24 Sept 2010

கூட்டுவண்டி

எனது வலது ஓர மேல்
சொத்தைப் பல்லை பிடுங்கிய
டாக்டர் ஜான் ராஜநாயகம்
சாலை விபத்தில் இறந்து போகிறார்.
இன்றைக்கெல்லாம்
நாற்பதைத் தாண்டாத வயது.
மனைவியும் இரண்டு பிள்ளைகளும்.
நகரின் மிக நெரிசலான
அக்ரஹாரம் தெருவில்தான்
அவரது ஆஸ்ப்பத்திரி இருந்தது.
புராதான காலத்திற்கு
ஒப்பாய் சொல்லத் தோன்றும் கட்டிடத்தில்
முன்புறம் கிளினிக்கும் பின்புறம் வீடுமாய்.
பல் பிடுங்க வாய் திறக்கும் நேரம்
வரும் குக்கர் விசில் சப்தமும்
பல்பிடுங்கியபின் வரும்
குழம்பு தாளிக்கும் வாசனையும்
அவ்விட்த்தின் இனிய முரணை அறிவிக்கும்.
நகரெங்கும் பல்மருத்துவர்கள்
பலர் இருந்த போதும்
ஆத்திர அவசரத்திற்க்கு கடன் சொல்லியும்,
சொன்ன கட்டணத்தை விட
குறைத்துத் தரும் வசதியும்
அவரிடமே இருந்தது எனக்கு.
மலையாளம் கலந்த தமிழில்
பற்கள் பற்றியும், அதன் பராமரிப்புபற்றியும்
மக்களிடம் இல்லாமலிருக்கும்
விழிப்புணர்வு பற்றியுமாய்
மணிக்கணக்கில் பேசுவார்.
எங்களது பேச்சின் ஊடே வந்து போகும்
அவரது மனைவியும்
அவரது எண்ணத்தை பிரதிபலிப்பாள்.
பல சமயங்களில்
அவ்ரது பேச்சின் ஆரம்பம் அவளின்
துணைகொண்டே ஊற்றெடுத்துவிரியும்.
இருவருமாய் இலக்கியம்,சினிமா,அரசியல்
என பேசும் நேரம்
நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.
நான் கேட்கும்வினாக்களுக்கு
அவர்களது பதில்
மத்தப்பூவாய் சிரிக்கும்.
நோயாளிகள் அதிகமில்லாத
நாட்களில் நீண்டு முடிந்த
எங்களது பேச்சுடனும்
எங்களுள் நீடித்த உறவுடனுமாய் .........................
அவரின்இறப்பை
பதிவு செய்துவிட்டுப்போன
நாட்களின் நகர்வுகள்
இனி அதுமாதிரியான
குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைக்குமா?
என்பது தெரியவில்லை.

No comments: