமும் கூட இல்ல,என்னதான் கேஸ் அடுப்பு,குக்கரு,மிக்ஸி கிரைண்டருன்னு இன்னும் இன்னுமான சௌகரியா மானபலதுவந்துட்டப்பக்கூடவும்அந்த மண் அடுப்புல ஈயச்சட்டியில சமைச்சி சாப்புட்டப்ப இருந்த சௌகரியம் இப்பம் இல்ல,

“ஆமாம் சரி அதெல்லாம் எதுக்கு இப்பம் போயி ஒங்களுக்கு ஞாபகப்படுத்துன மாதிரி படுத்திக்கிட்டு, ஊருலதான் ஒங்க வீடு எங்க வீட்ல இருந்து நாலாவது வீடுதான,என்னத்தையாவது சாக்கு வச்சி மூச்சிக்கு முன்னூறுதரமும்,ஒரு நாளைக்கு நூத்திப்பத்து தடவைக்கு மேலயுமா எங்க வீட்டுக்கு வந்துருவீங்க;

“என்னைய பாக்கணும்ன்னு சாக்கு வச்சித்தான் நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சி போச்சி,எங்க வீட்ல எல்லாருக்கும்.சரித்தான் நல்லபையன் இவனுக்கு நம்ம பொண்ணு வாக்கபட்டா நல்லாயிருப்பான்னு நம்பி அவுங்களும் அனுமதிச் சாங்க,நீங்களூம் அத்தன தடவை வந்தாலும் நீங்களா போட்டுக்கிட்ட ஒரு எல்லைக் கோட்ட தாண்டாத ஒரு ஆளா ஒங்கள் பாவிச்சிக்கீட்ங்க,

“அதமீறிஎன்னையப் பாக்கனும்ன்னு ஆசைப்பட்டாக்கூட கண்ணோட கண்ணா ஒரு பார்வை, அவ்வளவுதான்.அந்த பார்வை கனிஞ்சி நீங்க என்னய கை பிடிச்சப்ப நம்ம ரெண்டு பேருக்கும் மனம் கனிஞ்சி போன மாதிரி மத்த யாருக்கும் நடந்துருக்குமாங் குறது சந்தேகமே/

”அப்பம் வாடகை வீட்ல யெறநூத்தி சொச்சத்துக்கு ஆரம்பிச்ச வாழ்க்கை தோளுக்கு மேலரெண்டு புள்ளைங்க வளந்து நிக்கிற இப்பக்கூட சொந்த வீட்ல தொடருது சந்தோஷமா,

“அந்த சந்தோஷம் நெலைக்கணும் மொதல்ல, எத்தன யெடர் பாடு வந்தாலும் ன்னு சொல்லிக்கிர்றேன்”எனச்சொல்லி ஆரம்பித்த பேச்சை இடைமறித்தவ னாகவும்கவனத்தைதிசைதிருப்பியவனாகவும்சமையலறையைகவனிப்பவ
னாய் அவதாரம் கொள்கிறான்,

டாணாப்பட மடக்கிப் போடப்பட்டிருந்த கடப்பக்கல் மேடை கறுப்பாக உருவம் காட்டி கால் நீட்டி படுத்திருக்கிறது, அதன் மீது மேடையின் நடு நாயகமாய் அமர்ந்திருக்கிற கேஸ் ஸ்டவ்,அதன் இடது புறமாக வைக்கப்பட்டிருந்த மிக்ஸியும் கிரைண்டரும்,வலது புறமாய் வரிசை காட்டி அமர்ந்திருந்த தண் ணீர் குடங்கள் மூன்று, அது போக தண்ணீர் குடங்கள் வரிசை காட்டி நின்றி ருந்த இடத்தை விட்டு சற்று தள்ளி சாப்பாட்டுத்தட்டுகள் மற்றும் கரண்டிகள் வைத்திருந்த சில்வர் ஸ்டாண்ட் அதை ஒட்டி இருந்த சிங்க் மற்றும் இதர இதரவையாய் அடையாளம் சுமந்து கொண்டிருந்த சமையலறையை மாற்ற இவனுக்கு இஷ்டம் இல்லை என்ற போதிலும் மனைவியின் விடாப்பிடியான பிடிவாதமும்,இரைந்து பட்ட இரைஞ்சலும் இவனை சம்மதம் சொல்ல வைத் தது.

இவனுக்கானால்ஒரேபிடிவாதம்கிழக்குப்பக்கமாய்பார்த்துஇருக்கிறஜன்னலை திறந்தால் வருகிற சூரிய வெளிச்சம் சமையலறையில் பட்டால் உடலுக்கு நல்லதுஎன நினைத்தான்.

அதை மனைவியிடம் சொன்ன போது ரொம்ப ஈஸி,என்ன இப்பொழுது புதிதாக கட்ட இருக்கிற சமையறையில் கிழக்குப்பக்கமாய் பார்த்து ஜன்னல் வைத்து விட்டால் முடிந்து போகிறதுவிஷயம் என்றாள்,

சரிதான் அதுவும் என கட்டி முடித்த சமையலறை டைல்ஸ்கள் மீதுதான் ஜன்னலின் வெளிச்சம் விழுந்திருந்தது பரவியும் படர்ந்துமாய்/

பார்க்க ஆடம்பரமாக இல்லாமல் மிகவும் எளிமையாக இல்லாமலும் நடு வாந்திரமாய் இருந்த டைல்ஸ்கள் கண்ணுக்கு லட்சணம் காட்டியே/

நந்து அண்ட்கோவில் டைல்ஸ்கள் வாங்கிய போது டாக்டர் அண்ணனையும் சீனியையும் சொல்ல வேண்டி வந்தது, இருவ ரையும் சொன்னதும் கடைக் காரர்கள் கொஞ்சம் ஒட்டுதலான மாதிரி உணர்ந் தான்.

சொன்ன விலையிலிருந்து படக்கென இறங்கி வந்தார்கள்,இதற்காகவா மது ரை போக நினைத்தோம்,வீட்டை ரீ மாடல் பண்ண வேண்டும் என நினைத்த போது இப்பொழுது புதிதாக வீடு கட்டுறவர்கள் எல்லோரும் போடுகிற மாதிரி பேசாமல் கிராணைட் போட்டு விடலாமா என நினைத்தான்.

மனைவியும்அதையேமுன்மொழிந்தாள்,ஆனால் பணம்தான்,,,,,,,,,?கொஞ்சம் கேள்விக் குறி தாங்கி நின்றது.அதை உடைக்க எப்பொழுதும்தான் இருக்கிறதே மனைவியின் நகைகள்,

எல்லோர் வீட்டிலும் எல்லோருக்கும் ஈஸியாய்ப் போவதும், கைவரப் பெறு வதும் அதுதான்.

மனைவியின் நகைகளை கொண்டு போய் பேங்கில் வைத்து விடுவது, இவனு க்கும்அதுதான் கை கொடுத்தது ,கையிலிருந்த பணம் பாதி வேலைவரை கை கொடுத்தது,

இவனும் மனைவியும் போட்ட கணக்கு இந்த விஷயத்தில் தப்பாகிப் போனது, கையிலிருக்கிறரூபாயைவைத்து மொத்த வேலையையும் முடித்து விடலாம், அப்படியே காணாமல் போனாலும் கொஞ்சம் மட்டுமே கையைப் பிடிக்கும், அந் நேரம் பார்த்துக் கொள்ளலாம்.என்கிற தைரியம் கொண்டும் தாங்கியும்தான் ஆரம்பித்தான் வேலைகளை,

அதுஇப்பொழுதுபேங்கில்நகைகளை கொண்டு வைக்கிறது வரை கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது,டைல்ஸ் கடையில் போய் நின்ற போது டைல்ஸ் எடுத்துக்காட்டியவர்தான் சொன்னார்,

“சார் கிச்சனுக்கான டைல்ஸ்தான,,,,,ஐ திங்,,,என ஆரம்பித்தார் பேச்சை,அவரது பேச்சை இடை மறித்தவனாக இவன் சார்,சார் அதெல்லாம் வேணாம் விடுங்க நான் சாதாரணமான் ஆளு நீங்க எப்பிடின்னு தெரியாது எனக்கு,

பேச்சு பழக்க வழக்கத்தில் இருக் கிற ரிச்னெஸ் வேணாம்.சும்மா சாதாரணமா வே பேசுங்க போதும் என்றவுடன் அவர் இவன் எதிர்பார்த்ததை விட மிகவும் சாதாரணமாக ஆரம்பித்து விட்டார்,

சார் அது வேற ஒண்ணும் இல்ல,பொழப்புக்காக எதையோ தின்ன கணக்குத் தான்.விடுங்க எங்க பாடு எங்களோட,பழக்கிப்போச்சி எங்களுக்கு,இப்ப ஒங்க ளுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க,என ஆடம்பரமற்ற பேச்சில் ஆரம்பி த்து டைல்ஸ் வாங்கியதிலிருந்து பில் போட்டு ஆட்டோவில் ஏற்றும் வரை கூடவே இருந்து நன்றி சொல்லி அனுப்பினார்,

எதற்கு நன்றி எனக்கேட்டதற்கு ஆமாம் நீங்கள் என்னை சாதாரணமாய் இருக்க இன்றிலிருந்துகற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.அப்படி இருத்தலால் மனித மனங் களில்நிறைந்து நிற்கவும் நுழைந்து நிறையவுமாய் இருக்கலாம் என்கிற நிஜத்தை ஆழமாய் என்னில் ஊன்றி விட்டீர்கள் பைசா செலவில்லாமல், அதற்குத்தான் நன்றி எனச்சொன்ன அவரை வாஞ்சையுடன் ஏறிட்டுப் பார்த்து விட்டு வந்தான் டைல்ஸ் ஏற்றிய ஆட்டோவில் டைல்ஸ்ஸோடு டைல்ஸாக/

டைல்ஸை அவன் சொன்ன இடத்தில்வாங்கவில்லை என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்த டைல்ஸ் ஒட்டுபவனிடம் சமாதானம் பேசி அவன் மனம் நீவி விட்டு அவனை ஒட்டச்செய்து விட்டு அன்று கிடைத்த நிம்மதி இப்பொழுது கால் நிழலை அண்ணாந்துபார்க்கும்போது கிடைக்கிறது.

வலது காலின் மீது இடது காலைப் போட்டுப்படுத்திருந்தான்,அது வலிக்கும் போதும் சலித்துப்போகும் போதும் இடது காலின் மீது வலது கால்,

கொஞ்சகாலமாகவேஇடது மற்றும் வலது கால்களின் அடிப்பாதம் வலிக்கிறது ஏனென்ற காரணத்தை சொல்லாமலேயே,/

பெரிதாக ஒன்றுமில்லை,நரம்பு தொடர்பான பிரச்சனைதான் சரியாகிப்போகும் என நூறு ரூபாய்க்கு மாத்திரைகள் கொடுத்தார்,

மாத்திரை வாங்கி வந்த இரவு எல்லோரும் தூங்கிப்போன இரவில் கால்மேல் கால்போட்டு படுத்திருந்த இவனது உள்ளங்காலின் உரு பரந்து பட்டுப் படர் ந்திருந்த ஜன்னலின் நிழலை மறைக்கிறதாய்/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றுக் கொண்ட பாடம் அருமை...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
பரஸ்பரம் கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும்
நல்ல விஷயம்தானே,
மனித சமூகம் உள்ளவரையும் தொடரும்
விஷயமும் கூட/

மீரா செல்வக்குமார் said...

மிக நீண்டு இருக்கிறது தோழர்..கொஞ்சம் சுருக்கினால் நறுக்கென இருக்கும்..
வாழ்த்துகள்

vimalanperali said...

வணக்கம் மீரா செல்வகுமார் சார்.
நன்றி்யும் அன்புமாய்/